47 குழந்தைகளுக்கு இவர்தான் ‘அப்பா’
’அப்பா’ என்று குழந்தைகளால் அன்புடன் அழைக்கப்படும் சென்னையைச் சேர்ந்த சால்மன் ராஜ், தனது என்ஜிஓ மூலம் இந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறார்.
சாலமன் ராஜ், ஃபெல்வியா சாந்தி தம்பதிக்கு 1992-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு எட்டு ஆண்டுகள் குழந்தை பிறக்கவில்லை. எனவே அன்பும் ஆதரவும் தேவைப்படும் குழந்தை ஒன்றை தத்தெடுத்துக்கொள்ள எண்ணினார்கள்.
பின்னர் அந்த முடிவை இவர்கள் கைவிட்டனர். 2000ம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இருப்பினும் குழந்தையை தத்தெடுக்கவேண்டும் என்கிற சாலமனின் விருப்பம் சற்றும் குறையவில்லை.
ஒருமுறை அற்புதராஜ் என்கிற ஹெச்ஐவி பாதித்த குழந்தையை அரசு சாரா நிறுவனம் ஒன்றில் சாலமன் சந்தித்தார். இந்தக் குழந்தையின் பெற்றோர் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்ததால் அற்புதராஜ் வீடின்றி தவித்துள்ளார். சாலமன் இந்தக் குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளத் தீர்மானித்தார். அடுத்ததாக ஹெச்ஐவி பாதித்த ஒரு சிறுமியை தத்தெடுத்துக்கொண்டார்.
விரைவிலேயே ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளை சாலமன் தத்தெடுத்துக் கொள்ளும் தகவல் பரவத் தொடங்கியது. ஹெச்ஐவி பாதித்த மேலும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளுமாறு ஒருவர் சாலமனை அணுகியுள்ளார். அப்போதுதான் இந்தக் குழந்தைகளுக்கான தங்குமிடத்தைத் தொடங்கலாம் என சாலமன் தீர்மானித்தார்.
52 வயதான சாலமன் ’ஷெல்டர் ட்ரஸ்ட்’ (Shelter Trust) என்கிற பெயரில் சென்னையில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இதிலுள்ள ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட 47 குழந்தைகள் சாலமனை ‘அப்பா’ என்றே அழைக்கின்றனர்.
சாலமன் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். இறையியல் ஆய்விற்காக சென்னைக்கு மாற்றலாகியுள்ளார். இருபதாண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசித்து வருகிறார். தங்குமிடத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிக்க மூன்று வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இறையியல் கல்லூரியில் ஆசிரியராக உள்ளார். Right Now Foundation என்ஜிஓ-வில் பணியாற்றுகிறார். மகளிர் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றுகிறார்.
”என்னுடைய நாள் காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. மூன்று வெவ்வேறு இடங்களில் பணிபுரிகிறேன். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கல்லூரி ஒன்றில் வகுப்பெடுப்பதால் காலை 8 மணிக்கு அங்கு சென்றுவிடுவேன். 10.30 மணிக்கு அங்கு வேலையை முடித்துக்கொண்டு அலுவலகத்திற்குச் செல்வேன் (ரைட் நவ் ஃபவுண்டேஷன் அல்லது மகளிர் மையம்). மாலையில் தங்குமிடத்திற்குச் சென்று குழந்தைகளுடன் விளையாடுவேன். 7.30 மணியளாவில் என் வீட்டைச் சென்றடைவேன்.
வகுப்பெடுக்கச் செல்லாத நாட்களில் காலை ஏழு மணிக்கே தங்குமிடத்திற்குச் சென்று குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிடுவேன். அதன் பிறகு இரண்டு அலுவலகங்களில் ஒன்றிற்குச் செல்வேன். மாலை நேரங்களில் ஆவணங்கள் தொடர்புடைய எழுத்துப் பணிகளில் ஈடுபடுவேன். இதுவே எனது வழக்கம்,” என சாலமன் குறிப்பிட்டார்.
எய்ட்ஸ் தொடர்பாக மக்களிடையே நிலவும் அறியாமையை நினைத்து மனம் வருந்திய சாலமன், தனது பணி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்.
“அந்த நாட்களில் ஹெச்ஐவி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி நான் பேசியபோது மக்கள் தயக்கம் காட்டினர்,” என்றார்.
இந்தக் குழந்தைகள் மீது சாலமன் காட்டும் அக்கறையை நெருங்கிய நண்பர்களும் சொந்தங்களும்கூட புரிந்துகொள்ளவில்லை.
”ஹெச்ஐவி தொடர்பான அறியாமை காரணமாக என்னுடைய உறவினர்களும் நண்பர்களும்கூட எனக்கு ஊக்கமளிக்கவில்லை. கடுமையான விமர்சனங்களையும் எதிர்மறையான கருத்துக்களையும் முன்வைத்தனர். நான் இந்தக் குழந்தைகளைப் பராமரிக்க பலர் எனக்கு ஆதரவளிக்கவில்லை,” என்று நினைவுகூர்ந்தார்.
இருப்பினும் சாலமன் சற்றும் மனம் தளர்ந்து போகாமல் குழந்தைகளை பராமரிக்கும் பணியில் தானே ஈடுபடத் தொடங்கினார்.
”முதலில் குழந்தைகளுக்கான தங்குமிடத்தை என்னுடைய வீட்டிலேயே என் குடும்பத்துடனேயே அமைத்தேன். அனைவரும் ஒன்றாகவே வசித்தோம். மூன்று குழந்தைகளுக்கு மேல் எண்ணிக்கை அதிகரித்ததும் வீட்டில் இடவசதி போதுமானதாக இல்லை. எனவே வேறொரு இடத்திற்கு குழந்தைகளை மாற்றினேன்,” என சாலமன் விவரித்தார்.
’ஷெல்டர் ட்ரஸ்ட்’
சாலமன் 2003ம் ஆண்டு குழந்தைகளுக்கான இல்லத்தைக் கட்டுவதற்காக தனது அரசுசாரா நிறுவனத்தை குழந்தை நல அமைப்புடன் பதிவு செய்யவேண்டியிருந்தது. ஷெல்டர் ட்ரஸ்ட் கட்டுவதற்கு தன்னுடைய சொந்த பணத்தை செலவிட்டார். சுமார் எட்டு குழந்தைகளுக்கான செலவை தானே ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் ரோட்டரி கிளப் சென்னை, லயன்ஸ் கிளப் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்தும் நிதியுதவி பெறப்பட்டது.
அடுத்தபடியாக ஊழியர்களைப் பணியிலமர்த்துவது மிகப்பெரிய பணியாக இருந்தது.
”தங்குமிடம் கட்டுவதற்கு ஒரு இல்லத்தைக் கண்டறிந்தபிறகு ஊழியர்களை நியமிப்பது மிகப்பெரிய பணியாக இருந்தது. ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பணிபுரிய யாரும் முன்வரவில்லை,” என்று சாலமன் நினைவுகூர்ந்தார்.
அதன்பிறகு ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட நபர்களையே பணியிலமர்த்தத் தீர்மானித்தார். வெவ்வேறு மருத்துவமனைகளுக்கும் என்ஜிஓ-க்களுக்கும் தகவல் அனுப்பினார். பின்னர் அவரது என்ஜிஓ மற்றும் குழந்தைகளை ஆதரிக்கும் குழுவை ஒருங்கிணைத்தார். ஷெல்டர் ட்ரஸ்ட் குழுவில் தற்போது 12 ஊழியர்கள் முழுநேரமாக பணியாற்றுகின்றனர். இவர்களும் எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் இந்த வளாகத்திலேயே வசிக்கின்றனர்.
இங்கு பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்களைப் பற்றிய உண்மை நிலவரம் மறைக்காமல் தெரிவிக்கப்படுகிறது.
”குழந்தைகளுக்கு பத்து வயதாகும்போது ஹெச்ஐவி பாசிடிவ் குறித்த உண்மையை புரியவைக்கிறோம். அவர்கள் ஏன் இங்கு வசிக்கிறார்கள், என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள், பள்ளிக்குச் செல்லும்போது எப்படித் தங்களை தற்காத்துக்கொள்வது, சூழல்களுக்கும் சமூகத்திற்கும் எப்படி எதிர்வினையாற்றுவது உள்ளிட்டவற்றில் பயிற்சியளிக்கிறோம். தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்வதன் அவசியத்தையும் அவர்களுக்கு உணர்த்துகிறோம்,” என்றார் சாலமன்.
இன்று மூன்று முதல் பதினெட்டு வயது வரையிலும் உள்ள 47 குழந்தைகள் இவரது பராமரிப்பில் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதை அறிவார்கள். தங்களது வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் அறிந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ஆதரவற்றவர்கள் இல்லை.
பெரும்பாலானோருக்கு பெற்றோர்களில் ஒருவர் மட்டும் உள்ளனர். இவர்கள் தனியாக குழந்தைகளை பராமரிக்க சிரமப்படுகின்றனர்.
”ஒவ்வொரு குழந்தைக்கும் குழந்தை நல அமைப்பு சார்பில் உரிமம் வழங்கப்படும். இதனால் குழந்தைகளுக்கு 18 வயதாகும் வரை எங்களது பராமரிப்பில் இருக்கலாம்,” என்றார்.
இந்தத் தங்குமிடத்தைச் சேர்ந்த குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு 18 வயதான பிறகும் சாலமன் இவர்கள் மீது கவனம் செலுத்தி மேற்படிப்பிற்கு உதவி வருகிறார். சில குழந்தைகள் மீண்டும் தங்குமிடத்திற்குத் திரும்பி ஊழியர்களாக பணியாற்றியுள்ளனர்.
”இந்தக் குழந்தைகள் அனைவரும் என்னை ’அப்பா’ என்று கூப்பிடும்போது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது,” என்றார் சாலமன்.
வருங்காலத் திட்டம்
என்ஜிஓ-வை விரிவாக்கம் செய்யும் திட்டம் இல்லை என்கிறார் சாலமன். ”ஹோம்கேர் சப்போர்ட் பிராஜெக்ட்” போன்ற திட்டங்களில் பணியாற்ற விரும்புகிறார்.
”குழந்தைகளுக்கு அவர்களது வீட்டிலேயே உதவுவது தொடர்பாக பணியாற்றி வருகிறோம். இல்லம் அல்லது தங்குமிடங்களில் பராமரிப்பு வழங்கப்படுவதை வேறு வழியில்லாத சூழல்களில் மட்டுமே மேற்கொள்கிறோம். குழந்தைகள் அவர்களது குடும்பங்களுடனேயே வசிக்கவேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஏழ்மை காரணமாகவும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் இவர்கள் எங்களைப் போன்றவர்களிடம் அனுப்பப்படுகின்றனர்.
நாங்கள் இந்தக் குழந்தைகளின் குடும்பங்களை அணுகி விழிப்புணர்வை ஏற்படுத்தி ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து எடுத்துரைக்கிறோம்,” என்றார் சாலமன்.
வீட்டிலேயே குழந்தைகளை பராமரிக்கும் ஷெல்டர் ட்ரஸ்ட் முயற்சியில் முட்டை, ஒரு பழம், பால் பாக்கெட் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களை குழந்தைகளின் வீட்டிலேயே கொண்டு சேர்க்கப்படுகிறது. சில மாணவர்களுக்கு பைகள், பள்ளிக் கட்டணம், எழுதுபொருட்கள் உள்ளிட்ட பள்ளிக்குத் தேவையான பொருட்களும் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் தங்குமிடத்திற்கு வெளியே உள்ள சுமார் 60 குழந்தைகளுக்கு இந்நிறுவனம் தற்சமயம் உதவி வருகிறது. நீண்டகால அடிப்படையில் விரிவடைய திட்டமிட்டுள்ளது.
தங்குமிடத்தில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சாலமன் கூறும்போது,
“மற்ற குழந்தைகளைப் போன்றே இந்தக் குழந்தைகளும் வளர்ந்து வீட்டுச் சூழலில் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதே என்னுடைய கனவு. ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளைக் குணப்படுத்தக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன். இந்தக் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்துடன்கூடிய சிறப்பான எதிர்காலம் அமையவேண்டும்,” என்றார் சாலமன்.
ஆங்கில கட்டுரையாளர்: ஊர்வி ஜேக்கப் | தமிழில்: ஸ்ரீவித்யா