மும்மடங்கு வளர்ச்சி கண்ட ஜியோமார்ட் கிரானா ஆர்டர்கள்: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?
வருடாந்திர கூட்டத்தில் `முகேஷ் அம்பானி' பெருமிதம்!
ரிலையன்ஸ் முதலாளி முகேஷ் அம்பானி நேற்று நடந்த வருடாந்திர கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அவர் தெரிவித்த முக்கியமான ஒன்று, ஜியோமார்ட் கீழ் செயல்படும் கிரானா ஸ்டோர்ஸ் ஆர்டர்கள் ஒரு வருடத்தில் மூன்று மடங்கு வளர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். கிரானா ஸ்டோர்ஸ் என்பது இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் இருக்கும் தெருவோர சில்லறை பெட்டிக் கடைகள்.
இந்த சிறிய கடைகள் பலவிதமான மளிகைப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள், தின்பண்டங்கள் போன்ற தினசரி தேவைப்படும் பொருட்களைக் கொண்டுள்ள கடைகள். இந்தக் கடைகளுடன் ஒப்பந்தம் செய்து வாடிக்கையாளர்கள் விரைவாக பொருட்களைப் பெற இந்த கடைகள் மூலம் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றது ரிலையன்ஸ். இதற்காக கிரானா கடை உரிமையாளர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து தங்கள் நிறுவனத்துடன் பார்ட்னர்களாக பெரு நிறுவனங்கள் இணைத்துக்கொள்ளும்.
இந்த செயல்முறையை ஆரம்பித்த ஒரு வருடத்தில், ஜியோமார்ட் இந்தியாவில் 150 நகரங்களில் மூன்று லட்சம் சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இந்த அசுர வளர்ச்சியால்,
“கிரானா ஸ்டோர்ஸ் ஒரு வருடத்தில் மூன்று மடங்கு வளர்ந்துள்ளதாகவும், மளிகை வர்த்தகத் தளங்களில் ஆர்டர் இரு மடங்காக அதிகரித்துள்ளது," எனவும் நேற்றைய கூட்டத்தில் அம்பானி தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ’ஜியோமார்ட்’ ஒரே நாளில் 6.5 லட்சம் உச்சபட்ச ஆர்டர்களை பதிவு செய்துள்ளது.
இந்த வளர்ச்சி எங்களுக்கு உள்ள விசுவாசமான வாடிக்கையாளர் தளத்திற்கு ஒரு சான்றாகும். ஜியோமார்ட் புதிய வர்த்தகத்தின் நோக்கம் சிறு வணிகர் சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றியமைத்து வளர்ப்பதாகும். நகரங்கள் முழுவதும் விரிவாக்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது,
”மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 கோடி வணிக கூட்டாளர்களை எங்களுடன் இணைப்பது முக்கிய நோக்கமாக இருக்கும்," என்றார்.
இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களிலிருந்து ஜியோமார்ட் அதன் ஆர்டர்களில் பாதிக்கும் மேல் பெற்றது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிப்படுத்தியது. மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களிலிருந்து, ஆடைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையிலும் ஜியோமார்ட் விரிவடைந்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடெயில் வளர்ச்சி!
ஜியோமார்ட், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெயில் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சங்கிலி வர்த்தகமாக கிரானா கடைகளால் வளர்ந்துள்ளது. இது இரண்டு லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது மற்றும் கடந்த ஒரு வருடத்தில் 65,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மளிகை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடை என ஒவ்வொரு பிரிவிலும் அதன் சில்லறைப் பிரிவு ஒரு தலைவராக இருப்பதாக ரிலையன்ஸ் கூறுகிறது.
”இந்தியாவின் மிகப்பெரிய மளிகை சில்லறை விற்பனையாளராக, ரிலையன்ஸ் ரீடெயில் சில்லறை விற்பனை ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் யூனிட் மளிகைப் பொருட்களை அல்லது ஒரு நாளைக்கு சுமார் 30 லட்சம் யூனிட்டுகளை விற்று சாதனை படைத்துள்ளது. எங்கள் ஊழியர்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் கிரானா கூட்டாளர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டனர்.
”அடுத்த மூன்று ஆண்டுகளில், நாங்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம், மேலும் பலருக்கு வாழ்வாதாரத்தை வழங்குவோம்," என்று ரிலையன்ஸ் ரீடெயில் வளர்ச்சி தொடர்பாக முகேஷ் அம்பானி பேசினார்.
ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் வருவாய் ரூ.153,818 கோடியாக இருந்தது. இதற்கிடையே, தற்போது ரிலையன்ஸ் ரீடெயில் அதன் ஆடை வணிகத்திற்கு 25 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. ஏனென்றால், ஆடை வர்த்தகம் ஆண்டுக்கு 18 கோடி யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையானது. ஒரு நாளைக்கு 5 லட்சம் யூனிட் அதிகபட்சமாக இருந்தது. இதனால் அதிக பங்களிப்பு செய்யப்படுகிறது.
ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர்