பார்லிமென்டில் அனல் பறக்கும் பேச்சால் தெறிக்கவிடும் ‘மஹுவா மொய்த்ரா’- சுவாரசிய தகவல்கள் இதோ!
மீண்டும் தனது அனல் பறக்கும் விவாதங்களால் இணையத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான் மஹூவா மொய்த்ரா.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இது அக்டோபர் 1ம் தேதி வரை வார விடுப்பின்றி, 18 நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. கூட்டம் தொடங்கிய முதல் நாளே, “பூதம் உங்களை ஒரு நாள் காவு வாங்கும்” என மத்திய அரசுக்கு எதிராக சீறி ஊடகங்களில் பேசு பொருளானார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான மஹுவா மொய்த்ரா.
தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார் மஹூவா. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள், சப்கா சாத், சப்கா விகாஸ், பண மதிப்பிழப்பு, சிறுவணிகர்கள், இளம் வாக்காளர்கள், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பிஎம் கேர் நிதி எனப் பலதரப்பு பிரச்சினைகளுக்கு ஒரு குரலாய் குரல் கொடுத்து வருகிறார்.
“நீங்கள் எல்லோரும் அரசியலமைப்பு வழங்கிய பாதுகாப்பை அகற்ற ஒரு பூதத்தை உருவாக்குகிறீர்கள். அந்த பூதம் உங்களையே ஒரு நாள் காவு வாங்கும். அந்த நாளை நினைவில் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்,” என எச்சரிக்கும் தொனியில் பேசிய மஹூவாவின் பேச்சை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை யூதர்களைக் கொல்வதற்காக தெற்கு போலந்தில் ஜெர்மனி அமைத்த மிகப்பெரிய ஆஷ்விட்ஸ் வதைமுகாம் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்திய நாடாளுமன்றக் கூட்ட வரலாற்றில் மஹூவாவின் இந்தப் பேச்சுகள் முக்கியமானவை என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றன.
தன் அனல் பறக்கும் பேச்சால், அதிர வைக்கும் வார்த்தைகளால் மஹூவா இப்படி எதிர்தரப்பை வாயடைக்கச் செய்வது இது முதன்முறையல்ல. சமயம் கிடைக்கும் போதெல்லாம், தன் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சரியான எதிர்க்கட்சிகளுக்குரிய விவாதங்களை முன் வைப்பவர் மொய்த்ரா.
“அனைவராலும் நன்கு அறியப்பட்ட பிரதமரின் பெயரால் நிதியை வசூலிக்கிறீர்கள் என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். அப்படியானால், இந்த நிதியம் அரசுக்குச் சொந்தமானது என்றுதான் மக்கள் நினைக்கக்கூடும். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இந்த நிதி விவரங்கள் குறித்த எந்தத் தகவலையும் பெற முடியாது என்று சொல்கிறீர்கள். வெளிப்படைத் தன்மையிலிருந்து ஏன் ஓடி ஒளிந்துகொள்ளப் பார்க்கிறீர்கள்?” என வரலாற்றில் இருந்து மட்டுமல்ல சமகால அரசியல் சம்பந்தமான கேள்விகளையும் நாடாளுமன்றத்தில் கேட்டு மிரள வைத்திருக்கிறார்.
அவரது இந்த நாடாளுமன்ற பேச்சுக்கள் தான் இணையத்தில் தற்போது வைரலாகி இருக்கின்றன. தன் அனல் பறக்கும் வார்த்தைகளால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மஹூவா மொய்த்ரா, மேற்குவங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆவார்.
- தற்போது 45 வயதாகும் மஹூவா தன் பள்ளிப்படிப்பை கொல்கத்தாவில் முடித்தவர். பின்னர் அமெரிக்காவின் மாசசூசெட்சின், சவுத் ஹாட்லியில் உள்ள மவுண்ட் ஹோல்யோக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர்.
- நியூயார்க் மற்றும் லண்டனில் ஜே.பி மார்கன் சேஸ் வங்கியின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
- இந்திய அரசியலில் நுழைவதற்காக 2009ல் லண்டனில் உள்ள ஜே.பி மோர்கன் சேஸ் வங்கயில் தான் வகித்த துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
- இந்திய தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவான இந்திய இளைஞர் காங்கிரசில் இணைந்து, ராகுல் காந்தியின் நம்பிக்கைப் பெற்ற பேசாசாளராக விளங்கினார் மஹூவா.
“காங்கிரசின் கை சாதாரண மக்களின் கை. காங்கிரஸ் பொதுமக்களின் சிப்பாய்,” என்ற முழக்கத்தை வங்க இளைஞர்களிடம் பிரபலமாக்கினார்.
- உட்கட்சிப் பூசலால் 2010ல் காங்கிரஸில் இருந்து விலகி அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சில ஆண்டுகளாக திரிணாமூல் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.
- மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கரிம்பூர் தொகுதியில் இருந்து 2016ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் களமிறங்கினார். தன் அபார பிரச்சாரத் திறமையால் வெற்றி வாகை சூடினார். 2019ம் ஆண்டு வரை மேற்கு வங்க சட்டசபை உறுப்பினராக இருந்தார்.
- 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, கிருஷ்ணாநகரில் இருந்து பதினேழாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் தனக்குப் பேசக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, அனைத்து விதமான துறைகளில் துணிச்சலான கருத்துக்களை எடுத்துக் கூறி வருகிறார் மஹூவா.
“பணமதிப்பிழப்பு எனும் முட்டாள்தனமான உங்களின் முடிவுகளால் சிறு வணிகர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டீர்கள். அவர்களது சந்தையை அழித்துவிட்டீர்கள். எந்தக் காரணமும் இல்லாமல் அவர்களது வணிகத்தை அழித்துவிட்டீர்கள். குஜராத்தில் சிலையை நிறுவுவதற்காக ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களின் நிலங்களை எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு கழிவறையைச் சுத்தம்செய்யும் பணியைத்தான் உங்களால் வழங்கமுடிந்தது. உங்களுக்கு வாக்கு அளித்து, உங்களை அதிகாரத்தில் அமர்த்திய மக்களின் குடியுரிமையை நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்,” என மத்தியில் ஆளும் பாஜகவைப் பார்த்து காட்டமாகக் கேட்டுள்ளார் மஹூவா.
இன்னும் சில நாட்கள் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதிலும் நிச்சயம் சரியான எதிர்க்கட்சியாக தன் வாதங்களை இந்த போல்ட் லேடி எடுத்து வைப்பார் என்றே எதிர்பார்க்கலாம்.