மேரி கோம், பி.வி சிந்துவுக்கு பத்ம விருதுகள்!
நாட்டின் 71-வது குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் இடம்பெற்ற 8 விளையாட்டு வீரர்களில் மேரி கோம் மற்றும் பி.வி சிந்து இடம்பெற்றுள்ளனர்.
குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு இரண்டாவது உயரிய விருதான ’பத்ம விபூஷண் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவுக்கு ’பத்ம பூஷன் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேரி கோம், பி.வி. சிந்து உட்பட மொத்தம் எட்டு விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 71-வது குடியரசு தின விழாவையொட்டி பதம் விருதுகளை அரசாங்கம் அறிவித்தது.
36 வயதான மேரி கோம் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருதிற்கு தேர்வாகியுள்ள ஏழு பிரபலங்களில் இவரும் ஒருவர்.
மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமிற்கு 2013ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் 2006ம் ஆண்டு ’பத்ம ஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டது. செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், மலையேற்ற வீரர் எட்மண்ட் ஹிலாரி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு 2008ம் ஆண்டு உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த வரிசையில் பத்ம விபூஷண் விருதினைப் பெறும் நான்காவது விளையாட்டு வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் மேரி கோம்.
அதன்பிறகு 2014-ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நாட்டின் மூன்றாவது உயரிய விருதாக கருதப்படும் பத்ம பூஷன் விருது 16 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 24 வயதான சிந்துவும் ஒருவர். இவர் 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பேட்மிண்டன் போட்டிகளில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையும் சிந்து பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு தங்கப் பதக்கம் வென்றது மட்டுமல்லாமல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கம் என நான்கு பதக்கங்களையும் சிந்து வென்றுள்ளார். இவர் 2015ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், ஆண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் எம்பி கணேஷ், துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய், மகளிர் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஒய்னாம் பெம்பெம் தேவி, வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் ஆகிய ஆறு விளையாட்டு வீரர்களும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள 118 பேர் அடங்கிய பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
41 வயதான கிரிக்கெட் வீரர் ஜாகீர் நாட்டின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். பாரம்பரிய டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கபில் தேவை அடுத்து இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. ஜாகீர் இந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.
25 வயதான ராணி ராம்பால் 200-க்கும் அதிகமான போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடியுள்ளார். சமீபத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அமெரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்க இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற ராணி ராம்பால் உதவினார்.