5 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர்: பயணத்திட்டம் என்ன?
கருணாநிதி உருவ படத்தை திறந்து வைக்கிறார்!
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா, பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வருகை புரிந்துள்ளார் ஜனாதிபதி.
சென்னை விமான நிலையம் வந்த அவரை, முதல்வர் முக ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பயணத் திட்டம்!
சில மணிநேரம் முன்பு சென்னை விமானநிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேராக கிண்டி ராஜ்பவன் சென்றுள்ளார். அங்கு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதனையடுத்து 4.30 மணி அளவில் ராஜ்பவனில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை செல்லும் குடியரசுத் தலைவர் மாலை 5 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை நிகழ்த்த, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமைத் தாங்க, முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கிறார். பின்னர் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார். இந்த விழாவுக்காக சென்னை சட்டமன்றம் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் போல் காட்சியளிக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் கொரோனா காரணமாக குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்கின்றனர்.
234 எம்எல்ஏக்கள், முன்னாள் சபாநாயகர்கள், சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், தமிழக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் அழைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக இந்த விழாவை புறக்கணித்துள்ளது. அதேநேரம், தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட ஒரு சில உயர் அதிகாரிகளும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 320 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 320 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கருதி ஒவ்வொருவரும் அமரும் இருக்கையானது 2 மீட்டர் இடைவெளியில் போடப்பட்டுள்ளதாம். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு கீழ் 'காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது' என்ற வாசகம் பொறித்துள்ளனர்.
இந்த விழாவை முடித்துக்கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனி விமானத்தில் நீலகிரி செல்லவிருக்கிறார். அவர் மொத்தம் தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் தங்க இருக்கிறார். இதனால், தமிழகம் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.