கர்நாடகாவில் முதல் முறை கட்டப்பட்டுள்ள மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் வீடு!
கர்நாடகாவில் 1,500 கிலோ பிளாஸ்டிக் கொண்டு முதல் முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடு கட்டியுள்ளது `பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் இந்தியா ஃபவுண்டேஷன்’.
2011ம் ஆண்டு கணக்கெடுக்கின்படி வீடில்லாமல் அவதிப்படுவோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.77 மில்லியனாக இருந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பிளாஸ்டிக் கழிவுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த இரண்டு பிரச்சனைக்கும் ஒருசேர தீர்வுகாணமுடியும் என்று கர்நாடகாவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்ற மில்லியன்கணக்கானவர்களுக்கு தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுக்கமுடியும்; பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்து பயன்படுத்தமுடியும்; இவ்விரண்டையும் ஒருசேர சாத்தியப்படுத்தியுள்ளது ’பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் இந்தியா ஃபவுண்டேஷன்’.
இந்த ஃபவுண்டேஷன் கரையோரப் பகுதிகளில் கழிவுகளை சேகரிப்பவர்களுக்கு உதவி வருகிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு இந்த ஃபவுண்டேஷன் வீடு கட்டியுள்ளது. பச்சனடி பகுதியில் கழிவுகளை சேகரிக்கும் கமலா என்பவருக்காக இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
“இது ஒரு புதுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டம். இந்த திட்டத்தின்கீழ் மறுசுழற்சி செய்வதற்கு கடினமாக இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுமானப் பொருட்களாக மாற்றப்படுகிறது. இதைக் கொண்டு குறைந்த விலையில் வீடுகள் கட்டலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு கர்நாடகாவில் முதல் முறையாக இத்தகைய வீடு கட்டப்பட்டுள்ளது,” என்று ஃபவுண்டேஷனின் சீஃப் இம்பேக்ட் அதிகாரி ஷிஃப்ரா ஜேக்கப் `டெக்கான் ஹெரால்ட்’ இடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது,
“இந்த வீடு கட்டப்படுவதற்கு முன்பு, கட்டுமானப் பொருட்களின் உறுதித்தன்மை முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது,” என்றார்.
இதுபோல் மேலும் 20 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு 20 டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும். கழிப்பறைகள் கட்டவும் இது பயன்படுத்தப்படும்.
4.5 லட்ச ரூபாய் மதிப்புடைய இந்த பிளாஸ்டிக் கட்டமைப்பு 350 சதுர மீட்டர் கொண்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்டுமான பார்ட்னர் `பேம்பூ பிராஜெக்ட்ஸ்’ உடன் இணைந்து இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
“அரசு உதவியுடன் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு இதுபோல் நிறைய வீடுகள் கட்டிக் கொடுக்க விரும்புகிறோம். ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்ட திட்டமிடும்போது கட்டுமானச் செலவு 3.5 லட்ச ரூபாய் வரை குறைய வாய்ப்புண்டு,” என்று பிராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி `நியூஸ் கர்நாடகா’ இடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது,
“குறைந்த அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக் (LDP), பல்வேறு அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக், டெட்ரா பேக், குட்கா பேக்கெட் போன்ற இதர பிளாஸ்டிக் வகைகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA