230 கிமீ பயணித்து 'இறந்ததாக அறிவிக்கப்பட்ட மகனின் உயிரை மீட்ட தந்தை’ - ஒடிசா ரயில் விபத்து நெகிழ்ச்சி!
ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட தனது மகனை உயிருடன் மீட்ட தந்தையின் நெகிழ்ச்சி கதை இது.
ஒடிஷா மாநிலம் பாலசோரில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயில்கள் மோதியதில் 275 பேர் உயிரிழந்தனர், 1100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கோரமான ரயில் விபத்து பல குடும்பங்களை வேதனையிலும் விரக்தியிலும் ஆழ்த்தியுள்ளது. மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஏராளமான உயிர்கள் போனது, மற்றும் பலர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைவதில் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். சுமார் 275 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 100 பேர்களின் உடல்கள் இன்னும் யாரென்று உறவினர்களால் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது வேதனைக்குரியது.
மகனை தேடி வந்த தந்தை
இந்த ஒடிசா ரயில் விபத்தில் பல நெகிழ்ச்சியான, மற்றும் மனவேதனை அளிக்கக்கூடிய பல சம்பவங்கள் நடந்து வருகின்றது. அப்படி மகனைத் தேடிக் கண்டுபிடித்த தந்தை பற்றிய நெகிழ்ச்சியான கதை இது.
ரயில் விபத்து நிகழ்ந்த சில மணிநேரத்தில் மகனின் செல்போனுக்கு அழைத்த ஹெலராமுடன் மகன் பிஸ்வஜித் பேசியுள்ளார். பலவீனமான குரலுடன் பேசிய மகன் உயிருடன் இருப்பதாக நம்பினார் அவர்.
ஆனால், சில மணி நேரத்துக்குப் பின், ரயில் விபத்தில் அவரது மகன் இறந்து விட்டதாக தகவல் வந்ததை அடுத்து தந்தை ஹெலராம், அந்த செய்தியை ஏற்க மறுத்துவிட்டார். அதனால், தன் மகனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தீர்மானித்த அவர், கொல்கத்தாவில் இருந்து பாலாசோருக்கு 230 கிலோமீட்டர் பயணம் செய்து வந்துள்ளார்.
பாலசோர் ரயில் விபத்தில் பலியானவர்களில் 24 வயதான பிஸ்வஜித் மாலிக், இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டு அவரது தந்தைக்கு அதிகாரிகள் செய்தி அனுப்பியிருந்தனர். ஹெலராம் அங்குள்ள மருத்துவமனைகளில் குவித்துக்கிடந்த சடலங்களுக்கிடையில் இடைவிடாத தேடலைத் தொடர்ந்தார். தன் மகனின் உடல் எங்கும் கிடைக்காத பட்சத்தில், ஒடிசாவில் உள்ள ஒரு தற்காலிக பிணவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மிகுந்த தேடலுக்குப்பின் ஒரு தற்காலிக சவக்கிடங்கில் தனது மகனின் உடலைக் கண்டுபிடித்தார். ஆனால், பிஸ்வஜித் உண்மையில் மயக்க நிலையில் உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தார். நம்பிக்கை பலித்த மகிழ்ச்சியுடன், அவர் பிஸ்வஜித்தை கொல்கத்தாவிற்கு ஆம்புலன்சில் பாதுகாப்பாக அழைத்து வந்தார்.
ஒடிசாவில் இருந்து கொல்கத்தா அழைத்து வரப்பட்ட பிஸ்வஜித், அங்குள்ள மருத்துவமனையின் அவரச சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சில அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும் அவருக்கு கூடுதல் அறுவை சிகிச்சைகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவருக்கு கடுமையான காயங்கள் இருந்தபோதிலும், மாலிக்கின் உடல்நிலை சீராக உள்ளது.
பிஸ்வஜித் மாலிக்கின் தந்தை ஹவுராவில் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார். ஒடிசா ரயில் விபத்து பற்றி அறிந்ததும், ஹெலராம் தனது மகனைத் தொடர்பு கொண்டு, அவரைத் தேடி சென்றுள்ளார். மகனை கண்டிபிடித்தது எப்படி என ஜெலராமின் மைத்துனர் தாஸ் விவரிக்கும்போது,
“நாங்கள் தற்காலிக சவக்கிடங்கில் பிஸ்வஜித்தை தேடிக்கொண்டிருந்தோம். அப்போது, பல உடல்களின் குவியலுக்கு நடுவில் ஒரு கை நடுங்குவதை கவனித்தோம். அது பிஸ்வஜித், பலத்த காயம் இருந்தது, ஆனால் அவர் உயிருடன் இருந்தார்.”
உடனடியாக அவரை பாலசோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இருப்பினும், ஹெலராமின் மகனை அருகில் கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த பரிந்துரை இருந்தபோதிலும், ஹெலராம் பிஸ்வஜித்தை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு, பத்திரத்தில் கையெழுத்திட்டு கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றார்.
தாஸ் மற்றும் மாலிக் உடன் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலாஷ் பண்டிட், கொல்கத்தாவுக்குத் திரும்பும் பயணம் முழுவதும் பிஸ்வஜித் பெரும்பாலும் சுயநினைவின்றி இருந்ததாகத் தெரிவித்தார்.
பிஸ்வஜித்தின் வலது கையில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதால், கூடுதல் அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஸ்வஜித் உயிர்பிழைத்தது பற்றி தடயவியல் மருத்துவ நிபுணர் சோம்நாத் தாஸ் பேசுகையில்,
"இதை மருத்துவத்தில் ‘சஸ்பென்டென்ட் அனிமேஷன்’ என்று சொல்வோம். அதாவது, ஒரு நபரின் முக்கிய அறிகுறிகள் கணிசமாகக் குறைந்திருக்கும்.
அதிகமான உடல்கள் மத்தியில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் சூழ்நிலைகள் காரணமாக, காயமடைந்த பயணிகளின் முக்கிய அறிகுறிகள் போதுமான அளவு சரிபார்க்கப்படவில்லை, மேலும் பிஸ்வஜித்தின் வழக்கு இந்த நிகழ்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிகிறது.