தன் கிராமத்து தாத்தா, பாட்டிகளுக்கு முதல் விமானப் பயண அனுபவத்தை பரிசளித்த பஞ்சாப் பைலட்!
Tuesday April 23, 2019,
2 min Read
கடந்த வாரம் புது டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் சென்ற விமானத்தில் 70 வயது முதல் 90 வயதிலான தாத்தா, பாட்டிகள் 22 பேர் பயணிகளாக சென்றனர். பாரம்பரிய கிராமத்து உடைகளில் இருந்த அந்த 22 பேருக்கும் அதுவே முதல் விமானப் பயணமாக இருந்தது. அவர்களின் உற்சாகத்தையும், குதூகலத்தையும் பார்த்த சக பயணிகளும் ஆனந்தமாகினர்.
ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள சாரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 முதியோர்கள் புதி டெல்லியில் இருந்து அமிர்தசரஸுக்கு விமானத்தில் பயணித்து, பொற்கோவில், ஜாலியன் வாலாபாக் மற்றும் வாகா பார்டரை பார்த்துவிட்டு திரும்பியுள்ளனர். இதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா?
இவர்களின் இந்த கனவு நினைவாகக் காரணமானவர் பைலட் விகாஸ் ஜ்யானி. சாரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த விகாஸ், அந்த ஊரில் இருந்து உருவான முதல் பைலட். அவரும் அவரது அப்பாவும் இணைந்து தங்களது கிராமமக்களுக்கு விமான அனுபவத்தை பரிசாக தர முடிவெடுத்து, 22 பேருக்கான முழு செலவையும் ஏற்று இந்த ஏற்பாட்டை செய்தனர். தான் வளர்ந்த கிராமத்தையும், அங்குள்ள மக்களையும் மறவாது இருந்த விகாசை அக்கிராமமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த விமான பயணத்தில் பயணித்த முதியவர்கள் அனைவரும் 70 முதல் 90 வயதுடையவர்கள். 90 வயது பிம்லா, 78 வயது கன்காரி தேவி, 72 வயது ஆத்மராம் ஆகியோர் அடங்குவர். தங்கள் அனுபவம் பற்றி பகிர்கையில்,
”இது எங்கள் முதல் விமானப் பயணம். விண்ணில் விமானத்தில் பரப்போம் என நாங்கள் கனவு கூட கண்டதில்லை,” என்றனர்.
முதன்முதலில் விமானத்தில் அமர்ந்த 90 வயது பிம்லா,
“இது கனவு போல் உள்ளது. முதியோர்களுக்கு தரும் வாக்குறுதியை பலரும் நிறைவேற்றுவது இல்லை. ஆனால் விகாஸ்; தான் சொன்ன சொல்ல காப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி,” என்றார்.
தங்களது முதல் விமான பயணத்தில் உதவியாக இருந்த சக பயணிகள் மற்றும் விமான குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர் இந்த மூத்தக்குடிமகன்கள்.
வங்கி ஒன்றின் சீனியர் மேனேஜராக இருக்கும் பைலட் விகாசின் அப்பா, மஹேந்திர ஜ்யானி, தன் மகனின் இந்த செயல் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் கூறுகையில்,
“விகாஸ் எப்போதும் முதியவர்கள் மேல் அன்பும், மரியாதையும் கொண்டவர். அவர் எங்கள் கிராமமக்களின் கனவை நினைவாக்கியுள்ளார். இதேப்போல் இளைஞர்கள் எல்லாரும் முதியவர்களை மதித்து மகிழ்வோடு வைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
கட்டுரையாளர்: இந்துஜா ரகுனாதன் | Think Change India