அற்புதம்; அதிசயம் நிகழும்: டிசம்பர் 31 அறிவிப்பு, ஜனவரியில் கட்சி துவக்கம்: ரஜினி அறிவிப்பு!
ஜனவரியில் கட்சி துவக்க இருப்பதாக ரஜினி அறிவிப்பு!
மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்று ரஜினி காந்த் கூறியுள்ளார்.
1996ம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சிக்கு எதிராக தனது வலுவான குரலை பதிவு செய்தபோது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக பேச்சு எழுந்தது. ஆனால் அந்த தேர்தலுக்கு பிறகு அரசியல் ரீதியாக விமர்சிப்பதை ரஜினி தவிர்த்து வந்தார். ஆனாலும், ரசிகர்கள் அவரை கட்சி தொடங்குமாறு தொடர்ந்து வலியுறுத்திகொண்டே இருக்கின்றனர்.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் வெளிப்படையாகவே 'அரசியலுக்கு வருகிறேன், கட்சிக்கு பொறுப்பு நான், முதல்வராக வேறு ஒருவர்,' என்றும் புதிய டுவிஸ்ட் கொடுத்தார். ஆனால், அவரது ரசிகர்கள் அவரை விடவில்லை.
இதனிடையே தான், கடந்த 30ம் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மக்கள் மன்றத்தின் 37 மாவட்டச் செயலாளர்களிடமும் தனித்தனியே ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களைக் கேட்டார்.
இந்தக் கூட்டத்தில், தனது இறுதி முடிவை அறிவிக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் எழுந்ததால் அவரது ரசிகர்கள் மத்தியிலும் தமிழக அரசியல் களத்திலும் திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆலோசனைக் கூட்டம் ஒன்றரை மணி நேர அளவில் நடந்த நிலையில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
பின்னர், போயஸ் கார்டன் சென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,
“அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன். மாவட்டச் செயலாளர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்தனர், நானும் எனது கருத்தை தெரிவித்தேன். நான் என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்,” என்றார்.
இதற்கிடையே, தற்போது தனது அறிவிப்பை டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.
”ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிக்கப்படும். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசியம்.. நிகழும்," என்றும் கூறியதுடன், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போஇல்லேன்னா எப்பவும் இல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.
தொகுப்பு: மலையரசு