ஆதரவற்றோர்களுக்கு இலவச உணவளிக்கும் பிரபல சமையல் யூட்யூப் சானல்!
பிரபல யூட்யூப் சானல் நடத்தி வந்த நாராயண ரெட்டி சமீபத்தில் மறைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் தங்களது முழுநேர பணியைத் துறந்து அவரது மரபைத் தொடர உள்ளனர்.
தெலுங்கானாவைச் சேர்ந்த நாராயண ரெட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி மக்களிடையே பிரபலமானவர். இவர் தனது சானலில் அதிகளவில் உணவு சமைத்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு விநியோகித்து வந்தார். இன்று இவரது சானலில் உலகம் முழுவதும் இருந்து ஆறு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
இன்று ரெட்டி உயிருடன் இல்லை. அவரது மரபை அவரது குடும்பத்தினர் தொடர உள்ளனர். சமீபத்தில் அவரது குடும்பத்தினர் தங்களது முழு நேர பணியைத் துறந்துவிட்டு இந்த உன்னத முயற்சியைத் தொடர உள்ளதாக வீடியோ ஒன்றில் பதிவிட்டிருந்தனர்.
CNN உடனான உரையாடலில் நாராயண ரெட்டியின் உடன் பிறந்தவரின் பேரனான ஸ்ரீகாந்த் ரெட்டி இந்தத் தகவலை உறுதிசெய்தார்.
”அவரது பணியை நாங்கள் தொடர உள்ளோம். அவரது வீடியோக்களுக்கு நேர்மறையான கருத்துக்கள் கிடைக்கும்போது அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்,” என்றார்.
மனிதநேயத்தின் அடையாளம்
இவரது பெரும்பாலான வீடியோக்களில் இவர் பசுமையான நிலப்பரப்புகளில் சமைத்துக் கொண்டிருப்பார். எளிமையான மேகி, கேஎஃப்சி ஸ்டைலில் சிக்கன், அமெரிக்கன் லசக்னா, ஓரியோ புட்டிங் என பல உணவு வகைகள் இவரது சமையலில் இடம்பெற்றிருக்கும். அனைத்தையும் அதிகளவில் தயாரித்து அருகில் பசியோடு இருக்கும் குழந்தைகளுக்கு வழங்கி அவர்களது பசியைப் போக்கி வந்தார். Grandpa’s Kitchen கணக்கில் உள்ள பயோவில்,
“உணவு சமைத்து மக்களை மகிழ்விக்கிறோம். இதன் மூலம் கிடைக்கப்படும் வருவாயை தானமாகக் கொடுத்து விடுகிறோம். ஆதரவற்றோருக்கு உணவு, உடை, பள்ளிக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், பிறந்தநாள் பரிசுகள் போன்றவற்றை வழங்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘King of 2000 EGGS’ என பெயரிடப்பட்ட நாராயண ரெட்டியின் முதல் வீடியோ 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவேற்றப்பட்டது. இதில் வெள்ளை உடையில் முட்டை வைத்து உணவு தயாரித்தார். பின்னர் இந்த உணவு பேக் செய்யப்பட்டு அருகிலுள்ள வீடில்லாத மக்களுக்கு அவரது பேரன்களால் விநியோகம் செய்யப்பட்டது. இந்த வீடியோவை 2.6 மில்லியன் பேர் பார்வையிட்டனர்.
கடந்த இரண்டாண்டுகளில் ரெட்டி 260-க்கும் அதிகமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அவரது அபார சமையல் திறன் மட்டுமின்றி அவரது மனிதநேய செயல்களும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
தற்போது அவரது சானலை அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து நிர்வகித்து புதிய உள்ளடக்கங்களை பதிவேற்றம் செய்வார்கள் என ’ரிபப்ளிக் வேர்ல்ட்’ குறிப்பிட்டுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA