'பண்டிகைக் காலத்தில் அலட்சியம் வேண்டாம்' - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!
பொதுமுடக்கம் முடிந்துவிட்டது, ஆனால், கொரோனா வைரஸ் விலகி சென்றுவிடவில்லை என்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் குறித்த அலட்சியம் கொள்ளாமல், எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களை குறிப்பிட்ட பிரதமர்,
“பொதுமுடக்கம் முடிந்துவிட்டது, ஆனால், கொரோனா வைரஸ் இன்னும் விலகிச் சென்றுவிடவில்லை என்று நினைவில் கொள்ள வேண்டும்,” என தெரிவித்தார்.
பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டு வருவதை குறிப்பிட்ட பிரதமர், மக்கள் தங்கள் அன்றாட வாழ்கையில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போதைய மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தால் சந்தை துடிப்புடன் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
“இது அலட்சியமாக இருப்பதற்கான நேரம் அல்ல. கொரோனா வைரஸ் விலகிச் சென்று விட்டது அதனால் ஆபத்து இல்லை என நினைப்பதற்கான நேரம் அல்ல. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டிருப்பதை அல்லது அலட்சியமாக இருப்பதை உணர்த்தும் காட்சிகளை நாம் பார்க்கிறோம். இது ஏற்கத் தக்கதல்ல. நீங்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால், உங்களை மட்டும் அல்ல சுற்றி உள்ளவர்களையும் ஆபத்திற்கு உள்ளாக்குகிறீர்கள்,” என்று பிரதமர் கூறினார்.
கோவிட்-19 க்கான தடுப்பூசி வரும் வரை மக்கள், முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
“நீண்ட காலத்திற்கு பிறகு, உலக அளவில் இந்த தொற்றுக்கு எதிராக போர்க்காலம் போன்ற செயல்பாட்டை பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து பலவித தடுப்பூசிகள் முயற்சிக்கப்படுகின்றன. எப்போது தடுப்பூசி வந்தாலும் அது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்க அரசு வழி செய்யும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். “கடந்த 7-8 மாதங்களில், ஒவ்வொரு இந்தியரின் முயற்சியும் நிலையாக இருக்கிறது. இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. மீட்சி விகிதம் அதிகமாக உள்ளது. இந்த நிலையை நாம் மோசமாக்க கூடாது,” என பிரதமர் கூறினார்.
கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு இந்தியாவில் 10,000 பேருக்கு 83 ஆக உள்ளது. “அமெரிக்காவில், யூகேவில், ஸ்பெயின் இது 600க்கு மேல் உள்ளது. இந்தியாவில் 12,000 தனிமை மையங்கள் மற்றும் 2,000 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. பத்து கோடி பரிசோதனைகளை தொட உள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.
“தடுப்பூசி வரும் வரை நாம் அலட்சியமாக இருக்க முடியாது, பண்டிகை காலம் கொண்டாட்டத்திற்கானது. நாம் கடினமான காலத்தில் இருந்து வெளியே வருகிறோம். சிறிய அலட்சியம் கூட, கொரோனாவுக்கு எதிரான போரில் பின்னடைவை ஏற்படுத்திவிடலாம்,” என பிரதமர் கூறினார்.
தமிழில்- சைபர்சிம்மன்