குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகவும் பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் மஞ்சு பத்ரா!
குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக போராடி வரும் ஒடிசாவைச் சேர்ந்த மஞ்சு பத்ரா பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் சந்திப்புகள், பிரச்சாரங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து வருகிறார்.
ஒடிசாவின் கலஹந்தி மாவட்டத்தில் உள்ள போர்பாத் கிராமம். இங்கு 16 வயது சிறுவனக்கும் 20 வயது பெண்ணிற்கும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம். திருமணம் நடக்க இருந்தது. ஆனால் இந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார் மஞ்சு பத்ரா.
அங்குள்ள அதிகாரிகள், காவலர்கள் போன்றோரை சந்தித்து பேசி திருமணத்தை நிறுத்தினார். இவர் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக ஒரு போராட்டமே நடத்தி வருகிறார். திருமண ஏற்பாட்டை தடுத்து நிறுத்தினால் சும்மா விடுவார்களா என்ன? பையன் வீட்டார் சண்டைக்கு வந்தார்கள். மிரட்டினார்கள். அவமானப்படுத்தினார்கள். எப்படியாவது கடத்திச் சென்றுவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்கள்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு மஞ்சு பயப்படவில்லை. குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை நிறுத்திக்கொள்ளவும் இல்லை. முயற்சியில் இருந்து பின்வாங்கவும் இல்லை.
மஞ்சுவின் சொந்த ஊரான கலஹந்தி மாவட்டத்தின் போர்பாத் கிராமம் பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி. இந்தியாவின் எத்தியோப்பியா என்று அழைக்கப்படும் அளவிற்கு பாதிப்பு இருந்துள்ளது. பட்டினியால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்தப் பகுதி செழிப்பான விவசாயத்திற்கும் பெயர் போனது.
மாற்றத்திற்கு வித்திட்டார்
போர்பாத் கிராமத்தில் குழந்தைத் திருமணம் அதிகளவில் நடந்து வந்தது. பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு இங்குள்ளவர் அக்கறை காட்டுவதில்லை. குடும்ப வன்முறை பரவலாகக் காணப்பட்டது.
மஞ்சு குழந்தைத் திருமணத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு அவரது வீட்டுச் சூழலே காரணம். மஞ்சு தனது அம்மாவின் குரல் ஒடுக்கப்பட்டதைக் கண்டு வளர்ந்தார். இதுவே அவர் ஆர்வலராக மாறி உரக்கக் குரல் கொடுக்கக் காரணம்.
”என் அம்மா பெயர் சிவரர்தி பத்ரா. அவருக்கு 14 வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அந்த சமயத்தில் என் அப்பா நிச்சல் பத்ராவிற்கு 17 வயதிருக்கும். அம்மாவிற்கு படிப்பும் இல்லை. இல்லற வாழ்க்கை குறித்த புரிதலும் இல்லை. 14 குழந்தைகள் பெற்றெடுத்தார். நான்கு குழந்தைகள் மட்டும் உயிர் பிழைத்தன. அவரின் கையறு நிலை என்னை பெரிதும் பாதித்தது. உடல் ரீதியாகவும் மனதளவிலும் அவர் சந்தித்த துயரங்கள் என் பாதையை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும் என்று சிந்திக்கத் தூண்டியது,” என்கிறார் மஞ்சு.
போர்பாத் பகுதியில் உள்ள சிறுமிகள் பத்தாம் வகுப்பு முடித்ததும் மேற்கொண்டு படிக்க குடும்பத்தினர் அனுமதிப்பதில்லை. மஞ்சுவிற்கு 15 வயதானதும் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முயற்சி செய்தார்கள்.
மஞ்சு பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தார். பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை (Violence Against Women), குழந்தைத் திருமணம் மற்றும் கட்டாய திருமணம் போன்றவை குறித்து போர்பாத் கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த Oxfam India ஏற்பாடு செய்திருந்தது. மஞ்சு இதுகுறித்து கேள்விப்பட்டார்.
இந்த சந்திப்புகளில் அவர் கலந்துகொண்டார். சமூகத்தில் ஆழப்பதிந்திருக்கும் இதுபோன்ற நடைமுறைகள் எத்தனை கொடியது என்பதை உணர்ந்தார். சமூக மாற்றம் அவசியம் என்பதையும் உணர்ந்தார்.
”நான் கோந்த் சமூகத்தைச் சேர்ந்தவள். 2017-ம் ஆண்டிற்கு முன்பு குழந்தைத் திருமணங்கள் அதிகம் இருந்தது. என் நெருங்கிய தோழிகளுக்கே திருமணம் நடந்ததைப் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு மாற்றத்தைக் காண முடிகிறது. தொடர்ந்து பெண்களையும் பெற்றோர்களையும் சந்தித்து குழந்தைத் திருமணங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்குகிறோம்,” என்கிறார்.
பாலின சமத்துவம்
கல்வி உரிமைக்காகவும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்த மஞ்சு இன்று ஒடிசாவில் National Alliance of Women’s Organisation (NAWO) என்கிற அமைப்பு உருவாக்கியுள்ள குழு ஒன்றிற்கு தலைவராக இருக்கிறார். சந்திப்புகள், பயிற்சி பட்டறைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து மக்களிடையே குழந்தைத் திருமணங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பாலின சமத்துவம் குறித்தும் எடுத்துரைத்து வருகிறார்.
இவைதவிர மாதவிடாய் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கி வருகிறார். இதில் பங்கேற்க மக்கள் வேலையை விட்டுவிட்டு வரவேண்டியிருந்தது. அதாவது ஒருநாள் கூலியை இழக்கவேண்டிய சூழல் இருந்தது. இதனால் பலர் ஆரம்பத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் கிராமத் தலைவர் அவர்களுக்கு புரியவைத்தார். அதன் பிறகு எண்ணிக்கை அதிகரித்தது.
எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் மஞ்சுவிற்கு அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் ஆதரவளிக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய பக்க பலமாக இருந்து வருகிறது.
“எங்கள் கிராமத்தில் பெண்கள் நடனமாட அனுமதியில்லை. 2017-ம் ஆண்டு தசரா பண்டிகையின்போது நான் நடனமாடினேன். பொதுவெளியில் இப்படி நடனமாடிய முதல் பெண் நான்தான். என் பெற்றோரிடம் சென்று பலர் குறை கூறினார்கள். எனக்கு திருமணம் நடக்குமா என்பதே சந்தேகம்தான் என்றுகூட சொல்லியிருக்கிறார்கள்,” என்கிறார் மஞ்சு.
Oxfam ஆதரவு
கிராம மக்களிடையே காணப்பட்ட பிற்போக்கான சிந்தனைகளைத் தகர்த்தெறியும் மஞ்சுவின் முயற்சிக்கு Oxfam மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருந்து வருகிறது.
Oxfam இந்தியாவின் புரோக்கிராம் அதிகாரி ருக்மணி பண்டா கூறும்போது,
மஞ்சு பத்ரா ஒரு சாம்பியனாக உருவாகி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இளம் சமூகத்தினருக்கு மனித உரிமைகள், பாலின பாகுபாடுகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்றவற்றை எடுத்துரைத்து பாலின சமத்துவத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மாற்றம் ஏற்படும் வரை இத்தகைய முயற்சிகள் தொடரும். மஞ்சு பத்ராவும் இதர இளம் உறுப்பினர்களும் வெவ்வேறு உரையாடல்கள் மூலமாகவும் பிரச்சாரங்கள் மூலமாகவும் பெண்களின் உரிமைகளைப் பற்றி விளக்கி வருகிறார்கள்,” என்று குறிப்பிடுகிறார்.
இந்தி திரைப்படங்கள் பெண்களைத் தாழ்த்தியும் ஆண்களை உயர்த்தியும் சித்தரிக்கப்படுகின்றன என்கிறார் ருக்மணி.
”இந்தி திரைப்படங்களை பெண்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க இளைஞர்களை ஊக்குவிக்கிறோம். பெண்களின் உரிமைகளைப் புரிந்துகொள்ள இது உதவும். இந்தப் பயிற்சிகளில் மஞ்சு பத்ரா பங்களிக்கிறார்,” என்கிறார் ருக்மணி.
மக்கள் மனதிலும் சமூகத்திலும் மாற்றத்தை கொண்டு சேர்ப்பதில் கல்வி மிகப்பெரிய பங்கு வகிப்பதாக மஞ்சு குறிப்பிடுகிறார். பள்ளிகளிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
சமீபத்தில் பிபிஏ முடித்துள்ள மஞ்சு வேலைக்கு சேர்ந்து தற்சார்புடன் இருக்க விரும்புகிறார்.
”என்னுடைய வாழ்க்கைத் துணையை நானே தேர்வு செய்வேன் என்று என் பெற்றோர்களிடம் கூறியிருக்கிறேன்,” என்கிறார் புன்னகையுடன்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா