‘ஆக்சிஜன் ஆட்டோ’ - அவசர நேரத்தில் உயிர்காக்கும் வடசென்னைக்காரர்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்கத் தேடும் ஆக்சிஜனை ஆட்டோ ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகின்றனர் வடசென்னை இளைஞர்கள்.
கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுவிட சிரமப்படுவது போல நோயாளிகளின் காத்திருப்பால் தமிழகத்தின் மருத்துவமனைகளும் சுவாசிக்க முடியாமல் எமெர்ஜென்சி நிலையில் தான் இருக்கின்றன. மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த அலையானது வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 4 நாட்களுக்குள் மூச்சுத்திணறல் ஏற்படுத்துவதால் ஆக்சிஜன் தேடி மருத்துவமனைக்கும், ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் நாட வேண்டி இருக்கிறது.
‘கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் தேவை’ என்ற தகவலைப் பார்க்காமல் சமூக வலைதளங்களையோ அல்லது வாட்ஸ் அப்பையோ நாம் ஒரு நாளில் கடந்து விட முடியாது. இத்தகைய தேவை இருப்பதை கருத்தில் கொண்டு வடசென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் நிதியைக் கொண்டு கொரோனா நோயாளிகளின் அவசரத்திற்கு கைகொடுக்கும் வகையில் ஆட்டோவிலேயே ஆக்சிஜனை சுவாசிக்கும் திட்டத்தை செயல்படுத்தி பலரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். அவர்களில் ஒருவரான வசந்தகுமாரிடம் இந்த எண்ணம் எப்படி தோன்றியது என்று கேட்டோம்.
கொரோனாவிற்கு முன்பிருந்தே பல்வேறு சமூகப் பணிகளை நான் செய்து வருகிறேன். நான் அக்மார்க் வடசென்னைவாசி, பிறந்து வளர்ந்தது எல்லாமே தண்டையார்பேட்டையில் தான். அங்குள்ள அரசுப்பள்ளியில் படித்து, டிப்ளமோ முடித்து பின்னர் முதுநிலை பட்டம் வரை பயின்றிருக்கிறேன். பொறியியல் சார்ந்த சுயதொழில் ஒன்றை செய்து வருகிறேன்.
பள்ளிப்பருவத்தில் எனக்குக் கிடைக்காததை மற்ற மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக கடமை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையை தொடங்கினேன். என்னுடைய நண்பர்கள் குழுவின் உறுப்பினர்களாக இருக்கின்றனர், 200 தன்னார்வலர்களும் என்னுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
அந்த அறக்கட்டளை மூலம் சிறுவர்களுக்கான கற்றல் வகுப்புகள், இதர பயிற்சிகளான ஆங்கிலம் மற்றும் கணினி வகுப்பு, ரத்த தானம், பெண்களுக்கு தொழில்முறை பயிற்சி என பலவற்றை செய்து வருகிறோம்.
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது பொதுமக்களுக்கு மாஸ்க், சானிடைசர் விநியோகிப்பது, மார்க்கெட்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது போன்ற பணிகளைச் செய்தோம். இரண்டாவது அலையின் தீவிரம் மோசமடைந்து வருவதை கவனத்தில் கொண்டு இதற்காக மக்களுக்கு பயன்படக்கூடிய ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
ஆக்சிஜன் தேடி மக்கள் அலைந்து வருவதால் அதற்கு உதவும் வகையில் எதாவது செய்யலாம் என்று நினைத்த போது தான் ஆட்டோ ஒன்றை புதிதாக வாங்கி அதில் 47 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி மக்களின் அவசர தேவைக்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணம் பிறந்தது.
தொடக்கத்தில் என்னுடைய இந்த முடிவிற்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் எதிர்ப்பு இருந்தது. கொரோனா பரவுகிறது வீட்டிலேயே இருங்கள் என்று எச்சரிக்கப்படும் நிலையில், இந்த சேவை தேவை தானா என்று எல்லோரும் என்னிடம் கேள்வி எழுப்பினர்.
சேவை செய்ய முடிபவர்களும் வீட்டிலேயே முடங்கி விட்டால் யார் தான் மக்களைக் காப்பாற்றுவது என்று அவர்களுக்கு பதில் கூறி விட்டு யாரையும் உதவிக்கு அழைக்காமல் நானே ஆட்டோவை ஓட்டத் தொடங்கினேன் என்கிறார் வசந்தகுமார்.
வடசென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படுவோர்கள் எங்களை அணுகலாம் என்று தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தேன்.
ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்ட அழைப்புகள் எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கதறுவதே தொடர்ந்து செயல்படும் மனநிலையை ஏற்படுத்தியது.
இரு வாரங்களுக்கு முன்னர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து கடனில் தான் ஆட்டோவை வாங்கினேன், நண்பர் மூலமாக ஆக்சிஜன் பெற்று ஆட்டோவில் பொருத்தி நோயாளிகளுக்கு இலவசமாக மூச்சுக்காற்றை கொடுத்து அவர்களின் உயிர் காக்க உதவியாக இருந்தது இந்தப் பிறவிக்கான திருப்தியை கொடுத்திருக்கிறது என்கிறார்.
இதில் மிகப்பெரிய சவாலே சிறிய ஆட்டோவில் பெரிய சிலிண்டரை எப்படி பொருத்துவது என்பது தான் ஆனால் அதையும் செய்து காட்டினேன்.
1 வாரம் இரவு பகல் பாராமல் நான் இப்படியே செயல்படுவதைப் பார்த்து நான் அழைக்காமலேயே என்னுடைய நண்பர்கள் மற்றும் ஓட்டுனர்கள் தாமாக முன் வந்து ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓட்ட மனம் உவந்தனர்.
இப்போது 7 பேர் கொண்டு 2 ஆட்டோக்களில் ஆக்சிஜன் வழங்கும் சேவையை செய்து வருகிறோம். சேவை செய்வது அவசியம் என்றாலும் என்னை நம்பி வந்தவர்களின் உயிரும் முக்கியம் என்பதால் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உடைகள், முகக்கவசம், கிருமி நாசினி, சானிடைசர் என அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆக்சிஜன் எடுத்துக்கொள்வதற்காக வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு ஆக்சிஜன் மாஸ்க், அந்த நோயாளி சென்ற பின்னர் முழுவதும் ஆட்டோவை சானிடைஸ் செய்து விட்டு மற்றவரை அனுமதிப்பது என்ற விதிகளைப் பின்பற்றுகிறோம்.
இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விஷயம் கொரோனா நோயாளிக்கு ஒரு நிமிடத்திற்கு 8 லிட்டர் ஆக்சிஜன் கொடுக்க வேண்டும் செறிவூட்டிகளால் 5 லிட்டர் ஆக்சிஜனையே கொடுக்க முடியும், மக்கள் வீதிகளில் அலைபாய்வதைப் பார்க்கும் போது மனம் கணக்கிறது.
எங்களுக்கு வரும் அழைப்புகளை தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக தனியாக ஒரு ‘வார் ரூம்’ அமைத்து அழைப்புகளுக்கு பதில் தர உறுப்பினர்களை நியமித்திருக்கிறோம். ஆட்டோவில் நீண்ட தூரம் செல்லாமல் அருகில் இருப்பவர்களுக்கு உதவுகிறோம் ஏனெனில் ஒவ்வொரு இடமாக தேடி அலைவதைவிட அந்த நேரத்தில் ஒரு உயிரைக் காப்பாறலாம், ஏனெனில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது.
தாம்பரம், சென்னைப் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் அழைப்புகளையும் தவற விடுவதில்லை அவர்கள் சொந்த வாகனம் வைத்திருந்தால் அருகில் இருக்கும் இடத்திற்கு வரவைத்து அங்கு எங்களது ஆட்டோவை எடுத்துச் சென்று ஆக்சிஜன் கொடுக்கிறோம்.
நோயாளிகளிடம் இருந்து இந்த சேவைக்காக எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. கட்டுக்கட்டாக பணத்தை அள்ளிக் கொடுப்பவர்களிடம் கூட நீங்கள் குணமடைந்து வீடு திரும்பினால் போதும் என்று மட்டுமே சொல்லி அனுப்புகிறோம் என்று நெகிழ்கிறார் வசந்தகுமார்.
எனினும், பலனடைந்தவர்களின் குடும்பத்தினர் ஓட்டுனர்களுக்கான பாதுகாப்புக் கவசங்கள், முகக்கவசங்களை கொடுத்துச் செல்கின்றனர், அதனை நாங்கள் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறோம்.
நாளுக்கு நாள் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு இருப்பதோடு அனைத்திலும் ரூ.50 முதல் ஆயிரக்கணக்கில் விலையேற்றம் கண்டிருக்கிறது.
எனவே, இந்த சேவையை தொடர முடியாமல் போய்விடுமோ என்பதால் நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறோம். வசந்தகுமாரின் ‘கடமை அறக்கட்டளை’க்கு நிதியுதவி செய்ய விரும்புபவர்கள் கூகுள் பே மூலம் 9840218142 என்ற எண்ணில் நன்கொடை கொடுக்கலாம்.