திருநங்கைகளுக்கு வீடு கட்டும் லாரான்ஸ்: ரூ.1.5 கோடி நிதி அளித்த பாலிவுட் நடிகர்!
சென்னையில் திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளையிற்கு ரூ1.5கோடி நிதியுதவி அளித்து உதவ முன்வந்துள்ளார் 2.0 வில்லன் நடிகர்.
ராகவா லாரன்ஸ் - நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு கோலிவுட் சினிமாவில் பேய்பட டிரெண்டை கொண்டுவந்து தமிழ் சினிமாவுலகில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகங்களில் வலம்வரும் நட்சத்திரம் மட்டுமில்லை. அளவற்ற உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் அறியப்படுகிறார். ஆதரவற்றக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிக் குழந்தைகள், நடனக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் ‘லாரன்ஸ்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்திவருகிறார். எண்ணற்றோருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அவரது அறக்கட்டளை 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இதைக் கொண்டாட திட்டத்தை துவக்கிக் கொண்டாடியுள்ளனர். அது தான், ‘திருநங்கைகளுக்கு வீடு’ கட்டும் திட்டம்!
கடந்த 2011ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கியும் நடித்தும் வெளியாகிய ‘காஞ்சனா’ திரைப்படத்தில் லாரன்ஸ் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், லாரன்சின் கதாபாத்திரமும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
காஞ்சனா படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில் இந்தியில் ‘இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பாலிவுட் உலகின் பிசியஸ்ட் நடிகர்களுள் ஒருவரான அக்ஷய் குமார் கதாநயகனாக நடிக்கும் படத்தை லாரான்ஸ் இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘லட்சுமி பாம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது, லாரன்ஸ் அவரது அறக்கட்டளைக் குறித்தும் திருநங்கைகளுக்கான வீடு கட்டும் திட்டம் பற்றியும் அக்ஷய் குமாரிடம் தெரிவிக்க, உடனே ரூ1.5 கோடி நிதி அளித்து உதவியுள்ளார்.
அதுகுறித்து ராகவா லாரான்ஸ் ஹிந்துஸ்தான் டைம்சுக்கு கூறுகையில்,
“எனது காஞ்சனா திரைப்படத்தை உருவாக்கும் போது, நான் பல திருநங்கைகளைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் எப்படி திடீரென்று அனாதையாக தனித்துவிடப்பட்டார்கள் என்ற வலிமிகு கதைகளைக் கேட்டறிந்தேன். அச்சமயங்களில் ரயில் நிலையங்களில் அவர்கள் (மற்றும் இதுபோன்ற பிற சீரற்ற இடங்களில்) தூங்க வேண்டியிருக்கும். அப்போ தான் திருநங்கைகளுக்கான தங்குமிடம் பற்றி நான் யோசித்தேன்.”
அதற்காக சென்னையில் எனது சொந்த ஊரில் ஒரு நிலத்தை வாங்கினேன். அதை பற்றி ஒரு நாள் அக்ஷய் சாரிடம் விளக்கிக் கொண்டிருந்தேன், அவர் திடீரென்று ‘நான் அந்த கட்டிடத்தை கட்ட முடியுமா?’ என்று கேட்டார். நான் ஷாக் ஆகிட்டேன். ஏன்னா, நாங்க கட்டிடத்திற்காக பிரபலங்களிடம் சென்று நிதி உதவி கேட்கத் திட்டமிட்டிருந்தோம். அக்ஷய் சார் அவரே முன்வந்தார். இத்தகைய எண்ணம் கொண்ட மக்கள் கடவுள்கள்,” என்றுள்ளார்.
திருநங்கைகளுக்கான தங்குமிடம் வழங்கி அவர்களை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தைத் தொடங்கி 15வது ஆண்டைக் கொண்டாடியுள்ளனர் அறக்கட்டளை அமைப்பினர். அம்மகிழ்ச்சியை அறிவிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், அக்ஷய் குமாருக்கு திருநங்கைகள் பூங்கொத்து வழங்கும் புகைப்படத்துடன் ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். அப்பதிவில்,
“ஹாய் நண்பர்களே, ரசிகர்களே, நான் ஒரு நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அக்ஷய் குமார் சார் திருநங்கைகளுக்கு வீடு கட்ட 1.5 கோடி ரூபாய் நன்கொடை அளித்து உதவியுள்ளார்.
உதவி செய்யும் அனைவரையும் கடவுளாக நான் கருதுகிறேன். எனவே இப்போது அக்ஷய் குமார் சார் எங்களுக்கு ஒரு கடவுள். இந்த திட்டத்திற்கு தனது பெரும் ஆதரவை வழங்கியதற்காக அவருக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து திருநங்கைகளின் சார்பாக அவருக்கு நன்றி கூறுகிறேன். பூமி பூஜை தேதியை விரைவில் தெரிவிப்போம். உங்கள் அனைவரது ஆசீர்வாதங்களும் எங்களுக்கு தேவை,” என்று குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் பதிவைக் கண்ட ரசிகர்கள் அக்ஷய் குமாருக்கும், லாரன்சுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.