கொரோனா சமயத்தில் ஆதரவாக அமைந்த ஃபேஸ்புக் குழுக்கள்: ஆய்வில் தகவல்!
ஃபேஸ்புக் மற்றும் கவ்லேப் இணைந்து நடத்திய ஆய்வில், பேஸ்புக் குழுக்கள் பெருந்தொற்று சூழலில், மற்றவர்களுக்கு இணையம் மூலம் ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில், இந்தியாவில் இணைய சமூகங்களின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதும், 92 சதவீத பங்கேற்பாளர்கள் இணைய சமூகங்கள் மூலம் ஆன்லைனில் ஏதேனும் ஒரு வகை ஆதரவை பெற்றிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இணைய சமூகங்களின் ஆற்றல் (“The Power of Virtual Communities”) எனும் தலைப்பிலான இந்த ஆய்வறிக்கை, என்.ஒய்.யூ டாண்டன் ஸ்கூல் ஆப் இஞ்சினியரிங்கில் உள்ள ’தி கவர்னன்ஸ் லேப்’ அமைப்பால், ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள மக்களில் 1.8 பில்லியனுக்கு மேல், மாதந்தோறும் ஃபேஸ்புக் குழுக்களை பயன்படுத்துவதாகவும், பயனாளிகளில் பாதி பேருக்கு மேல், ஐந்து அல்லது மேற்பட்ட குழுக்களில் இடம்பெற்றிருப்பதாகவும், 70 மில்லியனுக்கு மேலான நிர்வாகிகள் மற்றும் மாடரேட்டர்கள் இந்த குழுக்களை இயக்கி வருவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சர்வதேச அளவில் 29.5 % பேர் இணைய குழுக்கள் ஆதரவாக அமைந்ததாக தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவில், 38.8 % பேர் ஆன்லைன் குழுக்கள் முக்கியமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பொது முடக்கத்தின் போது மளிகைப் பொருட்கள் வாங்க உதவி செய்வது, முக்கிய மருத்துவ தகவல்களை பகிர்வது என ஆன்லைன் குழுக்கள் ஆதரவாக அமைந்ததாக சர்வதேச அளவில் 91% பேர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 5.5 மில்லியன் பேருக்கு மேல் பெற்றோர்களுக்கான ஃபேஸ்புக் குழுவில் தீவிரமாக உள்ளனர். இந்தியர்களில் 43.8% பேர், இணைய குழுக்களில் ஒருவராக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
“மக்கள், ஃபேஸ்புக் குழும செயலிகளை தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும், ஆதரவான சமூகத்தை உருவாக்கவும் பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த இணைய சமூகங்கள் எத்தனை முக்கியமானவை என பெருந்தொற்று உணர்த்தியிருக்கிறது,” என ஃபேஸ்புக் இந்தியா துணை த்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் கூறியுள்ளார்.
”டிஜிட்டல் சமூகங்கள், பகிர்ந்து கொள்ளக்கூடிய குணம் அல்லது ஆர்வம் அடிப்படையில் மக்களை ஒன்றிணைத்துள்ளன மற்றும் மக்கள் ஆதரவு மற்றும் பரிவை எதிர்பார்ப்பதற்கான வெளியாக அமைந்துள்ளன,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்விற்காக, GovLab அமைப்பு, 17 நாடுகளில் உள்ள 50 ஃபேஸ்புக் குழு தலைவர்களை, 11 நாடுகளில் உள்ள டிஜிட்டல் சமூக வல்லுனர்களை நேர்காணல் செய்தது. இதைத்தவிர ஃபேஸ்புக் உள் ஆய்வு மற்றும் 15 நாடுகளில் ஃபேஸ்புக் குழுக்கள் பயன்பாடு தொடர்பான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
மாற்று கருத்துகளை வரவேற்பது, சிறந்த முறையில் தொடர்பு கொள்வது மற்றும் தார்மீக பொறுப்புடன் செயல்படுவது ஆகியவை தலைவர்களின் மூன்று முக்கியப் பங்காக விளங்குவதாக நேர்காணலில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டும் உலகம் முழுவதும், பலரும் ஆன்லைன் குழுக்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் நம்பும் விஷயம் தொடர்பான சமூகங்களை உருவாக்கிக் கொள்ள இது உதவியது.
இந்த குழுக்களுக்கு உதாரணமாக திகழும், இந்தியாவின் ஹியூமன் கைண்ட் குளோபல், பெங்களூருவில் உதவி தேவைப்படுபவர்களுக்கான தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க துவக்கப்பட்டு, 50,0000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
அதே போல ஃபர்ஸ்ட் மாம்ஸ் கிளப் எனும் பெற்றோர் குழு, பெருந்தொற்று நடுவே தாய்மை அடைந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
“கடந்த ஆண்டு மார்ச் மாதம், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது, முதல் முறை தாய்மை அடைந்தவர்களுக்கு மன அழுத்தம் போக்க நகைச்சுவையை மருந்தாக அளிக்க தீர்மானித்தோம்,” என்கிறார் ஃபர்ஸ்ட் மாம்ஸ் கிளப் நிறுவனர் ருசிதா ஷா.
நீண்ட கால நோக்கில் ஃபேஸ்புக் குழுக்கள் ஒரு சமூகமாக எப்படி செயல்படும் என்பதை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றாலும், இத்தகைய குழுக்களின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.