கனமழையில் ரோட்டில் ஆன்லைன் வகுப்பு: மகளுக்காக குடையுடன் தந்தையின் நெகிழ்ச்சி!
வைரல் புகைப்படம்!
கர்நாடகாவில் பெய்த கனமழைக்கு மத்தியில் ஒரு நபர் சாலையோரத்தில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் தனது மகளுக்காக கொட்டும் மழையில் குடை பிடித்த படம் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்டத்தில் சுல்லியா தாலுகாவில் உள்ள தொலைதூர கிராமமான பல்லகாவில் நடந்துள்ளது.
புகைப்படத்தில், 10ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி கொட்டும் கனமழையில் சாலையோரத்தில் அமர்ந்திருந்து ஆன்லைன் வகுப்பை கவனித்து கொண்டிருக்க, மழையில் அவரின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க அவரது தந்தை நாராயணா மகளுக்கு குடை பிடித்துக் கொண்டிருந்தார்.
இந்தப் படத்தை சல்லியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் மகேஷ் புச்சப்பாடி படம் பிடிக்க அது வைரலானது. சிறுமியின் ஊர் பகுதியில் இணைய வசதி கிடைப்பதில் சிக்கல் நிலவிவருகிறது. கிராமப்புற பகுதிகளில் இணையவசதியை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக அரசு இணைய சேவை திட்டத்தை நடத்தி வருகிறது.
எனினும், அந்த கிராமத்துக்கு இணைய வசதி கிடைக்கவில்லை. இதை அடுத்தே சிறுமி தினமும் சாலையோரம் வந்து ஆன்லைன் வகுப்பை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார். இதற்காக தினமும் மாலை 4 மணியளவில் சிறுமி அதே இடத்திற்கு வருவதாக கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக பேசியுள்ள பத்திரிகையாளர் மகேஷ்,
"இது அவர்களுக்கு தினசரி வழக்கம். இருப்பினும், இப்போது பெய்த கனமழையால், சிறுமியின் தந்தை ஒரு குடையை வைத்து மகளை ஆன்லைன் வகுப்பை கவனிக்க வைக்கிறார். இப்படிச் செய்தால் தான் அவரது மகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும். இங்கு மட்டுமல்ல, குட்டிகர், பல்லகா மற்றும் கமிலா பகுதி மாணவர்கள் இணைய வசதி இல்லாமல் வீடுகளுக்கு வெளியே சென்று ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வது இந்தப் பகுதிகளில் பொதுவானதாக காணப்படுகிறது," என்றுள்ளார்.
உள்ளூர்வாசிகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை நம்பியுள்ளனர். அப்பகுதியில் மின்வெட்டு இருக்கும்போது மொபைல் வேலை செய்யாது. எரிபொருளின் குறுகிய விநியோகமும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் 3 ஜி நெட்வொர்க் தேவை. ஆனால் அதுகூட இந்தப் பகுதியில் கிடைப்பதில்லை.
இணைய சிக்கல் தொடர்பாக பேசியுள்ள பி.எஸ்.என்.எல் நுகர்வோர் நிலையான அணுகல் முதன்மை பொது மேலாளர் ஜி.ஆர்.ரவி,
"அலைவரிசை இல்லாத பகுதிகளில் பாரத் ஏர் ஃபைபர் இணையம் வைத்திருப்பதன் மூலம் அதைத் தீர்க்க முயற்சிக்கிறோம்," என்றுள்ளார்.
தகவல் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் | தொகுப்பு: மலையரசு