எளிய திருமணத்தால் மிச்சம் ஆன ரூ.38 லட்சம்: உதவிகளைக் கொடுத்து அசத்திய புதுமண தம்பதி!
பாராட்டு மழையில் திருமண ஜோடிகள்!
கொரோனா ஏற்படுத்திய வடுவை சரிசெய்ய மக்கள் பலரும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சில வாரங்கள் முன் கொரோனா பேரிடரை சமாளிக்க நன்கொடை அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை கொரோனவை எதிர்க்க தங்களால் முடிந்ததை உதவி வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு உதவியால் கவனம் பெற்று வருகின்றனர் திருப்பூரைச் சேர்ந்த புதுமண தம்பதிகள். திருப்பூரை சேர்ந்த அருள்செல்வத்தின், இரண்டாவது மகன் அருள் பிரனேஷ் என்பவருக்கும், திருப்பூர், விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் - கவிதா தம்பதியினர் மகள் அனு என்பவருக்கும் சில தினங்கள் முன் திருமணம் நடந்தது.
இந்த திருமணமானது, காங்கேயம் - வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையான முறையில் நடந்தது. பிரமாண்டமாக நடக்க இருந்த திருமணத்தை கொரோனா காரணமாக எளிமையாக நடத்தினர். எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்ட பணத்தில் ரூ.37.66 லட்சம் அளவுக்கு மிச்சம் வந்துள்ளது.
இதையடுத்து, மீதமான பணத்தை கொரோனா பணிகளுக்கு தர முடிவு செய்து திருமணம் முடிந்த கையோடு,
மணமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு ரூ.5 லட்சம், பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு ரூ.11 லட்சம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு 2 லட்ச ரூபாய், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு ஐ.சி.யு., யூனிட் அமைக்க, 7.66 லட்சம், மருத்துவச் செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும், 8 குடும்பங்களுக்கு, 7 லட்சம் என அறிவித்து, அதற்கான மொத்த ரூபாய் ரூ.37.66 லட்சத்தை காசோலையாக எடுத்து திருமண மேடையிலேயே சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கி இருக்கின்றனர் மணமக்கள்.
இது குறித்து தகவல் வெளியாக மணமக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் நல்லெணத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக பதிவிட்டு ஃபேஸ்புக் பயனர் ஒருவர்,
“பணம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.... மனம் இருக்க வேண்டும் அல்லவா... கடவுள் உள்ளம் கொண்ட இந்த மாமனிதர்கள் வம்ச விருத்தியோடு பதினாறு சுகங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்..." என்று நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.
தகவல் உதவி: நம்ம கடலூர் பக்கம் | தொகுப்பு: மலையரசு