‘இந்தியர்களே கேஷ்பேக் திட்டம் சூதாட்டமா? - கூகுள் பிளேஸ்டோரில் திரும்பிய Paytm!
கூகுள் நிபந்தனைகளை மீறியதாக பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் செயலி, மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.
கூகுள் பிளேஸ்டோரில் இருந்து காலை நீக்கப்பட்ட பேடிஎம் செயலி மீண்டும் பிளேஸ்டோரில் மாலை முதல் செயல்படத் துவங்கியுள்ளது. பேடிஎம் ஆப் விரைவில் பிளேஸ்டோரில் திரும்பி இடம்பெறும் என முன்னதாக பேடிஎம் நம்பிக்கை தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm ஆப் மீண்டும் வந்துள்ளது. இது குறித்து, பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ட்விட்டரில் பதிவிட்டார்.
”உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி. உங்கள் Paytm ஆப் மீண்டும் ப்ளேஸ்டோரில் வந்துள்ளது. நாங்கள் யூபிஐ கேஷ்பேக் பிரச்சாரம் ஒன்றை இன்று காலை அறிமுகம் செய்தோம். அதற்கு கூகிள் எங்களை நீக்கியது. இந்தியா... கேஷ்பேக் சூதாட்டமா...? நீங்களே முடிவு செய்யுங்கள்...” என்று பதிவிட்டார்.
ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பேடிஎம் செயலி திடிரென கூகுள் பிளேஸ்டோரில் இருந்து காணாமல் போனது. பேடிஎம் மணி, பேடிஎம் மால் உள்ளிட்ட அதன் மற்ற செயலிகள் பிளேஸ்டோரில் தொடர்ந்து இடம்பெற்றாலும், பேடிஎம் செயலி மற்றும் அதன் கேமிங் செயலியான பேடிஎம் பர்ஸ்ட் கேம்ஸ் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.
கூகுள் பிளேஸ்டோர் நிபந்தனைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, பேடிஎம் நிறுவனம், ஆண்ட்ராய்டு மேடையில் செயலி தற்காலிகமாக இடம்பெறவில்லை என்றும், பயனாளிகளின் பணம் பாதுகாப்பாக உள்ளது, விரைவில் மீண்டும் செயலி இடம்பெறும் என்று தெரிவித்திருந்தது.
பேடிஎம் பர்ஸ்ட் கேம்ஸ், கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்றவற்றுக்கான கற்பனையான விளையாட்டாகும். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்திருப்பதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த விளையாட்டு 80 மில்லியனுக்கு மேற்பட்ட ரசிகர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர்கள் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஆன்லைன் காசினோ விளையாட்டை கூகுள் ஊக்குவிப்பதில்லை என்றும், விளையாட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் எந்த செயலிகளையும் ஆதரிப்பதில்லை என்றும் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி மற்றும் பிரைவசி பிரிவு தலைவர் சூசானே பிரே தெரிவித்திருந்தார்.
கட்டண போட்டிகளில் பங்கேற்று பணம் வெல்ல வாய்ப்புள்ள இணையதளங்களுக்கு இணைப்பு அளிக்கும் செயலிகளுக்கும் இது பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
"பயனாளிகளை பாதுகாப்பதற்காக இத்தகைய நிபந்தனைகளை கொண்டுள்ளோம். ஒரு செயலி இந்த விதிகளை மீறினால், தொடர்புடைய நிறுவனத்திற்கு தெரிவித்து, அந்த ஆப் நிபந்தனைக்கு உட்படும் வரை நீக்குகிறோம்.”
"தொடர் மீறல்கள் இருந்தால், கூகுள் பிளேஸ்டோர் கணக்கு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வழி உள்ளது,” என்றும் அவர் கூறியிருந்தார்.
பேடிஎம் இந்தியாவின் மிகப்பெரிய யூனிகார்ன் நிறுவனங்களில் ஒன்றாகும். கூகுள் பிளேஸ்டோரில் பத்து மில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில், பேடிஎம் செயலி 3.5 மடங்கு வளர்ச்சி கண்டிருப்பதாக அதன் நிறுவனர் விஜய்சேகர் சர்மா கடந்த மாதம் கூறியிருந்தார். இந்நிலையில் பேடிஎம் செயலி மீண்டும் கூகுள் பிளேஸ்டோரில் செயல்படத்துவங்கியுள்ளது.
கட்டுரை: சைபர் சிம்மன்