NEET2019: சூப்பர் மதிப்பெண்கள் பெற்று அசத்திய தையல் தொழிலாளி மகளும், அரிசிக் கடைக்காரர் மகனும்!
நீட் தேர்வில் பணம் இருந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்ற பிம்பத்தை உடைத்து, ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தங்களது தீவிர முயற்சியால் வெற்றி பெற்று சாதித்துக் காட்டியுள்ளனர் சென்னையைச் சேர்ந்த ஜீவிதாவும், நவீன்ராஜாவும்.
2019-2020-ஆம் கல்வியாண்டு மருத்துவp படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 5-ஆம் தேதி, ஒரேகட்டமாக நாடுமுழுவதும் 154 நகரங்களில் நடத்தப்பட்டது. சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்ட இத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
இம்முறை சரியாக 7,97,042 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது தேசிய அளவில் தேர்ச்சி 56.50 சதவீதம் ஆகும். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேரில், 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 48.57 சதவீதம் ஆகும்.
தையல் தொழிலாளி மகள்:
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்த தையல் தொழிலாளி பன்னீர்செல்வம் (42). இவரது மகள் ஜீவிதா, அதே பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆவார். இவர் கடந்த 2015ம் ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்களும், பிளஸ் 2வில் 1,161 மதிப்பெண்களும் பெற்றார்.
2019-20ம் ஆண்டுக்கான நீட் தேர்வை கடந்த மாதம் எழுதினார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தேர்வு முடிவில், அவர் 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண் எடுத்துள்ளார். கடந்த முறையும் அவர் நீட் தேர்வு எழுதினார். அப்போது அவருக்கு 361 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது.
வறுமை தனது கனவைத் தின்று விடாதபடி, தீவிரமாக படித்ததால் இம்முறை வெற்றி வசமாகி இருப்பதாக ஜீவிதா கூறுகிறார். இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,
“எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. எங்கள் அப்பா ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். அதில், வரும் வருமானத்தில் தான் என்னை படிக்க வைத்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால் மருத்துவராக முடியுமா? என பல நாட்கள் நினைத்துள்ளேன். என் அப்பா, அம்மா மற்றும் ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். இதன் விளைவாக நான் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளேன். மருத்துவராகி ஏழை, எளியோருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோள்,” எனத் தெரிவித்துள்ளார்.
கூடவே, நீட் தேர்வில் தோல்வி அடைந்த சிலர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ளார். ‘நீட் தேர்வில் தோல்வி அடைந்ததற்காக தற்கொலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது,’ என அவர் கூறியுள்ளார்.
ஜீவிதாவின் இந்த வெற்றியால் அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘என் மகள் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறாரோ அதை படிக்க வைக்க தயாராக உள்ளோம். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியை தந்துள்ளது’ என அவரது தாயார் பவானி தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜீவிதா நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அளவுக்கு அவரது பெற்றோரால் செலவு செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. காரணம் ஜீவிதாவின் தந்தை தையல் தொழிலாளி என்பதால் அவரது வருமானம் குடும்பச் செலவுகளுக்கே சரியாக இருக்கிறது. ஜீவிதாவின் மூத்த சகோதரி பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். இளைய சகோதரி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழ்நிலையால் ஜீவிதாவின் மருத்துவக் கனவு சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக அறிந்த, தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மாணவி ஜீவிதாவைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல்,அவரின் மருத்துவப் படிப்புக் கட்டணச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரிசி கடை தொழிலாளியின் மகன் :
ஜீவிதாவைப் போல், நீட் தேர்வில் சென்னையைச் சேர்ந்த மாணவர் எம்.நவீன்ராஜாவும் சாதனை படைத்து இருக்கிறார். சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாணவரான எம்.நவீன்ராஜா, நீட் தேர்வில் 720க்கு 568 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அகில இந்திய அளவில் 16 ஆயிரத்து 933-வது இடத்தை அவர் பிடித்திருக்கிறார்.
நவீன் ராஜாவின் தந்தை மணிமாறன், அரிசிக் கடையில் வேலை பார்க்கிறார். கடந்தாண்டும் நவீன் நீட் எழுதினார். அப்போது, அவருக்கு 300 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. விடாமுயற்சியுடன் மீண்டும் படித்து இம்முறை தனது கனவை நினைவாக்கியுள்ளார் நவீன்.
கூலித்தொழிலாளியின் மகனான நவீன் தனது வெற்றி குறித்து கூறுகையில்,
‘எம்.பி.பி.எஸ். படிப்பது என் லட்சியம் ஆகும். இலக்கை அடைந்திருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனது கனவு நிஜமாக போகிறது,’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.