ரஜினி அறிமுகப்படுத்திய கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி யார் தெரியுமா?
நடிகர் ரஜினி காந்த் துவங்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுன் மூர்த்தி, பாரதிய ஜனதா கட்சியில் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவர் மற்றும் புதுமையாக்கத்தில் ஆர்வம் கொண்ட தொழில்முனைவோராகவும் இருக்கிறார்.
எப்போது கட்சி துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி காந்த் தனது அறிவிப்பால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கட்சி துவக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதோடு, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரையும் அறிவித்திருக்கிறார்.
நடிகர் ரஜினி காந்த், ஏற்கனவே அரசியல் பிரவேசத்தை அறிவித்திருந்த நிலையில், தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், கட்சி துவக்குவது பற்றி டிவிட்டரில் அறிவித்த நிலையில், இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
டிசம்பர் 31ம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவர் அப்போது அறிவித்தார். மேலும் தான் துவங்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியை நியமிப்பதாக அறிவித்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவரது ரசிர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜுனமூர்த்தி பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
”இந்த நியமனத்தை அடுத்து அர்ஜுன மூர்த்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் ” தலைவருக்கு என் அநேக கோடி வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அர்ஜுனமூர்த்தி ஒரு தொழில்முனைவோர்!
ரஜினியின் நம்பிக்கையை பெற்றுள்ள அர்ஜுனமூர்த்தி, பாஜகவில் அறிவுசார் பிரிவில் பொறுப்பில் இருந்தவர் மட்டும் அல்ல, சிறந்த தொழில்முனைவரும் ஆவார். வர்த்தகம், உற்பத்தி, பிராண்டிங், டெலிகாம் மற்றும் இப்போது தலைவருடன் என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன மூர்த்தி மற்றும் அவரது மகள் லட்சுமிதீபா இணைந்து ‘Yeldi softcom' எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் நியர் பீல்ட் கம்ப்யூனிகேஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தொடர்பில்லா முறையில் மொபைல் சாதனம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் சேவையை அளித்து வருகிறது.
இந்நிறுவனம் வழங்கும் புதுமையான பண பரிவர்த்தனை சேவையை பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. தொடர்பில்லா பண பரிவர்த்தனை முறை தற்போது பிரபலமாகி வரும் நிலையில், 2016ம் ஆண்டே 'Yeldi softcom' நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன மூர்த்தி தொலைத்தொடர்பு துறையிலும் அனுபவம் உள்ளவர். ஒரு முறை மொரிஷியஸ் சென்றிருந்த போது சிறிய தொகையை செலுத்துவதில் சிக்கலை உணர்ந்த போது, இதற்கான எளிய தீர்வை வழங்கும் எண்ணம் உருவானதாக அவர் கூறியிருக்கிறார். இந்த எண்ணமே, யெல்டி சாப்ட்காம் நிறுவனமாக உருவானது.
மேலும் அர்ஜுனமூர்த்தி ஒரு தொடர் தொழில்முனைவோராக விளங்கி வருகிறார். 30 ஆண்டுகளுக்கு மேல் இத்துறையில் அனுபவம் உள்ளவர், ஜீனி புட்ஸ், மானுமண்ட் மாஸ்மீடியா உள்ளிட்ட நிறுவனங்களையும் துவங்கியிருக்கிறார்.
தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுன மூர்த்தி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அதன் வர்த்தகப் பிரிவிலும் பின்னர் அறிவுசார் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
அண்மையில் பாஜக தமிழகத்தில் நடத்திய வேல் யாத்திரியை ஒருங்கிணைப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். இந்நிலையில், அவர் ரஜினியால் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இன்று ரஜினிகாந்த அர்ஜுனமூர்த்தியை தனது கட்சி ஒருங்கிணைப்பாளர் என அறிவித்தவுடன், பா.ஜ.க-வின் மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்ஜுனமூர்த்தி அளித்துள்ள ராஜினாமா கடிதத்தை ஏற்று அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக விடுவிப்பதாக தெரிவித்துள்ளார்.