சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்காமல் இவர் செய்வது என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை குறைக்க ஒரு தனித்துவமான முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளார் இந்த காவலர்.
சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. சிறு போக்குவரத்து விதிமீறலுக்கும் வாகன ஓட்டிகளிடம் மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது.
ட்ரக் ஓட்டுநர் ஒருவர் 1.4 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார். 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால் வாகன ஓட்டி ஒருவர் 15,000 ரூபாய் மதிப்புள்ள தனது இரு சக்கர வாகனத்தை விட்டுச் சென்றுவிட்டார். இப்படிப்பட்ட பல சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது.
குஜராத், உத்தர்காண்ட் போன்ற மாநிலங்கள் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை குறைத்து வரும் நிலையில் பீஹாரைச் சேர்ந்த காவலர் ஒருவர் அவரது செயலுக்காக செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
சடவுனி காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியான முகேஷ் சந்திரா குன்வர் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உதவ ஒரு தனித்துவமான முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மட் அணியாமலோ அல்லது வாகன காப்பீடு செய்ததற்கான சான்று இல்லாமலோ வாகனம் ஓட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் அதற்கு மாறாக விதிகளை மீறுபவர்கள் அந்த சோதனைச்சாவடிக்கு அருகில் உள்ள ஹெல்மட் விற்பனையாளர்களிடமோ அல்லது காப்பீட்டு ஏஜென்சியிடமோ அனுப்பப்படுகிறார்கள்.
குன்வர் இது குறித்து பிடிஐ உடனான உரையாடலில் கூறும்போது,
”நான் ஹெல்மட் விற்பனையார்கள் சிலரையும் காப்பீட்டு முகவர்கள் சிலரையும் உடன் இணைத்துக்கொண்டுள்ளேன். இவர்கள் சோதனைப் பகுதிக்கு அருகில் ஸ்டால் அமைத்துள்ளனர். வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படும் உணர்வையே அது ஏற்படுத்தும். மாறாக அவர்கள் நல்ல தரமான ஹெல்மெட்கள் வாங்கவும் காப்பீட்டைப் புதுப்பித்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்,” என தெரிவித்ததாக நியூஸ்18 தெரிவிக்கிறது.
அதுமட்டுமின்றி ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்காலிகமாக பயிற்சி உரிமம் வழங்குவதற்காக மற்றொரு அதிகாரியை நியமிக்குமாறும் இவர் அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தால் போக்குவரத்து காவலர்கள் மிரட்டி பணம் பறிப்பவர்களாக மக்களால் பார்க்கப்படுகின்றனர். எனவே இந்தக் காவலர் மக்கள் மனதில் நம்பிக்கையை உண்டாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Mint வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தகைய எண்ணம் எவ்வாறு உதித்தது என்று குன்வர் விவரித்தபோது,
”இந்த நகரின் வரலாற்று மரபில் இருந்தே நான் உந்துதல் பெற்றேன். திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் நோக்கத்தை மனிதத்தன்மையுடன் அணுகும் அதேநேரம் திறம்பட செயல்படுத்தவே இத்தகைய திட்டத்தை வடிவமைத்தேன்,” என்று தெரிவித்ததாக Financial Express தெரிவிக்கிறது.
மாநிலத்தில் மது விற்பனை தடை செய்யபட்டிருக்கும் நிலையிம் யாரேனும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறுவழியில்லை என்கிறார் குன்வர்.
கட்டுரை: THINK CHANGE INDIA