ஆண்டுக்கு ரூ.1.45 கோடி சம்பளத்துடன் வளாக நேர்காணலில் தேர்வாகி உள்ள டெல்லி மாணவி!
இக்கல்லூரியின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிக ஊதியத்தில் தேர்வான ஓரே மாணவி இவர்தான்.
என்ன தான் கஷ்டப்பட்டு படித்தாலும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க மாட்டேங்குது என ஓர் கூட்டம்ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருந்தாலும், திறமைக்கும், அறிவுக்கும் ஏற்ற வேலை லட்சங்களிலும், கோடிகளிலும் ஊதியத்தைத் தூக்கிக் கொண்டு தேடித்தான் வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
நிகழாண்டு டெல்லியில் அப்படித்தான் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக முன்னணி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் இறுதி ஆண்டிலேயே வளாக நேர்காணலில் தேர்வு செய்து, திறமைசாலிகளைக் கொத்திக் கொண்டு போவார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி என்றழைக்கப்படும் டெல்லி ஐஐஐடி-யில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நடைபெற்றது. இதில்,
கணிப்பொறியியல் துறை மாணவி ரூ.1.45 கோடி ஆண்டு ஊதியத்தில் பணிக்குத் தேர்வாகி பணிநியமன ஆணை பெற்றுள்ளார்.
இச்செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இக்கல்லூரியின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிக ஊதியத்தில் தேர்வான ஓரே மாணவி இவர்தான். இதில், தேர்வான மாணவியின் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் ஃபேஸ்புக் நிறுவனம் தான் இந்த மாணவியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அடுத்தபடியாக ரூ.33 லட்சம் மற்றும் ரூ.43 லட்சம் ஆண்டு ஊதியத்தில் 2 மாணவர்களும் இதே வளாக நேர்காணலில் பணிக்குத் தேர்வாகியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் இந்த நேர்காணலில் அனைவரும் சாராசரியாக ஆண்டுக்கு ரூ.16.33 லட்சம் ஊதியத்தில் பணிக்கு தேர்வாகியுள்ளதாக கல்லூரி புள்ளியியல் விவரம் தெரிவிக்கிறது.
இக்கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் மொத்தம் 562 பேர் பணிக்குத் தேர்வாகியுள்ளனர். இதில் 310 பேர் முழு நேரப் பணிக்கும், 252 பேர் பகுதி நேரப் பணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 2021ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்யும் இறுதியாண்டுக்கு முந்தைய ஆண்டு மாணவர்களும் தேர்வு மூலம் வடிகட்டப்பட்டு, அவர்களுக்கும் இன்டெர்ன்ஷிப் எனப்படும் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களும் எதிர்காலத்தில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட், சாம்சங், அடோப், டவர் நிசர்ச், ரிலையன்ஸ், குவால்காம் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஐஐஐடியில் வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் கட்டமாக வளாக நேர்காணல் நடைபெற உள்ளதால் அதிக ஊதியத்தை பணியை எட்டிப் பிடிப்பதற்கான பணிகளில் மாணவர்கள் தங்களை முழுமூச்சுடன் தயார் செய்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டால் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது வெற்றுக் கூச்சலாகி விடும். படித்து முடிக்கும் முன்பே லட்சங்களில் ஊதியத்தை தூக்கிக் கொண்டு வேலை வீடு தேடி வரும் என்பதே நிதர்சனமான உண்மை.