புதிய வரிகள் இல்லை; உள்கட்டமையில் கவனம்: தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள்!
2019-20 ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. மெட்ரோ ரெயில் உள்ளிட்ட உள்கட்டமை வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகளுக்கான உயர்நிலை தொழில்நுட்பத் திறன் மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக துணை முதல்வரும், நிதி இலக்காவை தன்வசம் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் 2019- 20 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். தற்போதையை அரசின் நான்கவாது பட்ஜெட்டாக இது அமைகிறது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் 10வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார். வரும் நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை ரூ.14,300 கோடியாக இருப்பதாகவும், மொத்த பற்றாக்குறை ரூ.3,97,495.96 கோடியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிதி பற்றாக்குறை விகிதம் 23.02 சதவீதமாக அனுமதிக்கப்பட்ட 25 சதவீதத்திற்குள் இருப்பதாகவும், நிதி அமைச்சர் தெரிவித்தார்.
வருவாய் பற்றாக்குறையை சீராக்குவதற்கான நடவடிக்கைகளையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரின் பார்க்கிங் தேவையை பூர்த்தி செய்வதற்காக ரூ.2,000 கோடி மதிப்பிலான விரிவான திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். கீழ் தள பார்க்கிங் வசதி, பல அடுக்கு பார்க்கிங் வசதி ஆகியவற்றை இந்த திட்டம் கொண்டிருக்கும். இந்த பாரக்கிங் அமைப்பு 2 லட்சம் கார்கள் மற்றும் அதே அளவு இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி கொண்டிருக்கும்.
விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் நகர்புற ஏழைகளுக்காக வீடுகள் கட்டுத்தரும் திட்டமும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். மாநில மின் வாரியம் தேனி, சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் 250 மெகவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை முதல் கட்டத்தின் 45 கிமீ தொலைவிலான இருவழி மார்கங்களும், இந்த மாதத்திற்குள் முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார். மெட்ரோ ரெயில் திட்டத்தை மீனம்பாக்கத்தில் இருந்து கீழம்பாக்கம் வரை விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வுப்பணிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை பொறுத்தவரை ஆசிய, மேற்காசிய மற்றும் உள்நாட்டு பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் பெரிய அளவிலான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்பத் திறன் பயிற்சி மையங்கள், 5 மாவட்ட தலைமையிடங்களில் ஏற்படுத்தப்படும். இதன்மூலம், ஆண்டுதோறும் 10,000 வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை பெறுவர் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
அதே போல, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம், வேலை வழங்கும் நிறுவனங்களையும் வேலை தேடுவோரையும் இணைக்கும் மாநில தொழில் மையம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் நிதி அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
- பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடியும், எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி, உள்ளாட்சித் துறைக்கு ரூ.18.273 கோடி, விவசாயத்துறைக்கு ரூ.10,550.85 கோடி, கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1170.56 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.2350 கோடியில் 500 மெகாவாட் மின்திறன் கொண்ட "கடலாடி மிக உய்ய சூரிய மின்னழுத்த பூங்கா" திட்டமும் செயல்படுத்தப்படும்.
- அதிகரித்து வரும் மின் தேவைக்கேற்ப, 13000 மெகாவாட் அளவிற்கு மாநிலத்தின் அனல்மின் திட்டங்களை ரூ.91.880 கோடியில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்தவிர 2500 மெகாவாட் புனல்மின் திட்டங்களும் ரூ.8831.29 கோடியில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
- 2018-19 ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.786 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. கஜாபுயல் நிவாரண மற்றும் தற்காலிக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மத்திய அரசு ரூ.900.31 கோடியை விடுவித்தது.
- இந்நிதி ஆதாரங்களோடு சேர்த்து பயிர் சேதங்களுக்காக ரூ.774.13 கோடி, உதவி நிவாரணத்திற்காக ரூ.577.47 கோடி சேதமடைந்த வீடுகள், குடிசைகளுக்கு நிவாரணமாக ரூ.401.50 கோடி மீனவர்களின் சேதமடைந்த படகுகளுக்காக ரூ.41.63 கோடி உட்பட மொத்தம் ரூ.2361.41 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
- ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திற்காக ரூ.28,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- கைத்தறி துறைக்கு ரூ.1.170 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பள்ளி கல்வித்துறைக்கு ரூ.1,656 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்திற்கு ரூ.1,072 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அண்ணா பல்கலைக்கழக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ரெயில் மேம்பாலங்கள் கட்ட ரூ.726 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 2,000 சூரிய மின்சக்தி மோட்டர்கள் விநியோகிக்கப்படும்.
- நெடுஞ்சாலை மற்றும் சிறிய துறைமுகங்களுக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் 2,000 பாட்டரி வாகனங்கள் இயக்கப்படும்.
- அவினாசி-அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.
- தோட்டக்கலை துறைக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மாநில பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.