தொழில்முனைவோர் இன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களாக கருதும் பிரதமர்; டிவிஎஸ் கேபிடல் தலைவர்
பிரதமருடன் கலந்துரையாடியுள்ள டிவிஎச் கேபிடல் பண்ட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோபால் ஸ்ரீனிவாசன், தொழில் முனைவு பற்றி பிரதமர் மோடி கொண்டுள்ள பார்வையை விவரிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தொழில் முனைவை நேசிக்கிறார் என்றும், அவர்களை இன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களாக கருதுகிறார் என்றும் டிவிஎஸ் கேபிடல் பண்ட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோபால் ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.
“பிரதமர் (மோடி) தொழில்முனைவை நேசிப்பதாகக் கருதுகிறேன். குழுவாக அவரை சந்தித்திருக்கிறேன். இரண்டு முறை நீண்ட சந்திப்புகளில் பங்கேற்றிருக்கிறேன். தொழில்முனைவோர்களை இக்கால சுதந்திர போராட்ட வீரர்கள் கருதும் மனிதராக அவரை உணர்கிறேன்,” என்று யுவர்ஸோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷரத்தா சர்மாவுடனான உரையாடலின் போது கோபால் ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.
பிரதமர் மோடி தனது உரைகளிலும் அடிக்கடி, ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில்முனைவோர் பற்றி பேசி வருபவர், இந்தியாவின் எதிர்காலம் மற்றும் பொருளாதாரத்தை உருவாக்குவதில் அவர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டி வருகிறார்.
இந்த பத்தாண்டுகள் தொழில்முனைவோருக்கான காலமாக இருக்கும் என்று இந்த ஆண்டு துவக்கத்தில் குறிப்பிட்ட பிரதமர், தொழில்முனைவு சூழலில் அரசு ஆதரவாளராக நிற்கும் போது இதன் முழு சாத்தியத்தை உணரலாம் என்றார்,
இந்த கொரோனா தொற்று காலத்தில், பிரதமர் தற்சார்பு இந்தியாவின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி வருகிறார்.
“21ம் நூற்றாண்டை இந்தியாவுக்கான நூற்றாண்டாக மாற்றும் கனவை நிறைவேற்ற, நாடு சுயசார்பு பெறுவதை உறுதி செய்வதே வழி என்று மே மாதம் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
நரேந்திர மோடி அரசு பிரச்சனைகள் எதிர்கொண்டு வரும் விதம் மற்றும் பணியாற்றி வரும் விதம் பாராட்டத்தக்கதாக இருப்பதாக கோபால் ஸ்ரீனிவாசன் கருதுகிறார். கொரோனா சூழலை ஸ்டார்ட் அப்கள் எதிர்கொள்ளும் வகையில் ஆகஸ்ட் மாதம் நிதி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.
டிவிஎஸ் குழுமத்தைச்சேர்ந்த மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோரான கோபால் ஸ்ரீனிவாசன், 2007ல் டிவிஎஸ் கேபிடல் நிறுவனத்தை துவக்கும் முன், 9 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்கியிருக்கிறார்.
“ஆற்றல் மற்றும் முதலீடு இரண்டின் மூலமாக தொழில்முனைவோரை ஊக்குவித்து வருகிறோம்,” என்கிறார் அவர்.
இந்துஸ்தான் யூனிலீவரின் முன்னாள் துணைத்தலைவர் மற்றும் முதன்மை நிதி அதிகாரி டி.சுந்தரம் பின்னர் அவருடன் இணைந்தார்.
“அவர் விலகி வந்து, என்னுடன் இணைந்து, இதை செய்ய உதவுவதாக கூறினார். எனக்கு மேலும் பல விதங்களில் உதவியிருக்கிறார்,” என்கிறார் கோபால் ஸ்ரீனிவாசன்.
டிவிஎஸ் கேபிடல், உள்ளூர் நிதி நிறுவனங்கள், குடும்ப அலுவலகங்கள் மற்றும் செல்வந்தர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
Nykaa, Go Digit, Suryoday Small Finance bank, Wonderla Holidays, Leap Logistics உள்ளிட்ட ஸ்டார்ட் அப்களில் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது. நைகா நிறுவனத்தில் இருந்து அண்மையில் வெளியேறிய டிவிஎஸ் கேபிடல், 6X மடங்கு பலன் பெற்றுள்ளது.
டிவிஎஸ் கேபிடல், தனது மூன்றாவது தனியார் ஈக்விட்டி நிதியான டிவிஎஸ் ஸ்ரீராம் குரோத் பண்ட் 3க்கு ரூ.1,100 கோடி நிதி திரட்டியதாக ஜூலை மாதம் தெரிவித்தது. டிவிஎஸ் குழுமம் மற்றும் ஸ்ரீராம் குழுமத்தின் கூட்டு முயற்சியான இது ரூ.1,000 கோடி இலக்கு நிதி கொண்டுள்ளது.
“தொழில்முனைவை ஊக்குவிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் இந்த நிதியை துவக்கினோம். அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிப்பது என்பது எங்கள் வாசகமாக இருக்கிறது,” என்கிறார்.
கொரோனா சவால்
இந்த நிதி ஏற்கனனே, 2007-08 பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. தற்போதைய நெருக்கடி பற்றி குறிப்பிடும் கோபால் ஸ்ரீனிவாஸ், 2022க்கு முன் மீட்சி நிகழ வாய்ப்பில்லை என்றும் அதற்கு முன் நிலைமை மோசமாகும் என்றும் கூறுகிறார்.
“இது கடினமான காலம். இது குறித்து என் மனதில் சந்தேகம் இல்லை. இது மேலும் மோசமாகும். இது குளியல் தொட்டி போன்ற மீட்சியாக இருக்கும் என ஆலோசகர் ஒருவர் கூறினார். குளியல் தொட்டி அகலமான அடிபகுதியுடன், நிறைய குமிழ்கள் மற்றும் பின் மீட்சி கொண்டிருக்கும்.
“2022 மார்ச்- ஏப்ரல் மாத காலத்தில் சகஜ நிலை திரும்பலாம் என எதிர்பார்க்கிறோம்”.
கொரோனா நீண்ட காலம் இருக்கும் என்றும் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
எனினும், தொழில்முனைவோர் மாறுபட்ட போர்வீரர்கள் என்றும், அவர்கள் போராடாமல் ஓய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். கொரோனா சூழல் பல ஸ்டார்ட் அப் மரணங்களை ஏற்படுத்தும் என்றாலும், மறையும் நிறுவனங்கள் புதிதாக அவதாரம் எடுக்கலாம் என்றும் கூறுகிறார்.
“மரணிப்பது என்பது மட்டும் விஷயம் அல்ல. நீங்கள் புதிய உருவில் மீண்டும் பிறப்பீர்கள், அதை மனதில் கொண்டு தொடர்ந்து போராட வேண்டும். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் தாக்குப்பிடித்தால் போதும். மாற்றங்களை, திருத்தங்களை மேற்கொள்ளுங்கள்.”
“கடந்த ஆறு மாதங்களில் எங்கள் நிறுவனத்திற்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மலைக்க வைக்கின்றன. நாங்கள் செயல்படும் விதம், தொழில்நுட்ப பயன்பாடு வியப்பானவை. எல்லோரும் இதை செய்து வருகின்றனர். நான் பேசி வருபவர்கள் எல்லாம் இந்த காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சொல்கின்றனர். மீண்டு வாருங்கள். மறு பிறப்பு உண்டு”.
நிதி பயணம்
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டிருந்த போது தனது பேராசிரியராக இருந்த மறைந்த சிகே.பிரகலாத் தான் தொழில்முனைவில் இருந்து நிதி துறைக்கு வர ஊக்கம் அளித்ததாகக் கூறுகிறார். 90’களில் தொடர் நிறுவனங்களை உருவாக்கிய பிறகு கோபால், அடுத்து ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டுமா என கேட்டுக்கொண்டார்.
“விர்ல்பூல் வாஷிங்மிஷினை இந்தியாவுக்கு கொண்டு வந்தேன். டிவிஎஸ் எலக்ட்ரானிக்சை துவக்கினோம். நிதி நிறுவனம் ஒன்றை துவக்கினேன். உற்பத்தி நிறுவனத்தை துவக்கினேன். பொறியியல் வடிவமைப்பு நிறுவனத்தை துவக்கினேன். இது பெரிய பட்டியல் என்கிறார்.
இந்த காலகட்டத்தில் தான், தொழில்முனைவை அவர் நேசித்தாலும் இளம் திறமையாளர்களை ஆதரிக்க வேண்டும் என பிரகலாத் அவரிடம் கூறினார்.
“தொழில்முனைவோர் தான் தேசத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று பிரகலாத்திடன் கூறினேன். அடித்தட்டில் இருப்பவர்களுக்கான பொருளாதார விடுதலை தொழில்முனைவோர் மூலமே சாத்தியமாகும். அதற்காகத் தான் செயல்படுகிறேன்.”
“நீ முன்னர் இருந்தது போன்ற தொழில்முனைவோர் அல்ல. உங்களை விட சிறந்தவர்கள் உள்ளனர். 25 வயதில் உள்ள இளைஞர்களும், யுவதிகளும் திறன் மிக்கவர்கள், நீங்கள் ஏன் அவர்களை ஆதரிக்கக் கூடாது என பிரகலாத் என்னிடம் கேட்டார்.
2007ல் இதை அவர் செயல்படுத்தினார். இந்த அறிவுரையை ஏற்று ஸ்ரீராம் குழுமத்தின் தியாகராஜனை சந்தித்தேன். அவர் ஒரு நிதியை துவக்க விரும்புவதாகவும், இருவரும் இணைந்த அதை ஆதிரிக்கலாமே என்றும் கூறினார். என் நெருங்கிய நண்பரான காக்னிசண்டின் லட்சுமி நாராயனனும் முதலீடு செய்ய முன்வந்தார்.
”டிவிஎஸ் கேபிடல் முதல் சுற்றில் ரூ.600 கோடி திரட்டியது. பின்னர் 2012ல் ரூ.600 கோடி திரட்டியது. முதல் சுற்று முதலீடுகளில் இருந்து முற்றிலும் வெளியேறிவிட்டது.
ஆங்கில கட்டுரையாளர்: ராமர்கோ சென்குப்தா | தமிழில்-சைபர்சிம்மன்