கொரோனா ‘லாக்டவுன்’ ஓராண்டு நமக்கு கற்றுத் தந்த பாடங்கள் என்ன?
உலகையே உலுக்கி எடுக்கும் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் 22 ல் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் முதலாண்டு நிறைவில், சவாலான இந்த காலத்தை திரும்பி பார்க்கலாம்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு விட்டோம் என நிம்மதி பெருமூச்சு விடும் நிலைக்கு வந்துவிட்டோமா என்பது தெரியவில்லை. ஆனால், அண்மை கால வரலாற்றில் மிகவும் நெருக்கடியான ஓராண்டை உலகம் கடந்து வந்திருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி அமல் செய்யப்பட்ட பொது முடக்கம், நமது வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்டது.
பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, விமான பயணத்திற்குத் தடை விதிகப்பட்டு ஒவ்வொரு நாடும் தனித்தீவாக்கப்பட்ட நிலையில், அதுவரை சாதாரணமாக கருதப்பட்ட விஷயங்கள் கூட, சவால் மிக்கதாகி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் புதிய இயல்பு நிலை அறிமுகமானது.
கொரோனா பெருந்தொற்று உண்டாக்கிய புதிய யதார்த்தம், சோதனைகளையும், இன்னல்களையும் ஏற்படுத்தினாலும், பல விதங்களில் மனிதநேயத்தையும் வெளிபட்டுத்தி, இருளுக்கு மத்தியில் நம்பிக்கை ஒளிகீற்றையும் தோன்றச்செய்தது.
கொரோனா பொது முடக்கத்தின் ஓராண்டு நிறைவில், இந்த சோதனையான காலத்தின் முக்கிய நிகழ்வுகளையும் நினைத்துப்பார்க்கலாம் வாருங்கள்:
உலகம் ஒரு கிராமம்
2020ன் துவக்கத்திலேயே சீனாவில் ஒரு நூதன வைரஸ் அந்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உலகம் அறிந்து கொண்டது. ஆனால், சீனாவின் வூஹான் மாகாணத்தை முடக்கிப்போட்ட இந்த வைரஸ் உள்ளூரோடு நிற்கப்போவதில்லை, உலக அளவில் உலுக்கி எடுக்கப்போகிறது என்பதை அடுத்த சில வாரங்களில் உலகம் உணர்ந்தது.
விமானப் பயணங்களைத் தவிர்க்கும் வகையில், சர்வதேச கண்காட்சிகள் போன்றவை முதல் கட்டமாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து விதிக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் எல்லோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தினாலும், காத்திருந்த விபரீதத்தை பலர் உணரவில்லை.
ஆனால், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் பெருந்தொற்றாக உருவாகி இருக்கிறது என உலகச் சுகாதார அமைப்பு அறிவித்த போது, பேன்டமிக் எனப்படும் பெருந்தொற்றின் தீவிரத்தை உலகம் உணர்ந்தது.
இத்தாலிய சோகம்
கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவியதாக சொல்லப்பட்டாலும், இந்த வைரசுக்கு முதலில் அதிக விலை கொடுத்தது இத்தாலி தான். வைரஸ் பரவலை தடுக்க கட்டுப்பாடு தேவை என சொல்லப்பட்டதை, சராசரி மக்கள் அலட்சியம் செய்து வழக்கம் போல நடமாடியதன் விளைவாக, அந்நாட்டில் தொற்று பாதிப்பு தீவிரமாகி நோயாளிகளால் மருத்துவமனை படுக்களை நிறையத்துவங்கின.
வைரசின் தீவிரத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகத்துவங்கி உலகில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை கொண்ட நாடுகளில் ஒன்று என சொல்லப்படும் இத்தாலி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறியது.
மருத்துவமனை படுக்கைகளில் துவங்கி சுவாசக்கருவி வரை பற்றாக்குறை நிலவியதை பார்த்த போது, நிலைமை கட்டுக்குள் இல்லை என்பதை மற்ற நாடுகள் உணர்ந்து கொண்டன.
பொதுமுடக்கம் (லாக்டவுன்)
இத்தாலியை அடுத்து ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட, கொரோனா பரவலைத் தடுக்க, பொது முடக்கமே சிறந்த வழி என தீர்மானாமானது. விளைவு, பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மால்களும், சினிமா திரையரங்குகளும், மூடப்பட்டன. பள்ளிகளும், கல்லூரிகளும் கூட மூடப்பட்டன.
வீட்டுக்குள்ளேயே இருங்கள், அதுவே பாதுகாப்பு எனச் சொல்லப்பட்டது. பொதுமுடக்கத்தை அறிவித்த நாடுகள் பட்டியலில் மார்ச் மாதம் இந்தியாவும் இணைந்தது.
இல்லத்தில் இருந்தே பணி
இணையம் என்பது வரம் எனச் சொல்லப்பட்டாலும், இது எத்தனை உண்மை என்பதை எல்லோரும் உணரும் வாய்ப்பை பொது முடக்கச் சூழல் உண்டாக்கியது. அலுவலகத்திற்குச் செல்ல முடியாத நிலையில், நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் (வொர்க் ஃப்ரம் ஹோம்) வாய்ப்பை ஊழியர்களுக்கு வழங்கின.
லேப்டாப்பும், இணையமும் இருந்தால், வீட்டில் இருந்தே வேலை பார்த்துக்கொள்ளலாம் என்பது பெரும் ஆறுதலாக அமைந்தது. பணிகள் எல்லாம் ஓரேடியாக முடங்கிப் போய்விடும் அபாயத்தையும் இது தடுக்க உதவியது. திடிரென பார்த்தால் Work from home என்பது நம் காலத்து கருத்தாக்கமாக மாறியது.
இணையக் கல்வி
வீட்டில் இருந்தே பணி செய்வது போலவே, மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடம் படிப்பதையும் இ- லேர்னிங் எனப்படும் இணைய கல்வி சாத்தியமாக்கியது. மூட்டை போல பாடப்புத்தகங்களை சுமந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்கள், வீட்டில் இருந்தே லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போனில் ஜூம் வழியே ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கவனித்துக் கொண்டிருந்தனர்.
நூதன தண்டனை
பொது முடக்கம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை அவசியமாக்கிய நிலையில், இந்த கருத்தை வலியுறுத்துவதற்காக பலரும் படைப்பூக்கம் மிக்க வழிகளை நாடினர். படைப்பாளிகள் பலர், ஓவியங்கள், வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். காவல் துறையினரும் புதுமையான வழிகளில் விதிமுறைகளை வலியுறுத்தினர். விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அளிப்பதிலும் புதுமையை கடைப்பிடித்தனர்.
அறிவியலே துணை
கொரோனா பெருந்தொற்று பேரச்சத்தை உண்டாக்கியதோடு, வதந்திகளுக்கும் வழி வகுத்தது. வைரஸ் உருவான விதத்தில் துவங்கி, அது பரவும் விதம், பாதிக்கும் விதம் என பல விதங்களில், வதந்திகளும் பொய்ச்செய்திகளும் உலா வரத்துவங்கின. இதனால் உண்டான பெருங்குழப்பத்திற்கு மத்தியில் அறிவியலே வழிகாட்டியாக விளங்கியது.
கொரோனா வைரசின் தன்மை குறித்த உண்மை விவரங்களை வல்லுனர்களும், மருத்துவர்களும் அறிவியல்பூர்வமாக விளக்கம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்,. மருத்துவர்கள்/ வல்லுனர்கள் என்ன சொல்கின்றனர் கவனியுங்கள் என்பதே வழிகாட்டும் கருத்தாக அமைந்தது.
இந்திய வணக்கம்
கொரோனா தொற்றால் இந்தியாவும் பாதிக்கப்பட்டாலும், உரிய நேரத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது நிலைமை மோசமாக மாறாமல் தடுக்க உதவியது. அது மட்டும் அல்ல, சமூக இடைவெளியை பின்பற்றுவது புதிய நடைமுறையாக மாறிய சூழலில் கைகுலுக்கும் வழக்கம் கைவிடப்பட வேண்டியதானது.
இந்நிலையில், இந்தியர்களின் பாரம்பரியமான கைகூப்பி வணக்கம் சொல்லும் நடைமுறை பாராட்டை பெற்றது. இதே போல ஜப்பானியர்களின் தலை வணங்கி வணக்கம் சொல்லும் முறையும் ஏற்றதாக கருதப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வந்த போது நமஸ்தே சொன்னதும் பிரபலமானது.
பழைய நினைவுகள்
பொது முடக்கம், எல்லோரையும் வீட்டுக்குள்ளேயே இருக்கச்செய்வது அலுப்பூட்டுவதாக அமைந்தாலும், இதனால் கிடைத்த நேரம், குடும்பத்தினர் தங்களை இன்னும் நெருக்கமாக உணர்ந்து கொள்ள வழி செய்தது. கணவனும், மனைவியும், பெற்றோர்களும், பிள்ளைகளும் தங்களுக்குள் பேசிக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. பலரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
கற்றல் இனிது
மாணவர்கள் மட்டும் இணைய கல்வியில் ஈடுபடவில்லை: ஆர்வம் உள்ள பலரும் ஓய்வாக கிடைத்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர்ந்தனர். சிலர் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளும் வகுப்புகளை நாடினர் என்றால் மற்றவர்கள் தங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயங்களை கற்றுக்கொண்டனர்.
நடையாய் நடந்து...
நடுத்தர மக்கள் பொது முடக்க பாதிப்பை தட்டுத்தடுமாறி சமாளித்தாலும், விளிம்பு நிலை மக்கள் திக்கு முக்காடிப்போயினர். அதிலும் குறிப்பாக, பணி நிமித்தமாக நகரங்களுக்கு வந்திருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப்பிச் சென்றனர். போக்குவரத்து இல்லாத நிலையில், அவர்கள் கால் வலிக்க பல மைல்கள் நடந்தே சென்றது தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது.
இந்த சிக்கலுக்கு நடுவே பல நல்ல உள்ளங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி நிவாரணம் அளித்தனர்.
எல்லாம் மெய்நிகர் மயம்
ஜூம் போன்ற வீடியோ சந்திப்பு சேவைகள் பிரபலமான நிலையில், இலக்கிய கூட்டங்களும், கண்காட்சிகளும் கூட மெய்நிகர் வடிவமெடுத்தன. பேஷன் நிகழ்ச்சிகளும், பயிலறங்குகளும் இணையத்தில் திட்டமிடப்பட்டு மெய்நிகர் வடிவில் நடைபெற்றன. யுவர்ஸ்டோரியின் டெக் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இணையம் வழியே நடத்தப்பட்டன.
டிஜிட்டல் வங்கி
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவாக டிஜிட்டல் பரிமாற்றத்தின் அருமையை உணர்ந்திருந்த இந்தியர்களுக்கு கொரோனா சூழலில் டிஜிட்டல் பண பரிமாற்ற வசதி பேரூதவியாக அமைந்தது. இதற்கு மேலும் உதவும் வகையில் வங்கிகள், காண்டாக்ட்லெஸ் பரிவர்த்தனையையும் அறிமுகம் செய்தன. ஏடி.எம் மையத்திற்கு சென்றாலும், இயந்திரத்தில் கையை வைக்கலாமல் செயலி வழியே பணம் எடுக்க முடிந்தது.
மினிமலிசம்
பொது முடக்கச் சூழல் பணியிழப்பு மற்றும் ஊதியக் குறைப்புக்கு வித்திட்டதால் பலரும் சிக்கனத்தின் அருமையை உணர்ந்தனர். புதிய சூழலில் ஆடம்பரங்களை கைவிட்டு, அத்தியவாசியத் தேவைகளை உணர்ந்து கொண்டனர். பலரும் வீண் செலவுகளை தவிர்த்தனர். போதும் என்ற மனமே முக்கியம் என்பதை பலரும் உணர்ந்தனர்.
மனிதநேயம்
கொரோனா ஏற்படுத்திய நெருக்கடிக்கு மத்தியில், மருத்துவத் துறையினர் துவங்கி உணவு டெலிவரி ஊழியர்கள் வரை பலரும் தங்கள் செயல்பாடு மூலம் மனிதநேயத்தை தழைக்கச் செய்தனர். டாக்டர்களும், செவிலியர்களும் தங்கள் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் சேவை ஆற்றினர் என்றால், டெலிவரி ஊழியர்கள் பொருட்களைத் தூக்கிக் கொண்டு அலைந்து திரிந்து டெலிவரி செய்தனர்.
தடுப்பூசி நம்பிக்கை
கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியே சிறந்த வழி எனக் கருதப்பட்ட நிலையில், செயல்திறன் வாய்ந்த தடுப்பூசி உருவாக்கத்திற்கு தேவைப்படக்கூடிய காலம் அச்சுறுத்தியது. இந்த பின்னணியில் மருத்துவ வல்லுனர்கள், ஆய்வாளர்கள் அறிவியல் துணையோடு விரைந்து செயல்பட்டு வரலாறு காணாத வேகத்தில் தடுப்பூசியை உருவாக்கி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தியாவும் தன் பங்கிற்கு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி, மற்ற நாடுகளுக்கும் வழங்கி வருகிறது.