புதிய அழகுச் சாதனப் பொருட்கள் பிசினஸில் கால் பதித்த நயன்தாரா!
தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா முதன் முறையாக அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் அடி எடுத்து வைத்துள்ளார்.
திரையுலகின் பிசி நடிகையான நயன்தாரா முதன் முறையாக ழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் அடி எடுத்து வைத்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா:
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா. தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் என டாப் ஹீரோக்கள் அனைவருடனுமே நயன்தாரா இணைந்து நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தது, கோடிகளில் சம்பளம் வாங்கினால் மட்டும் போதாது என, ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘ஐரா’, ‘டோரா’, ‘மூக்குத்தி அம்மன்’ என கதாநாயகிகளை கதையின் நாயகிகளாக காட்டும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்துவருகிறார்.
தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன், சமீபத்தில் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அட்லி இயக்கி வரும் படமொன்றில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. திரையுலகில் வெறும் நடிகையாக மட்டும் நின்றுவிடாமல், தன்னுடைய காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
டீக்கடையில் முதலீடு செய்த நயன்தாரா:
சினிமாவில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகையான நயன்தாரா, தான் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு பிசினஸ்களில் முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே நயன்தாரா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன், பிரபல டீ டையான சாய்வாலா நிறுவனத்தில் 5 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளார்.
சாய்வாலா நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக சுனில் சேத்தியா, சுனில் குமார் சிங்க்வி, மனிஷ் மார்டியா மற்றும் யுனி-எம் நெட்வொர்க், மும்பையை சேர்ந்த ஏஞ்சல் நெட்வொர்க் முதலீட்டாளர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்தனர்.
அழகு சாதன துறையில் நுழையும் நயன்தாரா:
நடிகை நயன்தாரா தற்போது புதிதாக மற்றொரு பிசினஸையும் ஆரம்பித்துள்ளார். பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா முதன்முறையாக தனித்துவமான அழகுச் சாதன பொருட்கள் தயாரிப்பில் கால் பதித்துள்ளார்.
இதற்காக ‘தி லிப் பாம் கம்பெனி’ எனும் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார் நயன்தாரா. உலகிலேயே மிகப்பெரிய லிப் பாம் தயாரிப்பு நிறுவனமான இது, நூற்றுக்கணக்கான வகைகளில் லிம் பாம்களை மட்டுமே தயாரிக்கும் தலைசிறந்த நிறுவனமான வலம் வருகிறது.
முன்னணி தோல் மருத்துவரான டாக்டர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் இணைந்து நயன்தாரா தனது பிரத்யேக சருமப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். முதன் முறையாக அழகுச் சாதனத் துறையில் கால் பதித்தது குறித்து நயன்தாரா கூறுகையில்,
“இது என்னுடைய சுகாதாரம் மற்றும் எனது வாங்கும் பழக்கத்துடன் தொடர்புடையது. எனது சொந்த சருமப் பராமரிப்புப் பொருட்களில் மிகச்சிறப்பான செயல்திறன், உயர் பாதுகாப்பு அம்சங்களையே நான் மிக முக்கிய அம்சமாக கருதுவேன். அந்த இரு அம்சங்களும் இந்த லிப் பாம் கம்பெனி பொருட்களில் கண்டிப்பாக இடம்பெறும்,” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தனது புதிய லிப் பாம் நிறுவன பொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக விதவிதமான லிப் பாம் அணிந்தபடி மாடர்ன் உடையில் நயன்தாரா போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. நயன்தாரா ஆரம்பித்துள்ள இந்த புதிய பிசினஸுக்கு திரைப்பிரலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகையான கத்ரீனா ஃகைப் தனது சொந்த அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதன் விளம்பரப் படத்திலும் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போதிலிருந்தே நயன்தாரா தனது சொந்த அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும், தற்போது அதில் வெற்றி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.