‘இந்தியாவில் 2022 ஜூன் மாதம் பிராட்பேண்ட் சேவை’ - ஒன்வெப் நிறுவனம் அறிவிப்பு!
இந்தியாவில் 2022 ஜூன் மாதம் பிராட்பேண்ட் சேவையை வழங்க ‘ஒன்வெப்’ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ’ஒன்வெப்’ நிறுவனம் பிராட்பேண்ட் இணைய சேவையை பல்வேறு தளங்களில் வழங்கி வருகிறது. உலக அளவில் எல்லா இடங்களிலும் அனைத்து மக்களுக்கும் செயற்கைக்கோள் இணைய பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. ஒன்வெப் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அரசாங்கங்கள், வணிக நிறுவனங்கள், தனிநபர்களுக்கான, செயற்கைக்கோள் வழியான இணையதள சேவையை வழங்கி வருகிறது.
இதனிடையே ஒன்வெப் நிறுவனத்தின் நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்திய தொலைதொடர்பு கோடீஸ்வரரும், பாரதி என்டர்பிரைசஸ் சேர்மனுமான சுனில் மிட்டல் ஒன் வெப்பின் புதிய நிர்வாகத் தலைவராகவும், நீல் மாஸ்டர்சன் ஒன்வெப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்றுள்ளார்கள்.
பாரதி குளோபல் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்தின் கூட்டமைப்பு, இங்கிலாந்து வணிக, எரிசக்தி மற்றும் தொழில்துறை வியூகத்துக்கான மாநில செயலாளர் மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் புதிய பங்குகளை முதலீடு செய்துள்ளது. 650 லியோ செயற்கைக்கோள்கள் மூலம் பல பகுதிகளில் பிராட்பேண்ட் இணைப்பு சேவைகளை வழங்க இந்த முதலீடு பயன்படும் என்றும் ஒன்வெப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
2021 இன் பிற்பகுதியில் இங்கிலாந்து மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் வணிக இணைப்பு சேவைகளை வழங்க செயற்கைக்கோள்களை ஏவ உள்ளது ஒன்வெப். மேலும் 2022க்குள் உலகளவில் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"2022 மே அல்லது ஜூன் மாதத்திற்குள், இந்தியா உட்பட உலக அளவில் இணைய சேவை விரிவாக்கப்பட்டிருக்கும்,” என்று சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் அக்டோபருக்குள் ஒன்வெப் சார்பில் 290 முதல் 300 செயற்கைகோள் நிறுவப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் வணிக சேவைகளுக்கான சோதனை அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கக்கூடும் என்று பி.டி.ஐ அறிக்கை குறிப்பிடுகிறது, இது இறுதியில் 2022 ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்.
"உலகம் முழுவதும் பிராட்பேண்ட் இணைப்பிற்கு அளவில்லா தேவை உள்ளது, மேலும் ஒன்வெபின் சமூக பணியைத் தொடர விரும்புகிறோம். சேவை செலவைக் குறைக்க எங்கள் கூட்டு முயற்சியை நாங்கள் பயன்படுத்துவோம். இது விண்வெளியில் ஒரு தொலைத் தொடர்பு நெட்வொர்க்," என்று மிட்டல் தெரிவித்துள்ளார்.