25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாகப்போகும் 'அமிர்த காலம்’ - பட்ஜெட் உரையில் குடியரசுத் தலைவர் முர்மு!
இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கட்டமைக்க அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தன்னுடைய பட்ஜெட் தொடக்க உரையில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்கிற பெருமைக்குரிய திரௌபதி முர்மு இன்று நாடாளுமன்றத்தில் 2023 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடக்க உரை நிகழ்த்தினார். அந்த உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
நாடாளுமன்றத்தில் முதல் உரை ஆற்றிய குடியரசுத்தலைவர்
அமிர்த காலம்
- இந்தியா சில மாதங்களுக்கு முன்பு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளை நிறைவு செய்து, அமிர்த காலத்தில் நுழைந்திருக்கிறது. இந்திய சுதந்திர வீரர்களின் போராட்டம், ஆயிரம் ஆண்டுகள் சிறப்புமிக்க சரித்திர பழைமையை நினைவில் கொண்டு பொன்னான எதிர்காலத்திற்கு நாம் பாடுபட வேண்டும்.
- அமிர்த காலமான 25 ஆண்டுகள் இந்தியாவை வளப்படுத்தும் சுதந்திர பொன்விழா நூற்றாண்டு ஆகும். இந்த 25 ஆண்டுகள் நம்முடைய முழுத்திறனையும் வெளிக்காட்டி நாட்டின் வளர்ச்சியில் குடிமகனாகிய நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும்.
- பழமைகளை மட்டுமல்ல நவீனத்துவத்தையும் உள்ளடக்கிய புதிய இந்தியாவை 2047க்குள் நாம் உருவாக்க வேண்டும்.
- ஏழ்மை இல்லாத, நடுத்தர வர்க்கத்தினரும் மேம்பட்ட வளமான தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்.
- சமூகம் மற்றும் தேசத்திற்கு வழிகாட்டும் முன்னோடிகளாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் திகழ வேண்டும்.
- பன்முகத்தன்மையில் தெளிவும், ஒற்றுமையில் ஆலமர வேர் போல உறுதியாகவும் இருக்கும் இந்தியா அமைய வேண்டும்.
- இந்த தொலைநோக்கு எண்ணத்துடன் நாட்டை கட்டமைத்து 2047ல் யதார்த்தத்தில் இந்த நிலையை நாம் அடையும் போது இப்போது நாம் எடுக்கும் தொடக்ககால முயற்சிகள் மாற்று வடிவத்தில் பார்க்கப்படும். எனவே இந்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை.
நம்பிக்கை இந்தியா
- “எல்லோருடனும் எல்லோருடைய வளர்ச்சிக்காகவும்” என்ற மந்திரத்துடன் மக்கள் பணியாற்ற எனக்கு முதல்முறையாக அளித்த வாய்ப்பை “அனைவரின் நம்பிக்கை அனைவரின் முயற்சி” என்பதையும் காலம் சேர்த்து செயல்பட வைத்துள்ளது. புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான தாரக மந்திரமாக இது மாறி இருக்கிறது.
- இந்த அரசின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பல குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களை முதல்முறையாக கண்டுள்ளது. அதில் மிகப்பெரிய மாற்றமானது இந்தியாவின் நம்பிக்கை உச்சத்தில் இருக்கிறது மேலும் உலக நாடுகள் நாட்டை பார்க்கும் பார்வை மாறியுள்ளது.
- பிரச்னைகளுக்கான தீர்வை மற்றவர்களிடம் எதிர்பார்த்த நாம் இப்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தருபவர்களாக மாறி இருக்கிறோம்.
- நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி இந்தியா பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியா கட்டமைத்துள்ள டிஜிட்டல் நெட்வொர்க் வளர்ந்த நாடுகளுக்கும் கூட உந்துதலுக்கான ஆதாரமாகும்.
- அரசின் திட்டங்களில் நடைபெறும் மிகப்பெரிய ஊழல்கள் மற்றும் லஞ்சம் ஒழிந்துள்ளதை தற்போது உணர முடிகிறது. இந்தியாவின் அபார வளர்ச்சி மற்ற நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்து இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- நிலையான, அச்சமில்லாத, தீர்மானமான மற்றும் இலக்குடன் செயல்படும் அரசாங்கம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
- நேர்மறையை மதிக்கும் மற்றும் ஏழ்மைக்கு நிரந்தர தீர்வு கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் அரசு இந்தியாவில் அமைந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முத்தலாக் தடை சட்டம் இந்த அரசின் தீர்மான முடிவிற்கு சான்று.
- ஜன் தன், ஆதார் இணைப்பு போன்ற விஷயங்களால் போலி பயனாளர்கள் அடையாளம் காணப்பட்டு ஒரே நாடு ஒரே ரேஷனை அறிமுகப்படுத்த உதவி இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டை நிலையான மற்றும் வெளிப்படையான பணப்பரிவர்த்தனை செய்யும் நாடாக்கி இருக்கிறது.
- பெருந்தொற்று காலத்தில் உலகில் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் கஷ்டப்பட்டதை காண்கூடாகப் பார்த்தோம். ஆனால் இந்தியாவில் உணவிற்காக ஏழை மக்கள் கஷ்டப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது.
- ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் சுமார் 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஏழைக் குடும்பங்கள் இதன் மூலம் அதிகப் பலனைப் பெறுகின்றன.
- அடிப்படை வசதிகள் அனைத்தும் தற்போது பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சென்றடைவதால், அவர்களால் புதிய கனவுகளைக் காண முடிகிறது.
பெண்களின் முன்னேற்றம்
- அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே முக்கிய அம்சமாக உள்ளது. அதனால்தான் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மேலும், பெண்களின் ஆரோக்கியமும் முன்பை விட மேம்பட்டுள்ளது.
- கல்வியில் தொடங்கி வேலைவாய்ப்பு வரை அனைத்திலும் பெண் குழந்தைகளுக்கு இருக்கும் தடைகளை அகற்ற அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. இதன் விளைவாக சுரங்கப் பணி முதல் ராணுவப் பணி வரை அனைத்திலும் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- முத்ரா திட்டத்தின் கீழ் 70 % பயனடைபவர்கள் பெண்களே. இத்திட்டம் பெண்களின் பொருளாதார சக்தியை உயர்த்தி உள்ளதோடு அவர்களின் சமூக பங்களிப்பையும் அதிகரித்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.
- காசி-தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளால் ஒரு பக்கம் பண்பாடு கலாச்சார வளர்ச்சி மற்றொரு புறம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு போன்ற நவீன புதுமைகளையும் செய்து வருகிறோம். டிஜிட்டல் இந்தியா மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் ஸ்திரத்தன்மையை பார்த்து உலக நாடுகள் வியந்து போய் இருக்கின்றன.
- இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய சிறுதானிய வகைகளை விளைவிப்பதை அரசு ஊக்குவிக்கிறது. சூரிய சக்தி மற்றும் ட்ரோன்கள் தொழில்நுட்ப உதவிகள் மூலம் விவசாயத்தை செழிப்படைய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் திட்டங்களால் இந்தியாவில் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. இத்திட்டங்களின் பலனை நாடு காணத் தொடங்கியுள்ளது, உலக நாடுகளின் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரத் தொடங்கியுள்ளன.
- மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் போன்களின் எண்ணிக்கை 70 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
ஸ்டார்ட் அப்கள் அதிகரிப்பு
- ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் சில நூறு ஸ்டார்ட் அப்களே இருந்தன, இப்போது 90,000 ஸ்டார்ட் அப்கள் உள்ளன. புதுமைப் படைப்புகளின் திறனை இளைஞர்கள் உலகின் முன் எடுத்துக் காட்டி வருகின்றனர். 2015ல் Global Innovation Indexல் 81வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 40வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
- கடந்த ஒன்பது ஆண்டுகளில் குறைந்தபட்சம் மாததிற்கு ஒரு மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் 220கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
- உலகளாவிய பிரச்னைகள் தொடர்பாக இந்தியாவில் தொடர்ச்சியாக ஜி-20 மாநாடுகள் நடைபெற உள்ளன. ஒரே குடும்பம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று ஜி -20 உறுப்பு நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படப் போகிறது.
- அண்டை நாடுகளுடன் நல்லுறவை இந்தியா பேணி வருகிறது. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கமோ, இலங்கை பொருளாதார நெருக்கடியோ எதுவாக இருந்தாலும் முதலில் நேசக்கரம் நீட்டி உதவி செய்கிறோம்.
- ஜனநாயகத்தின் மையமான இந்த நாடாளுமன்றத்தில், நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் இலக்கை நிர்ணயித்து அது கடினமானதாக இருந்தாலும் அதனை அடைவதற்கு உறுதியேற்போம். மற்றவர்கள் செய்ய நினைப்பதை இந்தியர்களாகிய நாம் இன்றே செய்து முடிப்போம், என்று குடியரசுத் தலைவர் தன்னுடைய உரையில் தெரிவித்திருக்கிறார்.