மூளைக் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த நோயாளி!
53 வயதான டாக்மர் டர்னர் அறுவை சிகிச்சையின்போதே வயலின் வாசித்துக் கொண்டிருந்தார் ஏன் தெரியுமா?
53 வயதான டாக்மர் டர்னருக்கு மூளையில் கட்டி இருந்தது. இதை அகற்றுவதற்காக லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கெயோர்மார்ஸ் அஷ்கன் என்கிற நரம்பியல் மருத்துவ பேராசியர் தலைமையிலான குழு அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டது. டாக்மர் டர்னரின் வயலின் வாசிக்கும் திறனை பாதுகாக்கும் பொருட்டு கட்டியை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சையின்போது டர்னர் வயலின் வாசிக்க அனுமதிக்கப்பட்டார்.
டாக்மருக்கு வயலின் வாசிப்பில் ஆர்வம் அதிகம். கட்டியை அகற்றும் சிகிச்சை காரணமாக இந்தத் திறன் பாதிக்கப்படலாம் என்று அவர் மனம் வருந்தினார். இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 நோயாளிகளுக்கு மூளையில் இருக்கும் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் இவ்வாறு அறுவை சிகிச்சையின்போது வயலின் வாசித்த முதல் நோயாளி இவர்தான் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை நடந்தபோது டாக்மர் வயலின் வாசிப்பதை அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணரான அஷ்கன் இசையில் பட்டப்பட்டிப்பு முடித்துள்ளார். இவர் ஒரு பியானோ வாசிப்பாளர். இவர் வழக்கத்திற்கு மாறான ஒரு அணுகுமுறையை மேற்கொண்டார். மிகத் துல்லியமான இந்த அறுவை சிகிச்சை முறையில் வயலின் வாசிக்கத் தேவையான முக்கிய அசைவுகள் தொடர்புடைய மூளையின் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை இவர் உறுதிசெய்தார். அறுவை சிகிச்சை தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு அந்தப் பகுதிகளைக் கவனமாகக் கண்டறிந்தார்.
“எனக்கு வயலின் வாசிப்பில் ஆர்வம் அதிகம். பத்து வயது முதலே வயலின் வாசித்து வருகிறேன். இந்தத் திறன் இழப்பது குறித்த எண்ணமே மனமுடையச் செய்கிறது. ஆனால் மருத்துவர் அஷ்கன் ஒரு இசைக்கலைஞர் என்பதால் என்னுடைய கவலையை அவரால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அவருக்கும் அவரது குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றி. விரைவிலேயே மீண்டும் வயலின் வாசிக்கத் தொடங்குவேன்,” என்றார் டாக்மர் டர்னர்.
அவரது இடது கை தொடர்ந்து இயங்கிய நிலையிலேயே 90 சதவீத கட்டி அகற்றப்பட்டது என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.
2013-ம் ஆண்டு ஒரு சிம்பொனியின்போது திடீரென்று இவருக்கு வலிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் இவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அப்போதிருந்து தொடர்ந்து இசைக்குழுவில் வாசித்தவாறே கட்டி வளராமல் இருக்க பயாப்சியும் ரேடியோதெரபியும் செய்துகொண்டார்.
அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்கு அனுப்பப்படுவார். தொடர்ந்து உள்ளூர் மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சிம் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா