‘அம்மாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ - தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
உலகமே ஆவரேஜ் என்றழைத்த நம் நாடு இப்போது உலகம் முழுவதும் ஜொலிக்கிறது. எனவே, உங்கள் திறனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"உலகமே ஆவரேஜ் என்றழைத்த நம் நாடு இப்போது உலகம் முழுவதும் ஜொலிக்கிறது. எனவே, உங்கள் திறனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்," என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தேர்வை பயமின்றி எதிர்கொள்வது தொடர்பாக 'பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடி வருகிறார். 2018ம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, கடந்த ஆண்டை விட இரு மடங்கு பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 38.8 லட்சம் பேரில் 31 லட்சத்து 24 ஆயிரம் மாணவர்கள், 5.6 லட்சம் ஆசிரியர்கள், 1.95 லட்சம் பெற்றோர்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் உள்ள தல்கடோரா உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்மாக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்:
மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். தன்னுடைய அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிப்பது தொடர்பாக கேள்வி எழும்பியது.
அதற்கு பதிலளித்த மோடி,
“வீட்டில் உள்ள அம்மாக்களின் நேர மேலாண்மையை கவனியுங்கள், அதன் மூலமாக தேர்வுக்கு எப்படி நேரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், சமூகத்தில் இருந்து வரும் அழுத்தத்தை மனதில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது பெரிய எதிர்பார்ப்புகளை வைத்தால் அது பெரிய பிரச்சனையாகிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
குறுக்கு வழிகள் வேண்டாம்:
தேர்வில் காப்பியடித்தல் போன்ற தவறுகளைத் தவிர்ப்பது எப்படி? என மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ’வாழ்க்கையில் குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம்’ என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
“மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை தேர்வில் மோசடி செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தை மாணவர்கள் ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தினால் நிச்சயம் பெரிய வெற்றியை அடைவார்கள் என்றார். வாழ்க்கையில் குறுக்குவழிகளைத் தேடவேக் கூடாது. தேர்வு நேரத்தில் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்,” என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.
கால மாற்றத்தால் சராசரி மாணவர்களும் அற்புதங்களை உருவாக்குகிறார்கள் என்ற மோடி, ஒவ்வொருவருக்கும் சில அசாதாரண திறமைகள் உள்ளன; விஷயம் என்னவென்றால், நீங்கள் அவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், சாதாரண மாணவர்கள் தங்கள் திறமையைக் கூர்மைப்படுத்தினால் அற்புதங்களைப் படைப்பவர்களாக இருப்பார்கள் எனக்கூறினார்.
புத்திசாலித்தனமா? கடின உழைப்பா?
புத்திசாலித்தனமான வேலையா அல்லது கடின உழைப்பா எது சிறந்தது? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், அதற்கு காகம் தண்ணீருக்காக அலைந்த கதையை மேற்கோளாக கூறினார்.
நீங்கள் தாகம் நிறைந்த காகம் பற்றிய கதையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்?. அந்தக் காகம் தாகத்தைப் போக்க மேற்கொண்ட முயற்சியை கடின உழைப்பு என்பீர்களா அல்லது சாமர்த்தியம் என்பீர்களா?
சிலர் புத்திசாலித்தனமாக வேலை செய்வது அரிது, ஒரு சிலர் புத்திசாலித்தனமாக உழைப்பார்கள். ஆனால், சிலர் இந்த இரண்டையுமே செய்யமாட்டார்கள். ஒவ்வொருவரும் திறமைகளை வளர்த்துக் கொண்டு, அதற்கேற்ப செயல்பட்டு, விரும்பிய இலக்குகளை அடைய வேண்டும் என பரிந்துரைத்தார் மோடி.