இனி கார் பின்இருக்கை சீட் பெல்ட் போடுவதும் கட்டாயம்; இல்லையேல் அபராதம்!
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை பால்கரில் கார் விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி, மகாராஷ்டிராவில் கார் விபத்தில் சிக்கி காலமானார். இதைத்தொடர்ந்து சொகுசு காரில் சென்றபோதும் விபத்தில் மரணம் நிகழ்ந்திருப்பது குறித்து விவாதங்கள் எழுந்தன.
மிஸ்திரி எப்படி இறந்திருப்பார்? காரின் பின் சீட்டில் அமர்ந்த அவர் இறந்தபோது, முன் சீட்டில் பயணித்த இருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தது எப்படி என்றும் வல்லுனர்கள் விவரித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன் சீட்டில் சீட் பெல்ட் போடாவிட்டால் எப்படி அலாரம் அடிக்குமோ அதேபோல், பின் சீட்டில் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டாலும், சீட் பெல்ட் அலாரம் அமைப்பை கட்டாயமாக்கவேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்களிடம் அறிவுறுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இப்போது பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் இருந்தாலும் அபராதம் கட்டாயமாக்கப்படும், என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பின் இருக்கை சீட் பெல்ட் கட்டாயம்
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி,
“தற்போது முன் இருக்கை பயணிகளுக்கு மட்டுமே சீட் பெல்ட் நினைவூட்டல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பால்கார் கார் விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இறந்த பிறகு, பின் இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் அலாரம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்,” என்று கட்கரி கூறினார்.
குறைந்தபட்சம் 1000 ரூபாய் அபராதம்
பொதுவாக கார்களில் நீண்ட தூரம் பயணிக்கும்போது, பின் இருக்கையில் கூட சீட் பெல்ட் அணிவது கட்டாயம். ஆனால், மக்கள் அதை பின்பற்றுவதில்லை, என நிதின் கட்கரி தெரிவித்தார்.
“அதனால், வாகனங்களில் பின் இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் அலாரம் அமைப்பை வைக்க வாகன உற்பத்தியாளர்களை கேட்டுக் கொள்ளப்போகிறோம். அதேபோல், மக்கள் பின் இருக்கைகளில் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும். குறைந்தபட்ச அபராதம் 1000 ரூபாய் விதிப்போம்,” என்றார்.
3-4 நாட்களுக்குப் பின் இருக்கைகளில் சீட் பெல்ட் அலாரம் சிஸ்டத்தை கட்டாயமாக்குவதற்கான வரைவு அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.
மத்திய மோட்டார் வாகன விதிகளின் (சிஎம்விஆர்) விதி 138(3)ன்படி, பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இந்த விதி கட்டாயமானது என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது என்றாலும், போக்குவரத்து காவலர்களும் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணிகளின் சீட் பெல்ட் அணிவதற்கு அபராதம் விதிப்பதில்லை.
8 இருக்கைகள் கொண்ட வாகனங்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்
மிஸ்திரி கார் விபத்தில், பின் இருக்கையில் ஏர் பேக் திறக்காததும் அவரது மரணத்துக்கு காரணம் என சொல்லப்பட்டது. அதனால், அக்டோபர் மாதம் முதல் 8 இருக்கைகள் கொண்ட வாகனங்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை ஆட்டோ நிறுவனங்கள் கட்டாயம் வைக்கவேண்டும் என்று அறிவுறுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
8 இருக்கைகள் கொண்ட வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்குவது குறித்த கேள்விக்கு, அது பரிசீலிக்கப்படுவதாக கட்கரி கூறினார்.
வாகனங்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வாகனப் பயணிகளின் பாதுகாப்பிற்காக, வாகனங்களின் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ல் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.