ராணுவத்தில் இணைந்த புல்வாமா உயிர்த் தியாகியின் மனைவி!
புல்வாமா தாக்குதலில் இறந்த மேஜரின் நினைவாக, அவருடைய மனைவி நிகிதா கவுல் தௌண்டியால் கணவரை பெருமைப்படுத்தும் வகையில் ராணுவத்தில் சேர ஆயத்தமாகிவிட்டார்.
பிப்ரவரி 14. ஒவ்வொரு ஆண்டும் அன்புகளை பகிர்ந்து கொள்ளும் கொண்டாட்ட தினமாக கடந்து செல்கையில், 2019ம் ஆண்டு வந்த அத்தினம் இந்தியர்களுக்கு எளிதில் மறந்துவிட இயலாத கருப்புதினமாகியது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரும் தாக்குதல்களுள் ஒன்றாக கருதப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு, பதிலடியாக தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மேஜர் விபூடி சங்கர் தௌண்டியால் உட்பட 4 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
மேஜர் இறந்து ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவருடைய மனைவி நிகிதா கவுல் தௌண்டியால் கணவரை பெருமைப்படுத்தும் வகையில் ராணுவத்தில் சேர ஆயத்தமாகிவிட்டார். ராணுவத் தேர்வு மற்றும் நேர்காணலை முடித்த அவர், சென்னை ராணுவப் பயிற்சி அகாடமியில் ப யிற்சியில் சேர காத்துள்ளார்.
கடந்தாண்டு துப்பாக்கிச் சண்டையில் இறந்த மேஜர் விபூடியின் இறுதி அஞ்சலியில் அவரது மனைவி நிகிதா கவுல் பேசிய வார்த்தைகளும் அவரது செய்கைகளும் அடங்கிய வீடியோ வெளியாகி மொத்த இந்திய மக்களையும் கலங்கச் செய்தது.
இறுதிச் சடங்கில் கணவரது உடலுக்கு அருகிலே கனத்த மனதுடன் வெகுநேரம் கணவரை வெறித்து நோக்கியபடி நின்ற நிகிதா, கணவருக்கு முத்தம் கொடுத்து ‘லவ் யூ’ என்று தளர்ந்த குரலில் கூறிய காட்சிகளும், மனதை உடைக்கும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளிவந்து முழு நாட்டையும் உணர்ச்சிவசப்படுத்தின.
உத்ரகாண்ட் மாநிலம் டோராடூனை சேர்ந்த மேஜர் விபூடிக்கும், நிகிதாவுக்கும் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து முதலாமாண்டு தினத்தை கொண்டாடுவதற்கு இரு மாதங்களே இருந்த நிலையில் மேஜர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார்.
நிகிதா கவுல் குறுகிய சேவை ஆணையத்தின் (எஸ்.எஸ்.சி) தேர்வு மற்றும் நேர்காணலை வெற்றிகர முடித்து இப்போது தகுதி பட்டியலுக்காக காத்திருக்கிறார்.
“விபு தியாக மரணமடைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் எஸ்.எஸ்.சி படிவத்தை நிரப்பினேன். வலியை போக்குவதற்கான என் வழி இது,” என்கிறார்.
நான் பரீட்சை எழுதி நேர்காணலை முடித்தபோது, அவர் அவருடைய எஸ்.எஸ்.சி எழுதியபோது எப்படி உணர்ந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது. பரீட்சை எழுதும் போது அவருக்கு இருந்த பயம், பதட்டத்தை என்னாலும் உணர முடிந்தது. எப்படியோ அது எனக்கு பலத்தைக் கொடுத்துள்ளது. ஆனால், இம்முடிவை எடுக்கு எனக்கு சில காலம் தேவைப்பட்டது. ஏனெனில் ‘என்ன நடந்தது’ என்பதை நான் முதலில் ஏற்றுக்கொள்ள காலம் தேவைப்பட்டது. விபு மிகவும் முற்போக்கானவர். நான் அவரை விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே,
இந்திய ராணுவத்தில் சேருவதற்கான எனது முடிவைப் பற்றி எனக்கு ஏதேனும் கவலை அல்லது சந்தேகம் ஏற்பட்டால், நான் கண்களை மூடிக்கொண்டு விபூ என்ன செய்வார் என்று யோசிப்பேன். ராணுவத்தில் சேரும் எனது முடிவில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்,” என்று நியூஸ் 18-இடம் தெரிவித்துள்ளார் நிகிதா.
யுத்தத்தில் உயிர்நீத்த ராணுவ வீரர்களது மனைவிகள் ராணுவச் சேவையை தொடர விரும்பினால் அவர்களுக்காக வயது வரம்பு தளர்த்தப்பட்டாலும், தேர்வு முறைகள் மற்றவர்களுக்கு போல கடினமான ஒன்றே.
“நான் தகுதி பெற மிகவும் கடினமாக உழைத்தேன். இப்போது நான் ஒரு வருட பயிற்சியில் சிறந்து விளங்க விரும்புகிறேன். எல்லோருக்கும் பெருமை சேர்க்கக்கூடிய ஒரு அதிகாரியாக நான் இருக்க விரும்புகிறேன். விபுவும் பெருமைப்படுவார்,” என்றார் நிகிதா.
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த நிகிதாவின் குடும்பத்தினர் 1990ம் ஆண்டுகளில் டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளனர். எம்.பி.ஏ பட்டம் பெற்ற நிகிதா, நொய்டாவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். விரைவில் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சேருவதற்காக ஐடி பணியிலிருந்து விலக உள்ளார்.
ஆனால், பயிற்சி அகாடமியில் சேர்ந்தபின் அவருடைய கணவரின் அலமாரியையும் அதனுள் உள்ள அவருடைய சீருடை, லிப் பாம், லைட்டர் மற்றும் டூத் பிரஷ்ஷை மிஸ் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
“‘எவ்வளவு காலம் திருமணமாகி இருந்தீர்கள்’ என்று நேர்காணல் குழு என்னிடம் கேட்டது. நான், ‘இரண்டு ஆண்டுகள்’ என்று சொன்னேன். அவர்கள், ‘ஆனால் நீங்கள் இருவரும் திருமணமாகி ஒன்பது மாதங்களே இருந்ததாக நாங்கள் கேள்விப் பட்டோம்’ என்று சொன்னர். ‘விபு இங்கே உடல் ரீதியாக இல்லை, ஆனால் அதற்காக எங்களது திருமணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தமில்லை’ என்றேன்” என்று நியூஸ்18-யிடம் தெரிவித்தார் நிகிதா.
நிகிதா எம்பிஏ படிக்கும் போது மேஜர் விபூடியை சந்தித்துள்ளார் - அவர்களுடைய காதல் கதையைப் பற்றி நிகிதா பகிர தயாராகஇருப்பது இதை மட்டும் தான்.