தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் ஓவியம் நாசாவின் 2019 காலண்டருக்கு தேர்வு!
என்.தேன்முகிலன் ’விண்வெளி உணவு’ என்கிற தலைப்பை மையமாகக் கொண்டு வரைந்த ஓவியம் நாசாவின் 2019 காலண்டரின் நவம்பர் பக்கத்தில் பயன்படுத்தப்படும்.
நாசாவின் புதிய சர்வதேச வணிகக் குழு காலண்டருக்காக மில்லியன் கணக்கானோர் விண்ணப்பித்தனர். ஆனால் பழனியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் வரைந்த ஓவியம் 2019-ம் ஆண்டு பதிப்பின் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 12 வயது நிரம்பிய என். தேன்முகிலன் ’விண்வெளி உணவு’ என்கிற தலைப்பை மையமாகக் கொண்டு ஓவியம் தீட்டியுள்ளார்.
இவர் பழனியில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி மாணவர். மற்ற 11 பேருடன் சேர்த்து அமெரிக்க விண்வெளி ஏஜென்சி இவரை தேர்வு செய்துள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயது தீப்ஷிகா மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 10 வயது இந்திரயுத் மற்றும் 8 வயது ஸ்ரீஹன் போன்றோரின் கலைப்படைப்புகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேன்முகிலனின் பெற்றோர்களில் ஒருவர் ஆசிரியர் மற்றவர் தலைமை ஆசிரியர். தேன்முகிலன் விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் பழங்களும் காய்கறிகளும் பயிரிடுவது போன்ற ஓவியத்தை வரைந்திருந்தார். விண்வெளி வீரர்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற அவர்கள் விண்வெளியில் காய்கறிகளையும் பழங்களையும் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஓவியம் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இவருக்கு இந்த எண்ணம் தோன்றுவதற்குக் காரணம் இவரது பள்ளியில் உள்ள ’இமேஜ் மைண்ட்ஸ்’ என்கிற க்ளப். இதற்கு பேப்பரில் வடிவம் கொடுக்க அவருக்கு இரண்டு நாட்கள் ஆனது. தேன்முகிலன் இந்தப் பள்ளியில் இருந்து நாசாவின் வருடாந்திர காலண்டருக்கு தேர்வான இரண்டாவது மாணவர் ஆவார்.
தேன்முகிலனுக்கு வண்ணங்கள் மீதான ஆர்வம் ஆறு வயதிலேயே துவங்கிவிட்டது. அந்த நாட்களில் ஓவியம் வரைவதற்கும் வண்ணம் தீட்டுவதற்கும் மணிக்கணக்கில் நேரம் செலவிடுவார்.
அவரது ஓவியம் குறித்து ’தி இந்து’-விடம் அவர் தெரிவிக்கையில்,
“நான் தக்காளி, பூசணிக்காய், சுரைக்காய், சோளம், வெங்காயம், அன்னாசிப்பழம், நெல் போன்றவற்றை வரைந்தேன். விண்வெளி வீரர்களுக்கு போதிய ஊட்டச்சத்து இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்பதை வலியுறுத்தவே இவ்வாறு வரைந்தேன். இது அவர்களுக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்,” என்றார்.
டிசம்பர் 19-ம் தேதி நாசா காலண்டரை வெளியிட்டது. தேன்முகிலனின் ஓவியம் நவம்பர் மாதத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என Swarajyamag தெரிவிக்கிறது. இந்த காலண்டரின் பிரதிகள் விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அனுப்பப்படும்.
நாசாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி,
“நம் இளைஞர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் வருங்கால விஞ்ஞானிகள், பொறியாளர்கள், ஆய்வாளர்கள் போன்றோருக்கு உந்துதலளிக்கும் வகையிலும் இந்த கலைப்படைப்புகளின் போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுரை : THINK CHANGE INDIA