காற்று மாசு அளவைக் கண்டறிய உதவும் புதிய செயலி!
நாடு முழுவதும் காற்று மாசு முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், காற்று மாசு தொடர்பான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள இந்த செயலி வழி செய்கிறது.
காற்று மாசு பற்றி கவலைப்படுகிறீர்களா? எனில் உங்கள் நகரத்தில் காற்று மாசு அளவைக் கையில் உள்ள ஸ்மார்ட்போனிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்கான செயலியை புளு ஸ்கை அனல்டிகஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புளு ஸ்கை அனல்டிக்ஸ் அறிமுகம் செய்துள்ள ’பிரிசோ’ (BreeZo) செயலி மூலம், இந்தியா முழுவதும் காற்று மாசு அளவை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலி, காற்று மாசு அளவு தொடர்பான தகவல்களை அளிப்பதோடு, இது தொடர்பான வரலாற்றுத் தரவுகளையும் அளிக்கிறது.
ஐஐடி வாரானாசி பட்டதாரியான அபிலஷா புர்வார் மற்றும் கிஷிதிஜ் புர்வார், புவியியல் சார்ந்த தரவுகள் ஆய்வு ஸ்டார்ட் அப் நிறுவனமான புளு ஸ்கை அனல்டிக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், இந்தியா முழுவதும் உள்ள இடங்களுக்கான காற்று மாசு அளவை இலவசமாக தெரிந்து கொள்ள உதவும் ’பிரிசோ’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. செயற்கைகோள் தரவுகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சென்சார்கள் மூலம் திரட்டப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த செயலி செயல்படுகிறது.
இந்த செயலி, காற்றின் தரம் தொடர்பான தகவல்களை அளிப்பதோடு, காற்று மாசு தொடர்பான வரலாற்றுத் தரவுகளை அளிக்கும் திறம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இணையதள வடிவிலும் செயல்படக்கூடியதாக இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் முக்கிய அம்சங்கள் சில:
- பல்வேறு மாசுப் பொருட்களை கண்காணித்து, அவை தொடர்பான தகவல்களை அளிக்கிறது.
- 200 க்கும் மேற்பட்ட இடங்கள் தொடர்பான காற்று மாசு அளவை கண்காணித்து, அவற்றுக்கான தகவல்களை அளிக்கிறது.
- காற்று மாசு தொடர்பான தினசரி நோட்டிபிகேஷன்களை அளிப்பதோடு, காற்று தரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளையும் பரிந்துரைக்கிறது.
- வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் சேவைகளில் சாட்பாட் வடிவிலும் அணுகலாம்.
இந்த செயலி மூலம் பயனாளிகள் தங்கள் பகுதிகளின் காற்று தரத்தை தெரிந்து கொள்ளலாம். மேலும், காம்பஸ் வசதி மூலம், அருகாமையில் உள்ள சென்சார் தகவலை தெரிந்து கொண்டு, காற்று தரத்திற்கான உடனடி தகவல்கள் பெறலாம். காற்றில் கலந்துள்ள மாசுகள் தொடர்பான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
”2020களில், பருவநிலை மாற்ற நெருக்கடிக்கான ஆண்டுகளாக இருக்கும் என கணிக்கிறோம். தகவல் சார்ந்த முடிவுகளை எடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை சீர்தூக்கிப்பார்க்க, நமக்கு மேம்பட்ட சுற்றுச்சூழல் அறிவு தேவை. புளு ஸ்கை அனலிட்க்ஸ் நிறுவனம், 2019ல் காற்று மாசு தகவல்களை அளிப்பதில் துவங்கி, 2020ல் தண்ணீர் தகவலையும், 2021ல் வெப்பம் தொடர்பான தகவலையும் அளிக்க உள்ளது,” என்கிறார் நிறுவன சி.இ.ஓ அபிலாஷா புர்வார்.
“காற்று மாசு நாட்டில், ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு அடுத்த இடத்தில் பொது ஆரோக்கியத்திற்கான இரண்டாவது பெரிய இடராக அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கான காற்று மாசு அளவை தெரிந்து கொள்ள பிரிசோ செயலியை பயன்படுத்தலாம்,” என்று நிறுவன முதன்மை தொழில்நுட்ப அதிகார் கிஷிதிஜ் புர்வார் கூறுகிறார்.
இந்த செயலி காற்று மாசு தொடர்பான தகவல்களை ஒரு பார்வையில் வழங்குகிறது. மேலும் வரைபடங்கள் உதவியோடு, காற்று மாசு தொடர்பான வரலாற்றுத் தகவல்களையும் முன்வைக்கிறது. இதன் மூலம் பயனாளிகள், தூய்மையான காற்று வழிகளை கண்டறியலாம்.
இருப்பிடம் சார்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கான காற்று மாசு கணிப்பு மற்றும் ஐ.ஓ.டி சாதனங்கள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட வசதிகளையும் வருங்காலத்தில் வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு நிறுவன இணையதளம். https://aqi.breezo.in/
தொகுப்பு; சைபர்சிம்மன்