ஆட்டோ டிரைவருக்கு ஓணம் லாட்டரியில் அடித்த ஜாக்பாட்: 25 கோடியில் எவ்வளவு கிடைக்கும்?
கேரள ஓணம் பம்பர் லாட்டரி 2022ம் ஆண்டு குலுக்கலில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ. 25 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள ஓணம் பம்பர் லாட்டரி 2022ம் ஆண்டு குலுக்கலில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ. 25 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று மலையாள செய்தி சேனல்கள் முழுவதும் அனூப் என்ற ஒரே ஒரு பெயர் தான் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவருக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட் தொகை தான்.
ஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிர்ஷ்டம்:
“கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும்” என்பது பழமொழி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் 32 வயதான ஆட்டோ ஓட்டுநர் அனூப்பிற்கு அதிர்ஷ்டம் கொட்ட ஆரம்பித்துள்ளது. சொந்தமாக வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக வெளிநாட்டிற்கு வேலை செய்ய திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த அனூப்பிற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று, ஓணம் பண்டிகைக்கான சிறப்பு லாட்டரி சீட்களை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய TJ-750605 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டிற்கு, முதல் பரிசான 25 கோடி ரூபாய் விழுந்துள்ளது. இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து தற்போது ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாவில் அனூப் வைரலான நபராக மாறியுள்ளார்.
ரூ.25 கோடியில் எவ்வளவு கிடைக்கும்?
வெற்றியாளருக்கு ரூ.25 கோடி ஜாக்பாட் தொகையைப் பெறுகிறது. இருப்பினும், வெற்றியாளருக்கு முழு பரிசுத் தொகையும் பணமாக கிடைக்குமா? லாட்டரி முகவர்களுக்கு எவ்வளவு வரியாகக் கழிக்கப்பட்டு கமிஷனாக செல்கிறது?
பரிசுத் தொகையில் செலுத்தப்படும் வரிக் குறைப்புகளைப் பற்றி மேலும் அறிய, கேரள மாநில லாட்டரி துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள தகவல்கள் இதோ...
முதலில் ஒட்டுமொத்த பரிசுத் தொகையில் இருந்து லாட்டரி சீட் ஏஜெண்டுக்கான கமிஷன் தொகையாக 10 சதவீதம் கழிக்கப்படும். இதற்காக, 2 கோடியே 50 லட்சம் ரூபாய் கழிக்கப்படும். அதன் பின்னர் மாநில அரசுக்கான வரியாக 35 சதவீதம், 6 கோடியே, 75 லட்சம் ரூபாய் கழிக்கப்படும்.
ஓணம் பம்பர் லாட்டரியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.15,75,00,000 கிடைக்கும். இந்தத் தொகை வெற்றியாளரின் வங்கிக் கணக்கில் வந்து சேரும். ஆனால், அத்துடன் இது நின்றுவிடுவதில்லை.
5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் 37% கூடுதல் வரி செலுத்த வேண்டும். அந்த வகையில், 6 கோடியே 75 லட்சம் ரூபாய் கழிக்கப்படும், கடைசியாக, வருமான வரி மற்றும் கூடுதல் கட்டணம், அதாவது, ரூ.36,99,000 ஆகியவற்றின் மேல் 4% சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் விதிக்கப்படுகிறது.
எனவே அடிப்படையில், ரூ.25 கோடி பரிசுத் தொகையை வெல்பவர், மொத்தம் ரூ.12,11,74,000 கழிக்கப்பட்டு, இறுதியில் ரூ.12 கோடியே 88 லட்சத்து 26 ஆயிரம் கைக்கு கிடைக்கும்.
தொகுப்பு - கனிமொழி