'உலகின் தொன்மையான மொழி தமிழை கற்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
பொது தேர்வை முன்னிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கவலை கொள்பவர்களாக அல்லாமல், போர்வீரர்களாக இருங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் வானொலி வழியே நாட்டு மக்களுக்கு மாதந்தோறும் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சி அகில இந்திய வானொலியின் யூடியூப் சேனல் மற்றும் பிரதமர் அலுவலகம் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ சேனல்களில் ஒலிபரப்பாகிறது.
மன் கி பாத் நிகழ்ச்சியின் 74வது பதிப்பில் இன்று காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கோடைக்காலத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தண்ணீர் சேமிப்பு தொடர்பான கூட்டு பொறுப்பை மக்கள் உணர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நீரை பாதுகாக்கும் கூட்டு முயற்சி திருவண்ணாமலையில் நடக்கிறது. அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக மூடப்பட்ட கிணறுகளை புதுப்பித்து வருகின்றனர், என பிரதமர் பாராட்டினார். வாழை கழிவிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் மதுரை முருகேசனை பிரதமர் மோடி பாராட்டினார்.
இன்று, ‘தேசிய அறிவியல் தினம்’ கொண்டாடப்படுகிறது. 'ராமன் விளைவை' கண்டுபிடித்த நமது விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய விஞ்ஞானிகள் குறித்து நமது இளைஞர்கள் படிப்பதுடன், இந்திய அறிவியல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். தற்சார்புமிக்க தேசமாக இந்தியாவை மாற்றுவதில் அறிவியலின் பங்களிப்பு மிகப்பெரியது, என்றார்.
மேலும் பேசிய பிரதமர், உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியை கற்பதற்குப் போதுமான முயற்சிகளை தன்னால் எடுக்க முடியாமல் போனதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். தமிழ் இலக்கியம் மிகவும் அழகானது, என்றார்.
“உலகின் தொன்மையான மொழியான தமிழை கற்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. தமிழ் கற்க வேண்டும் என நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னால் அதில் தேர்ச்சி பெற முடியவில்லை. சரியாக தமிழை கற்க முடியவில்லை. இலக்கிய தொன்மை வாய்ந்த மொழி தமிழ். அதனால் தான் கடுமையாக உள்ளது," என்று கூறினார்.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவர்கள் கவலை கொள்பவராக அல்லாமல், போர்வீரர்களாக இருக்க வேண்டும் ('Be a warrior, not worrier') என தெரிவித்தார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் வரவேற்பதாக தெரிவித்தார்.
கொரோனாவுக்கு எதிரான தேசத்தின் போர் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாகவும் பிரதமர் நிகழ்ச்சியில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியை என்னால் கற்பதற்குப் போதுமான முயற்சிகளை எடுக்க முடியாமல் போனதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். தமிழ் இலக்கியம் மிகவும் அழகானது.”