‘அபாய பாம்புகளை அநாயசமாக பிடிக்கும் இருளர்கள்’ - பத்மஸ்ரீ விருது பெறும் 5 தமிழர்கள் பட்டியல் இதோ!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அபாயமான பாம்புகளையும் அச்சமின்றி பிடித்துவிடும் உலக அளவில் புகழ் பெற்ற தமிழகத்தின் இருளர் சமூகத்தை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மா.சி.சடையன் இடம்பெற்றுள்ளனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கலை, இலக்கியம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் விதமாக உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது.
பத்ம விருதுகள் 2023 அறிவிப்பு
2023ம் ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. 26 அறியப்படாத முகங்கள் உள்பட 106 பேருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்ப்டடுள்ளன.
6 பேருக்கு பத்ம விபூஷண்
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண், மறைந்த திலீப் மஹாலனாபிஸூ அவருகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் ஐந்து கோடிக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியதாக மதிப்பிடப்பட்ட ஓரல் ரீஹைட்ரேஷன் சிஸ்டம் அல்லது ORSஇன் பரவலான பயன்பாட்டிற்கு வழிவகுத்தவர், திலீப்.
மறைந்த உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, சிறந்த இந்திய தபேலா கலைஞர் ஜாகீர் உசேன் மற்றும சிறந்த இந்திய கட்டிடக் கலை வல்லுநரான பாலகிருஷ்ண தோஷி உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தோஷி கடந்த 24ம் தேதி காலமான நிலையில் அவருக்கு பத்மவிபூஷன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வாணி ஜெயராம், சுதா மூர்த்திக்கு பத்ம பூஷண்
தொழிலதிபர் குமார் மங்களம் பிர்லா, சமூக செயற்பாட்டாளர் சுதா மூர்த்தி மற்றும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்ட 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருதுகள்
அந்தமானின் ஜாரவா பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய ஓய்வு பெற்ற மருத்துவர் ரத்தன் சந்த்ர கர், குஜராத்தின் சித்தி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அந்தப் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுத்த 62 வயது சமூக சேவகி ஹிராபாய் லோபிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த 79 வயது நாட்டுப்புறக் கலைஞர் ராணி மாச்செய்யா, 72 வயது முனி வெங்கடப்பா, தெலங்கானாவைச் சேர்ந்த 80 வயது மொழி ஆராய்ச்சியாளர் ராமகிருஷ்ணா ரெட்டி,புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதி, RRR உள்ளிட்ட தெலுங்கு சினிமாவின் மிகப் பிரபலமான இசையமைப்பாளரான மரகதமணி என்னும் எம்.எம்.கீரவாணி, கேரளாவைச் சேர்ந்த 99 வயது காந்தியவாதி அப்புக்குட்டன், சிக்கிமைச் சேர்ந்த 98 வயது இயற்கை விவசாயி துலா ராம், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 102 வயது இசைக் கலைஞர் மங்கள கந்திராய், நடிகை ரவீணா தாண்டன் உள்ளிட்ட 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது மத்திய அரசு
தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர்
சத்தமின்றி சமூகத்திற்காக சாதனை செய்து வரும் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் பத்மஸ்ரீ விருதுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
- பாலம் கல்யாண சுந்தரம் - நூலகரும் சமூக சேவகருமான கல்யாணசுந்தரம் பாலம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். நூலக அறிவியலில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள இவர் தனது 35-ஆண்டு கால நூலகப் பணியில் சம்பாதித்த சொத்துகள், அமெரிக்க அரசு பரிசாகக் கொடுத்த 30 கோடி தான் பேராசிரியராக சம்பாதித்த ரூ.30 லட்சம் அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்த வள்ளல். ஏழைகளுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரை நடிகர் ரஜினிகாந்த் தத்தெடுக்க முன்வந்த போது அதையும் மறுத்தார்.
2. கே. கல்யாண சுந்தரம் பிள்ளை - ஏழு தலைமுறைகளாக தஞ்சாவூர் பரதக் கலையை கற்றுக் கொடுத்து வரும் மூத்த பரதநாட்டியக் கலைஞரான கல்யாண சுந்தரம் பிள்ளைக்கு கலைப் பிரிவின் கீழ் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளாக பரதக் கலையை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தனது குடும்பத்தினரின் வழித்தோன்றலாக தானும் அதனை கற்றுத் தந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசின் இந்த மகத்தான விருது மகிழ்ச்சி அளிப்பதாக கல்யாண சுந்தரம் பிள்ளை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விருதினை தனது குருகள் தஞ்சாவூர் கருப்பையா பிள்ளை, கோவிந்த ராஜ பிள்ளை, மகாலிங்கம் பிள்ளை உள்ளிட்டோருக்கு அவர் சமர்பித்துள்ளார்.
3. மருத்துவர் கோபால் வேலுச்சாமி - சித்த மருத்துவ மேதையான இவர், இந்தியாவின் டாப் 10 சித்த மருத்துவ நிபுணர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றி 2007ல் ஓய்வு பெற்றார். கோவில்பட்டியில் MediSiddh Pharmaceutical என்ற பெயரில் சித்த மருத்துவ மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார். சித்த மருத்துவ முறையை ஊக்குவிக்கும் விதமாக தனக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மருத்துவர் கோபால் வேலுச்சாமி.
4.வடிவேல் கோபால் – செங்கல்பட்டு மாவட்டம் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்வர் வடிவேல் கோபால். சிறு வயது முதலே பாம்பு பிடிக்கப் பழகியவர் பின்னர் அதையே தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளார்.
“கடுமையான விஷம் கொண்ட ராஜநாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என எந்த பாம்பாக இருந்தாலும் அதனை பிடித்துவிடுவேன். எங்களின் திறமையைப் பார்த்து மலைப்பாம்புகளைப் பிடிப்பதற்காக அமெரிக்காவிற்கு அழைத்து சென்றனர். எண்ணிக்கை வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு பாம்புகளை பிடித்திருக்கிறோம். எங்களுடைய மூதாதையர் கற்றுத் தந்த தொழில் இன்று எங்களுக்கு வாழ்வாதாரத்தோடு விருதைப் பெறும் அளவிற்கு புகழையும் பெற்று தந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. எங்களின் பிள்ளைகள் கல்வி படித்தாலும் அவர்களுக்கும் பாம்பு பிடி தொழிலை கற்றுத் தருவோம், பத்ம ஸ்ரீ விருது அறிவித்த அரசுகளுக்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார் வடிவேல்.
5.மாசி சடையன் - தலைமுறை தலைமுறையாக பாம்பு பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். 16 வயது முதலே பாம்பு பிடிப்பதற்கான பயிற்சி எடுத்து இருளர் சமூகத்தில் பதிவு செய்து பாம்பு பிடிப்பதை செய்து வருகிறோம்.
"அரசு அறிவித்த விருதின் பெயரைக் கூட சொல்லத் தெரியாது எனக்கு படிப்பறிவு இல்லை, ஆனால் உயிரை பணயம் வைத்து நாங்கள் இத்தனை ஆண்டுகள் செய்து வந்த வேலைக்கு அரசாங்கம் கொடுத்திருக்கும் பாராட்டுக்கு நன்றி,“ என்று சடையன் ஊடக பேட்டியில் தெரிவித்துள்ளார்.