மக்கள் பயணங்களை தவிர்க்க முன்பதிவு கட்டணத்தை திரும்ப வழங்க மத்திய அரசு வேண்டுகோள்!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது போக்குவரத்து முன்பதிவுகளை ரத்து செய்தால் கட்டணம் திரும்ப வழங்க மத்திய அரசு, மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி பயணம் செய்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் பயணிகள் முன்பதிவு செய்த கட்டணத்தைத் திரும்ப வழங்க மத்திய அரசு மாநில அரசாங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் பயணம் செய்வதைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துடத் தீர்மானித்து ஏற்கெனவே முன்பதிவு செய்ததை ரத்து செய்தால் கட்டணத்தொகையை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
"கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பொதுப்போக்குவரத்து மூலம் பரவுவதைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தேவையான முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதன்மை செயலாளர் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த செயலாளர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்து ஆணையர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சமூக விலகல் முக்கியம் என்பதை மத்திய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை பற்றிய முழுமையான தகவல்கள் பயணிகளைச் சென்றடைவதற்காக அவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பவேண்டும் என்றும் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசாங்கத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய ஸ்டார்ட் அப் சமூகம் மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த வாரத்தில் முழு அடைப்பு விடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 144 தடை உத்தரவானது பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதைத் தடை செய்யும்.
நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் உட்பட இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலைச் சேர்ந்த 66 பிரதிநிதிகள் இந்த மனுவைத் தயாரித்து, முன்மொழிந்துள்ளனர். இதில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முக்கிய நகரங்களில் மார்ச் 20-ம் தேதி முதல் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முழு அடைப்பு விடப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்: பிடிஐ