லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவாரா ரஜினி...?
இன்று அல்லது நாளைக்குள் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அல்லது நாளைக்குள் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
1996ம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சிக்கு எதிராக தனது வலுவான குரலை பதிவு செய்தபோது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக பேச்சு எழுந்தது. ஆனால் அந்த தேர்தலுக்கு பிறகு அரசியல் ரீதியாக விமர்சிப்பதை ரஜினி தவிர்த்து வந்தார்.
ஆனாலும், ரசிகர்கள் அவரை கட்சி தொடங்குமாறு தொடர்ந்து வலியுறுத்திகொண்டே இருக்கின்றனர். இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் வெளிப்படையாகவே
'அரசியலுக்கு வருகிறேன், கட்சிக்கு பொறுப்பு நான், முதல்வராக வேறு ஒருவர்,' என்றும் புதிய டுவிஸ்ட் கொடுத்தார்.
ஆனால், அவரது ரசிகர்கள் அவரை விடவில்லை. இதனிடையே தான், ரஜினி இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்தக் கூட்டத்தில், தனது இறுதி முடிவை அறிவிக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் எழுந்ததால் அவரது ரசிகர்கள் மத்தியிலும் தமிழக அரசியல் களத்திலும் திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதையொட்டி, காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரஜினிகாந்த் வந்தார். முகக்கவசம் அணிந்த நிலையில் வந்திறங்கிய மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மக்கள் மன்றத்தின் 37 மாவட்டச் செயலாளர்களிடமும் தனித்தனியே ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களைக் கேட்டார்.
ஆலோசனையில், சில மாவட்ட செயலாளர்கள் குறித்து தனது அதிருப்தியை ரஜினி பதிவு செய்ததாகவும்,
“என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்படுகிறார்கள். அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது. தனிக் கட்சி ஆரம்பிப்பது குறித்து நானே முடிவு செய்வேன். என் முடிவை எவ்வளோ சீக்கிரம் அறிவிக்க முடியுமோ, அறிவிக்கிறேன்," என்று ரஜினி கூறியதாகக் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் கூறியுள்ளனர்.
ஒன்றரை மணி நேர அளவில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. கூட்டத்துக்கு பிறகு தன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் ரஜினி. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சில மாவட்ட செயலாளர்கள்,
“ரஜினி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் முழுமையாக கட்டுப்படுவோம். என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் ரஜினி அறிவிப்பார்," எனக் கூறியுள்ளனர்.
அதேபோல் அரசியல் நோக்கர்களும் ரஜினி தனது அறிவிப்பை நாளைக்குள் அறிவித்துவிடுவார் என்கிறார்கள். காரணம், நாளை ரஜினியின் குருவான பாபா பிறந்த நட்சத்திரம் நாளை காலை வருகிறது. இதனால் இதனை நல்ல நாளாக நினைத்து அறிவிப்பு வெளியிடலாம் என்று கணித்துள்ளனர்.
இதற்கிடையே, போயஸ் கார்டன் சென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,
“அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன். மாவட்டச் செயலாளர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்தனர், நானும் எனது கருத்தை தெரிவித்தேன். நான் என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்,” என்றார்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவாரா ரஜினி... வெயிட் அண்ட் வாட்ச்...!