ஆளைக் கொல்லும் லோன் ஆப்ஸ்: அலர்ட்டாக இருப்பது எப்படி?
முன்பெல்லாம் லோன் வாங்க வங்கிகளுக்கு லோ- லோவென அலைய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அதெல்லாம் தேவையில்லை. இதற்கென ஏராளமான ஆப்ஸ் ஆன்லைனில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை மொபைலில் டவுன்லோடு செய்து சில தகவல்களை அளித்தால். உடனடியாக கடன் கிடைக்கும், கூடவே தொல்லைகளும்...
டிஜிட்டல் மயமாகிவரும் உலகில் எல்லாமே ஆன்லைன் மூலம்தான் நடைபெறுகிறது. வீட்டு வாடகை, கரண்ட் பில், போன் பில் எனத் தொடங்கி, வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைன் மூலமே கிடைக்கிறது.
எந்தளவுக்கு இவை நமக்குப் பயன்படுகிறதோ, அந்தளவுக்கு இந்த ஆன்லைன் பயன்பாட்டில் சில கெடுதல்களும் உள்ளன. ஆம், சமீபத்தில் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டுக்கு இளைஞர்களும், சிறுவர்களும் அடிமையாகித் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அரசு இதனை தடை செய்தது.
அடுத்ததாக, ஆன்லைன் ரம்மி என சூதாட்டம் சிலரின் உயிரைப் பறித்தது. இதையும் அரசு தடை செய்தது. இப்போது புது அரக்கனாக ஆன்லைனில் கடன் வழங்கும் ஆப்-ஸ் தோன்றி, பலருக்கும் கடன் வழங்கி, இறுதியில் அவர்களின் உயிரைக் குடித்து வருகிறது.
முன்பெல்லாம் லோன் வாங்க வேண்டுமென்றால் வங்கிகளுக்கு லோ- லோவென அலைய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அதெல்லாம் தேவையில்லை. இதற்கென ஏராளமான ஆப்ஸ் ஆன்லைனில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை மொபைலில் டவுன்லோடு செய்து முகவரி, வங்கிக் கணக்கு போன்ற சில தகவல்களை அளித்தால் போதும். உடனடியாக ஆபத்பாந்தவன் போல கடன் தொகையை வழங்கி விடுகின்றனர்.
அதற்குப் பிறகுதான் சிக்கலே தொடங்குகிறது. அவர்கள் வழங்கும் அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கிய கடனை கட்டவில்லை என்றால், வட்டிக்கு வட்டி போட்டு, அது குட்டி போட்டு வாங்கிய கடன் பத்து மடங்குக்கு மேலாகி, கடன் வாங்கியவரின் பாடு திண்டாட்டமாகி விடுகிறது.
கடனை கட்டவில்லையென்றால் கடன் வாங்கியவரின் மொபைலில் உள்ள அவரின் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து மிகவும் அருவெறுப்பாக, ஆபாசமாக கடன் வாங்கியவரைப் பற்றி பேசுகின்றனர் இந்த ஆப் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள்.
சில ஆப் நிறுவனங்கள் அதற்கும் ஓர் படி மேலே போய் மொபைல் கேலரியில் உள்ள படங்களைத் திருடி (குறிப்பாக பெண்கள்) மார்பிங் செய்வது, பிளாக்மெயில் செய்வது என கடன்வாங்கியவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி கடனை வசூலிக்கின்றன.
கடனை கட்ட இயலாத சிலர் அவமானம் தாங்காமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் கூட புத்தாண்டையொட்டி, இதுதொடர்பான வழக்கில் இரு சீனர்களை போலீஸார் கைது செய்து உள்ளனர். இதுபோன்ற ஆப்-களின் பின்னணியில் பெரும்பாலும் சீனர்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.
இவர்கள் இதற்கெனவே 100 பேர் கொண்ட ஓர் டெலிகாலிங் குரூப்பை உருவாக்கி, அவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் ஊதியம் வழங்கி, தினசரி 10 நபர்களையாவது தொடர்பு கொண்டு, அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி பணத்தை வசூல் செய்யும் டெக்னிக்கை கையாண்டு வருவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அரசு கடும் சட்டம் போட்டு ஓடுக்கிய கந்து வட்டியே இப்போது டிஜிட்டல் வடிவில் வந்து மக்களை பாடாய்படுத்தி, ஓர் கட்டத்தில் உயிரையே எடுத்து விடுகிறது என்கின்றனர் இதுகுறித்து விவரம் அறிந்த சிலர்.
இதுகுறித்து ippo pay நிறுவனரும், CEO மோகன் பால் நம்மிடம் கூறியதாவது,
“முன்பெல்லாம் பெரிய பெரிய நிறுவனங்களில் மட்டும்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இருக்கும். ஆனால் இப்போது பெட்டிக்கடை, பெட்ரோல் பங்க், மளிகைக் கடை என அனைத்து இடங்களிலும் பல்வேறு பணபரிமாற்ற ஆப்-களை பயன்படுத்தி வணிகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.”
இன்று இதேபோல ஏராளமான ஆப்ஸ் பல்வேறு விதமான சலுகைகளையும், பணப்பரிமாற்ற வசதிகளையும் வழங்குகின்றன. மேலும், நாடு முழுவதும் ஏராளமான வங்கிகள் நிறைந்திருந்தும், மக்கள் ஏன் இந்த லோன் ஆப்களை நாடிச் செல்லவேண்டும் என நாம் கேட்டதற்கு,
“பொதுவாக சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளவர்களுக்கு எளிதாக வங்கிகளில் லோன் கிடைக்காது. மேலும், போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் கடன் கிடைத்தால் போதும் என்ற மனப்பான்மையில் செயல்படுவதே லோன் ஆப்ஸ்களின் எண்ணிக்கை பெருகியதற்குக் காரணம்,” என்கிறார் மோகன்.
பொதுவாக ஓர் வங்கியிலோ அல்லது ஆப்-ல் லோன் வாங்கும்போது, அது எந்தளவுக்குப் பாதுகாப்பானது என்பதை பார்க்கவேண்டும். வட்டி விகிதம் எவ்வளவு எனக் கணக்கிடவேண்டும்.
ஆனால், சில வெளிநாட்டு ஆப்ஸ் கடன் பெற விரும்பி, தங்களின் ஆப்ஸை, மொபைலில் பதிவிறக்கும் செய்பவரின் மொபைலில் உள்ள அனைத்து எண்கள், வங்கி விவரங்கள், கேலரியில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எடுத்துவிடுகின்றனர்.
”இதனால் கடன் பெற்றவர் கடனைக் கட்ட முடியாமல் திண்டாடும்போது, இந்த விவரங்களை வைத்து அவர்களை டார்ச்சர் செய்து, பணத்தை வசூலிக்கின்றனர். பெரும்பாலான ஆப்ஸ் 35% வரை கூட வட்டி வசூலிப்பதாகக் கூறப்படுகிறது,” என்று எச்சரித்தார்.
மேலும், ippo pay கூட தங்களின் நீண்ட கால வாடிக்கையாளர்களில் நன்மதிப்பை பெற்றவருக்கு தங்களின் தொழில் கூட்டாளியாக உள்ள ஆப்ஸ் மூலம் கடன் உதவி வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அது முழுக்க முழுக்க இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற, மக்களுக்கு நன்மை பயக்கும், மிக நம்பகமான கடனுதவி வழங்கும் ஆப் ஆக இருக்கும்.
எனவே மக்கள் ஆப்-கள் மூலம் கடன் பெற திட்டமிடும் போது முதலில் அந்த ஆப், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டதா என பார்க்கவேண்டும். மேலும், அந்த கடன் வழங்கும் ஆப் உரிய லைசென்ஸ் பெற்று அரசின் அனுமதியுடன்தான் இயங்குகிறதா என்பதை தெரிந்து உறுதிப்படுத்திக் கொண்டு பிறகு பயன்படுத்தவேண்டும் என சரியான லோன் ஆப்ஸை தேர்ந்தெடுக்க அறிவுறுத்துகிறார் மோகன்.
இதுபோன்ற ஆப்ஸ் மூலம் கடனுதவி வழங்குவதை நிறைய ஸ்டார்ட்ஆப் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு ஏராளமான முதலீட்டாளர்களும் உள்ளனர்.
செல்வம் கொழிக்கும் தொழிலான இதற்கு, பெரும்பாலான ஸ்டார்ட்-அப்கள், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறுவதில்லை. அவ்வாறு பெற்று தொழில் செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மக்கள் விரோதபோக்கை கடைப்பிடிப்பதில்லை. எனவே மக்கள் தான் விழிப்புணர்வோடு தரமான ஆப்ஸை கண்டறிந்து பயன்படுத்த வேண்டியுள்ளது.
லோன் ஆப்ஸ் குறித்து தனியார் மென்பொருள் நிறுவன CEO பிரதீப் தெரிவித்ததாவது, இந்த கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் பெரும்பாலான மக்களிடம் அடிப்படைத் தேவைகளுக்கு கூட பணம் இல்லை. இதனால் மக்கள் கடன் எங்கு கிடைத்தாலும் வாங்கும் மனநிலையில் உள்ளனர். கந்து வட்டியை அரசு தடை செய்துள்ள நிலையில், டிஜிட்டல் முறையில் கந்து வட்டி தொடர்கிறது.
இந்த லோன் ஆப் நிறுவனங்கள் எங்கு செயல்படுகின்றன என்பது வாடிக்கையாளர் உள்பட யாருக்கும் தெரியாது. வாடிக்கையாளர் ஆப் மூலமாக விண்ணப்பித்து, வங்கிக் கணக்கில் வேண்டிய கடன் தொகையை பெற்று விடுகிறார். ஆனால் கட்டத் தவறினால் ஏற்படும் விபரீதங்கள் பின்னால்தான் தெரிய வருகிறது.
வெறும் 7 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய ஓர் பெண் ரூ.1 லட்சம் வரை செலுத்த வேண்டி நிர்பந்திக்கப்பட்டது சமீபத்தில் நிகழ்ந்தது. இவ்வாறு கடன் பெற்று, கட்ட முடியாமல் ஓர் வேளாண்மை பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் ஓர் வாடிக்கையாளர் கடன் கட்டவில்லை என அவரின் மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து போட்டதால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு பாதுகாப்பற்ற சீன ஆப்ஸ் பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டவர்களின் லிஸ்ட் தொடர்ந்து பெருகி வருகிறது. குறிப்பாக இந்தியாவில்தான் இதுபோன்ற லோன் ஆப்ஸ் பதிவிறக்கம் செய்வதும் அதிகமாக இருக்கிறது.
பணத்தை பரிமாற்றம் செய்யும் வழிமுறையை யார் வேண்டுமானாலும் எளிதாக உருவாக்கலாம் என்ற நிலையே தற்போது நிலவுகிறது. இதன் மூலம் கருப்புப் பணம் கூட எளிதில் பரிமாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. 10 நாளில் ஓர் ஆப் உருவாக்கி, யார் வேண்டுமானாலும் இந்த கடன் வழங்கும் தொழிலை செய்யலாம் என்ற நிலையே தற்போது உள்ளது என்பது கவலையளிக்கும் விஷயமாகும்.
”இந்திய ரிசர்வ் வங்கிக் கடன் வழங்கும் ஆப்ஸை வரைமுறைப்படுத்த வேண்டும். முறையற்ற கந்து வட்டி வசூலிக்கும் ஆப்-களை அரசு தடை செய்யவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணம் எங்கிருந்து வருகிறது. யார் இதில் முதலீடு செய்கிறார்கள் எந்த நாடு இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறது என்பதையெல்லாம் அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்கிறார் பிரதீப்.
வாங்கிய கடனை கட்டினாலும், இந்தப் பிரச்னைகளில் இருந்து வெளியே வர முடியுமா எனத் தெரியவில்லை. எனவே மக்கள்தான் நம்பகமான இந்திய நிறுவனங்கள் உருவாக்கும் ஆப்ஸ் மூலம் மட்டுமே கடனுதவி பெற வேண்டும். ஏனெனில் இதுபோன்ற கண்ணுக்குத் தெரியாத, அறிமுகம் இல்லாத வெளிநாட்டு ஆப்-களை நம்பி, பின் சிக்கலில் மாட்டாமல் இருக்க விழிப்புடன் இருக்கவேண்டியது மக்கள்தான்.