நிஜ உலக தொடர்புகளில் கவனம் செலுத்தும் சென்னையில் இருந்து உருவாகும் புதிய சமூக ஊடகம் Pepul
பாதுகாப்பு அம்சத்தில் கவனம் செலுத்தும் புதுயுக சமூக வலைப்பின்னல் சேவையாக ’பிபிள்’ (Pepul) அமைந்துள்ளது. இந்த சேவை, ஒத்த கருத்துள்ளவர்கள் ஆன்லைனில் சந்தித்து பின்னர் ஆப்லைன் சமூகத்தை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.
சுரேஷ் குமார் மற்றும் அவரது நண்பர் ஜார்ஜ், டிஜிட்டல் நிறுவனமான MacAppStudio-வை சுயநிதியில் உருவாக்கி, பல்வேறு பரிசோதனைகள், ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த காலத்தில் தான் சுரேஷ் பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொழில்முனைவு செய்திகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
“கூகுல் அல்லது ஃபேஸ்புக் போன்ற எல்லா மகத்தான நிறுவனங்களும் இந்தியாவில் இருந்து உருவாகாமல் சிலிக்கான் வேலியில் இருந்து வருவது ஏன் என்று மாணவர்களிடம் கேட்பது வழக்கம் என்கிறார் சுரேஷ். இந்த கேள்வியே, பயனாளிகள் தங்கள் வாழ்க்கைக் கதைகள், ஆர்வம், திறன்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வதற்கான புதுயுக சமூக வலைப்பின்னல் சேவையான Pepul ஆக உருவானது.
இதில், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் உலகின் பாதுகாப்பான சமூக ஊடக மேடையை உருவாக்கி வருகிறோம். பாதுகாப்பு தவிர, பயனாளிகள் தங்கள் வாழ்க்கைக் கதைகள், ஆர்வங்கள் மற்றும் திறன்களை அழகிய கதைகள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.
யார் வேண்டுமானாலும் அருகாமையில் அல்லது தொலைவில் உள்ள ஆர்வம் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். அந்த ஆர்வத்தின் அடிப்படையில் நிஜ உலக சமூகங்களை உருவாக்கிக் கொள்ளலாம், என்கிறார் சுரேஷ்.
”அருகாமையில் உள்ள மனிதர்களைக் கொண்ட சமூகங்களை உருவாக்குவது, நிஜ உலகில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றில் தான் கவனம்,” என்கிறார்.
சென்னையை அடைப்படையாகக் கொண்ட நிறுவனமான Pepul , ஆன்லைனில் இருந்து ஆப்லைனுக்கு என, நிஜ உலகக் குழுக்களில் கவனம் செலுத்துகிறது.
ஸ்டார்ட் அப் ஏன்?
உலகின் மதிப்புமிக்க டெவல்லப்பர்களாக நாம் இருக்கும் நிலையிலும், ஏன் ஒரு பெரிய சேவை நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் நாம் ஈடுபடுவதில்லை எனும் போது, இந்த இடர்மிக்க செயலில் மாணவர்கள் எப்படி ஈடுபடுவார்கள் எனும் கேள்வியை தனக்குத்தானே கேட்டுக்கொண்ட போது தான், ஸ்டார்ட் அப் நிறுவன எண்ணம் உண்டானதாக கூறுகிறார்.
இந்தத் தருணமே அவருக்கான யுரேகா தருணமாக அமைந்து, இந்தியாவில் இருந்து சமூக வலைப்பின்னல் நிறுவனத்தை உருவாக்க வைத்தது, என்றார் சுரேஷ்.
முன்னணி சமூக ஊடகங்கள் இந்தியாவில் இருந்தே மிகப்பெரிய பயனாளிகள் பரப்பை பெறுகின்றன. இந்த அளவு பயனாளிகள் வளம் மற்றும் திறமைகள் இருக்கும் போது நாம் ஏன் இந்தியாவில் இருந்து ஒரு புதிய சமூக ஊடக மேடையை உருவாக்க கூடாது என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
“ஏற்கனவே எங்கள் முந்தைய ஸ்டார்ட் அப் மூலம் டெம்ப்ளேட் வடிவத்தை உடைத்திருந்தோம். சமூக ஊடகப் பரப்பிலும் இதைச் செய்ய விரும்பினோம். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை என்ற முறையில் தற்போதைய சமூக ஊடகச் சேவைகள் பெண்கள் மற்றும் இளம் உள்ளங்களுக்கு பாதுகாப்பானவை அல்ல என உண்ர்கிறேன்,” என்கிறார்.
தற்போதைய நிலையில் சமூக ஊடகங்கள் எதிர்முறை கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இது வன்மம், துவேஷம், சீண்டுதலுக்கு வழி வகுக்கிறது. பயனர்கள் தங்களை மிகவும் பாதுகாப்பான முறையில் வெளிப்படுத்திக்கொள்ள வழி செய்யும் மேடையை உருவாக்க விரும்பினோம், என்கிறார்.
MacAppStudio-வில், எல்லோருக்கும் ஏற்கனவே திறமை இருக்கிறது, அதை வெளிப்படுத்துவதற்கான இடம் தேவை எனும் எண்ணத்தில் செயல்பட்டது.
மாறுபட்ட சேவை
2021 பிப்ரவரியில் இந்த குழு, Pepul சேவையை முன்னோட்ட பயனாளிகளுக்காக அறிமுகம் செய்தது. இந்த முன்னோட்ட சோதனையில் 2 லட்சம் பயனாளிகள் இணைந்தனர்.
“இப்போது குறைந்த அளவிலான பயனாளிகளுக்கு எங்கள் மேடையை திறந்து படிப்படியாக விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். குறைந்த பட்ச பயனாளிகள் மத்தியிலேயே இந்த அளவு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை,” என்கிறார் சுரேஷ்.
முன்னோட்ட காலத்தில் பயனாளிகள் சராசரியாக இந்த செயலியில் 28 நிமிடங்களை செலவிட்டுள்ளனர். மற்ற சமூக ஊடகங்கள் போல பயனாளிகள் தரவுகளை சார்ந்திராமல், Pepul பயனர்களின் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வருவாய்க்கு முந்தைய நிலையில் இருக்கும் இது, சிறிய அளவில் நிதி திரட்டியுள்ளது.
எதிர்காலத் திட்டம்
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற முன்னணி சமூக ஊடகச் சேவைகள் இருந்தாலும் இந்த சந்தை வளர்ந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள பெரியவர்களில் 72 சதவீதத்தினர் சமூக ஊடக சேவைகளை பயன்படுத்துவதாக 2019 பியூ ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால், கேம்பிரிட்ஜ் அனல்டிகா போன்ற சர்ச்சைகள் தரவுகள் மற்றும் தனியுரிமை தொடர்பான கவலையை ஏற்படுத்தியுள்ளன. மேலும், கிளப்ஹவுஸ் மற்றும் டிஸ்கார்டு போன்ற நெருக்கமான பயனாளிகள் குழுக்களில் கவனம் செலுத்தும் சமூக ஊடகச் செயலிகளும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய மாறுபட்ட சமூக ஊடக சேவைகளில் ஒன்றாக Pepul விளங்குகிறது.
“மக்கள் வாழ்க்கையில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் பல மில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இதை அடைய நூறு கோடி பயனாளிகளை Pepul அடைய வேண்டும்,” என்கிறார் சுரேஷ்.
ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்