சென்னை உள்ளிட்ட நகரங்களில் ‘வாடகை பைக் டாக்சி’ சேவையை அறிமுகம் செய்தது Rapido
பைக் டாக்சி சேவை நிறுவனமான ரேபிடோ,பல் வேறு இடங்களுக்கு சென்று பல்வேறு வேலைகளை முடிக்க உதவும் வகையில் வாடகை பைக்டாக்சி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
உபெர் மற்றும் ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள், கால்டாக்சி சேவையை மாற்றி அமைத்தது போல, 'ரேபிடோ' 'Rapido' நிறுவனம், பைக்டாக்சி சேவை மூலம், தனிநபர் போக்குவரத்தை மேலும் மாற்றி அமைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ரேபிடோ நிறுவனம் சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களில் வாடகை பைக்டாக்சி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ரேபிடோ நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு துவக்கப்பட்டது. கால் டாக்சிகள் வசதியாக அமைந்தாலும் அவற்றின் கட்டணம் தங்களது சம்பளத்திற்கு அதிகம் என கருதும் நபர்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பைக்டாக்சி சேவையாக ரேபிடோ அறிமுகமானது.
அரவிந்த் சங்காவால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், 100 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேபிடோ நிறுவனம் தனிநபர் போக்குவரத்தில் மேலும் ஒரு புதுமையாக வாடகை பைக்டாக்சி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
சென்னை, தில்லி, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட ஆறு நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள், நேர அடிப்படையில் பைக்டாக்சியை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம். உதாரணமாக பைக்டாக்சியை ஒரு மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.
இப்படி வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் நேரம் முழுவதும், ரேபிடோ கேப்டன் (ஓட்டுனர்) தனது பைக்குடன் வாடிக்கையாளருடன் இருப்பார். இந்த நேரத்தில் வாடிக்கையாளர் தான் செல்ல விரும்பும் இடங்களுக்கு பயணம் செய்யலாம்.
ஒரே ரைடில் பல்வேறு இடங்களுக்குச் சென்று வேலைகளை முடித்துக்கொள்ள உதவும் வகையில் இந்த வசதி அமைகிறது.
வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு இடத்திற்கு செல்லவும் தனியே பைக்டாக்சி புக் செய்து, அதற்காக காத்திருக்கும் அவசியம் இல்லாமல், தேவையான கால அளவிற்கு பைக்டாட்சியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த பைக்டாக்சிக்கான வாடகை பேக்கேஜ் விவரங்களும் ரேபிடோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு, 10 கிமீ தொலைவுக்கு ரூ.99 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முறையே இரண்டு மணி நேரத்திற்கு, ரூ.199, மூன்று மணி நேரத்திற்கு ரூ.299, 4 மணி நேரத்திற்கு ரூ.399, மற்றும் ஆறு மணி நேரத்திற்கு ரூ.599 என கட்டணம் அமைகிறது.
வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து இந்த சேவை அறிமுகம் செய்யப்படுவதாக ரேபிடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
”கடந்த சில மாதங்களில் எங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில், பல இடங்களில் நின்று செல்லக்கூடிய, செலவு குறைந்த , எளிதாக அணுகும் போக்குவரத்திற்கான தேவை அதிகரித்திருக்கிறது. ரேபிடோ ரென்டல் இதை பூர்த்தி செய்கிறது,” என்று ரேபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்கா கூறியுள்ளார்.
ரேபிடோ பைக்டாக்சி சேவையை அதன் மொபைல் செயலி மூலம் அணுகலாம். ரேபிடோ பயனாளிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் டிரைவர்கள் பயனாளிகளுக்கான கூடுதல் ஹெல்மெட்டையும் எடுத்து வருகின்றனர்.
மேலும், கொரோனா சூழலில் முறையான சுகாதார செயல்பாடுகளையும் நிறுவன டிரைவர்கள் (கேப்டன்கள்) கடைப்பிடித்து வருகின்றனர்.
தொகுப்பு: சைபர் சிம்மன்