10 வாக்குகள் பெற்று வென்ற ராஜேஸ்வரி; ஊராட்சி மன்றத் தலைவி ஆன துப்புரவு தொழிலாளி!
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இம்முறை பல இடங்களில் அதிகாரப் பின்புலம் இல்லாத சாமானிய மக்கள் பலர் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளனர். இதோ இவங்க வெற்றியும் அப்படித்தான்...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இம்முறை வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால், நேற்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்றும் தொடர்கிறது. இன்று மாலை முழுமையான முடிவுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் பல விநோதமான விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. பல இடங்களில் அதிகாரப் பின்புலம் இல்லாத சாமானிய மக்கள் பலர் போட்டியிட்டு, வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வேட்பாளர்கள் வெற்றிக்கனியைப் பறித்துள்ளனர். பல இடங்களில் ஆச்சர்யப்படும் விதத்தில் வெற்றிச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
10 வாக்குகள் பெற்று வென்ற ராஜேஸ்வரி
பிச்சிவிளை கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம். தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் ஒன்றியத்தில் அமைந்திருக்கிறது பிச்சிவிளை ஊராட்சி. இதன் தலைவர் பதவி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டு, தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பிச்சிவிளை ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பிச்சிவிளை ஊராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் வெறும் 6 பேர் மட்டுமே பட்டியல் இனத்தவர்கள் என்றும், மீதமுள்ள 779 பேரும் வேறு இனத்தவர்கள் என்பதும் அந்த பகுதி மக்களின் வாதம். எனவே அவர்கள் அனைவரும் சேர்ந்து தேர்தலை புறக்கணித்து விட்டனர். மொத்தமுள்ள ஆறு வார்டுகளுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
எனவே இந்தத் தேர்தலில் பிச்சிவிளை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி (32), சுந்தராச்சி (50) ஆகிய இருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் நாளன்று ஓட்டுப்போட யாரும் வரவில்லை. பிச்சிவிளையில் மொத்தம் 13 வாக்குகள் மட்டுமே பதிவானது. அவற்றை தேர்தல் அலுவலர்கள் நேற்று எண்ணினர்.
அதில் 10 வாக்குகள் ராஜேஸ்வரி பெற்றிருந்தார். எனவே அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு வார்டு உறுப்பினர்களாக யாரும் போட்டியிடாததால் அந்த பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஊராட்சி மன்றத் தலைவி ஆகிய துப்புரவுத் தொழிலாளி
இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் துப்புரவு பெண் தொழிலாளி ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றிப் பெற்றுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் ஊராட்சியில் தான் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
கன்சாபுரம் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்த சரஸ்வதி என்பவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அவர் 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவியாகி இருக்கிறார்.
இந்த மகத்தான சாதனையை படைத்துள்ள சரஸ்வதி,
“இப்போது எனக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளது. என்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்மையைச் செய்வேன். இனி எனது சேவையை தலைவியாக இருந்து மேற்கொள்வேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நினைத்தால் துப்புரவு தொழிலாளி கூட மக்கள் தலைவியாக முடியும் என்ற மக்களாட்சி மாண்புகள் இந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.