இன்று முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ - பிரதமர் வேண்டுகோள்!
கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக நாட்டில் பரவி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக நாட்டில் பரவிவருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது, கொரோனா வேகமாக பரவி வருவதால் ஓவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றார். மேலும்,
“இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்தியாவைக் காப்பாற்ற ஒவ்வொரு குடிமகனைக் காப்பாற்ற உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற இன்று 12 மணி முதல் வீட்டிலிருந்து வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும்,” என்றார்.
இதன் மூலம் இன்று முதல் ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும், மாவட்டமும், கிராமும் முழுவதுமாக அடைக்கப்படுகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.
"கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அந்த தொற்றுச் சங்கிலியை நாம் உடைக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் காட்டுத்தீ போல் பரவும் கொரோனா வைரஸ் இடமிருந்து நம்மை காத்துக் கொள்ள அடுத்த 21 நாட்களுக்கு ‘மக்கள் ஊரடங்கு’ மிக அவசியம்,” என்றார்.
’சமூக விலகல்’ என்பது ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
சிலரின் பொறுப்பற்றத் தன்மை உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கக்கூடும் என்றார்.
கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் போராட இதை நாம் செய்தே ஆக வேண்டும். இது நிச்சயமாக நமது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் காப்பாற்றுவதே தற்போது முக்கியம், என்று தெரிவித்தார்.
“நீங்கள் தினசரி சந்திப்பவர்களில் யார் வேண்டுமென்றாலும் கொரோனா தொற்று பரப்புவார்களாக இருக்கலாம். எனவே வீட்டிலேயே இருங்கள் என உங்களைக் கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் மோடி.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் ஒருவரால் 10 நாட்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்குப் பரப்பிட முடியும் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.
67 நாட்களில் ஒரு லட்சம் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 11 நாட்களில் அது இரண்டு லட்சம் ஆனது நான்கு நாளில் மூன்று லட்சத்தைத் தொட்டது என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. எனவே எத்தனை வேகமாக இது பரவுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த தொற்று பரவ தொடங்கினால் அதை நிறுத்துவது கடினம் சீனா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ்,ஜெர்மனி, இரான் ஆகிய நாடுகளில் இதே நிலைமைதான் ஏற்பட்டது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க நம்மிடமும் இருப்பது ஒரே வழி தான். அது நாம் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது மட்டுமே என்று மீண்டும் கூறி தன் உரையை முடித்துக் கொண்டார்.