Naturals சலூன்களை வாங்குகிறதா ரிலையன்ஸ் நிறுவனம்?
நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Induja Raghunathan
Friday November 04, 2022 , 4 min Read
இந்தியாவின் முக்கியமான சலூன் நிறுவனமான ’நேச்சுரல்ஸ்’ நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அதனைத் தொடர்ந்து லிங்கிடின் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இது குறித்த செய்தி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னையைச் சேர்ந்த சி.கே குமரவேல் மற்றும் மனைவி வீணா குமரவேல் இணைந்து தொடங்கிய நிறுவனம் ’
'. 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.20 மாநிலங்களில் 700க்கும் மேற்பட்ட நேச்சுரல்ஸ் சலூன்கள் உள்ளன. இவை பெரும்பாலும் பிரான்சைசி அடிப்படையில் செயல்படுகின்றன. 2025ம் ஆண்டுக்குள் 3000 ஸ்டோர்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதன் இணை நிறுவனர் குமாரவேல் தெரிவித்திருந்தார். குறிப்பான அதிக பிரான்ஸைசிகளை பெண்கள்தான் நடத்துகின்றனர்.
நேச்சுரல் நிறுவனத்டை ரிலையன்ஸ் ரீடெயில் வாங்க உள்ளது பற்றி ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், எக்கனாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி,
“ரிலையன்ஸ் க்ரூம் இந்தியா சலூன்ஸ் & ஸ்பா (நேச்சுரல்ஸ்) நிறுவனத்துடன் கூட்டு முயற்சியின் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நேச்சுரல்ஸ்-இல் 49 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாகவும் தெரிகிறது.”
இது குறித்து நேச்சுரல்ஸ் தலைமைச் செயல் அதிகாரி சி.கே.குமரவேலிடம் யுவர்ஸ்டோரி தமிழ் பேசிய போது,
“ரிலையன்ஸ் உடனான பேச்சுவார்த்தை ஆரம்பட்ட கட்டத்தில் இருக்கிறத, என்றும் இன்னும் முழு முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவிப்பதாக,” அவர் கூறினார்.
இந்த இணைப்பின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது குறித்த செய்திகள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
நேச்சுரல்ஸ் உருவான கதை
நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் வெற்றி ஒரே நாளில் வரவில்லை. பலவிதமான தோல்விகளை சந்தித்த பிறகே நேச்சுரல்ஸ் உருவானது.
சி.கே குமரவேல் தொழில் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தோல்விகளுக்கு பிறகே வெற்றியை சுவைக்க முடிந்தது. இவரது அப்பா சின்னி கிருஷ்ணன் சாஷே கண்டுபிடித்திருந்தார். இவரது குடும்பத்தில் அண்ணன்கள் சி.கே ரங்கநாதன், ராஜ்குமார் ஆகியோர் தொழிலில் இருந்தனர்.
ஆரம்பத்தில் அண்ணன் சி.கே ரங்கநாதன் நிறுவனத்தில் குமாரவேல் பணிபுரிந்தார். ஆனால், இவரது ஐடியாகளையும் திட்டங்களையும் செயல்படுத்த முடியாத சூழல் என்பதால் சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டார்.
ஏற்கெனவே எப்.எம்.சிஜி பிரிவில் அனுபவம் இருப்பதால் ராகா என்னும் பிராண்டினை தொடங்கினார். இது மூலிகை சீகக்காய் பவுடர். மூன்றே ஆண்டுகளில் இவர் திட்டமிட்ட ஐந்து கோடி ரூபாய் வருமானம் என்னும் இலக்கு எட்டப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் வெற்றிகரமான பிராண்டாக மாறியது. இந்த வெற்றியால் இந்தியா முழுவதும் தொடங்க திட்டமிட்டார். ஆனால், தென் இந்தியா அளவுக்கு வட இந்தியாவில் இது வெற்றி பெறமுடியவில்லை.
பூகோள ரீதியில் விரிவாக்கம் செய்வதை விட புதிய புராடக்ட்களை கொண்டு வரலாம் என திட்டமிட்டார். ஹேர் ஆயில் அறிமுகம் செய்யப்பட்டது தோல்வி. மவுத் பிரஷ்னர் அறிமுகம். அதுவும் தோல்வி. அதே சமயம் சீகக்காய் பவுடரை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் வளர்ச்சி அடையவில்லை. அதனால் சீகக்காய் பேஸ்ட் அறிமுகம் செய்தார்.
ஆனால், சில மாதங்களில் இதுவும் தோல்வி. பச்சை வண்ணத்தில் இருந்த சீகக்காய் பேஸ்ட் கருப்பு வண்ணத்தில் மாறியது. அதனால் ஒட்டுமொத்த பிராண்டும் தோல்வி. கடன். சொத்துகளை விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது, என அவரே பலமுறை கூறி இருக்கிறார்.
அடுத்த சில ஆண்டுகள் குமரவேலுக்கு சிக்கலான காலகட்டம். இதனை தொடர்ந்து லேண்ட்மார்க் புத்தக கடையில் ஆடியோ புத்தகங்களை கேட்கத் தொடங்குகிறார். ரிச் டேட், புவர் டேட், 7 ஹேபிட்ஸ் உள்ளிட்ட பல புத்தகங்களை படித்த பிறகு, ”நான் தோல்வி அடையவில்லை என்னுடைய முயற்சி மட்டுமே தோல்வி அடைந்தது,” என்னும் மனநிலைக்கு வந்தவர் அடுத்த முயற்சியை நோக்கி செல்ல திட்டமிட்ட்டார்.
திருப்புமுனை ஆக அமைந்த சலூன் பிசினஸ்
’தி பாடி ஷாப்’ என்னும் நிறுவனம் குறித்து கேள்வி படுகிறார். இதனால் இவரும் இவர் மனைவியும் அமெரிக்கா சென்று நிறுவனத்தின் நிறுவனரை சந்திக்கிறார்கள். தி பாடி ஷாப் நிறுவனத்தை இந்தியாவுக்கு கொண்டுவர கேட்கிறார்கள். ஆனால், எங்களது புராடக்ட்களை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல இந்தியாவும் தயாராகவில்லை, நீங்களும் தயாராக இல்லை என மறுத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்தவர் பொட்டிக், பீரி ஸ்கூல், சலூன் உள்ளிட்ட மூன்று தொழில்களை திட்டமிட்டார். இதில் சலூன் தொடங்க முடிவெடுத்தார்.
தமிழ்நாட்டில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் முடிவெட்ட முடியும். அல்லது சிறிய கடைகளில் முடிவெட்ட முடியும். இதற்கு இடையே வாய்ப்புகளே இல்லை. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வதுதான் திட்டம்.
இங்கிருந்துதான் ’நேச்சுரல்ஸ்’ தொடங்குகிறது. ஆனால், இங்கேயும் எடுத்தவுடன் வெற்றி கிடைக்கவில்லை. விற்பனை உயர்கிறது. அதே சமயம், நஷ்டமும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. முதல் ஆண்டில் ரூ.10 லட்சம், இரண்டாம் ஆண்டில் 2 லட்சம் நஷ்டம். மூன்றால் ஆண்டில் லாபமில்லை.
இந்த சூழலில் இந்தியா இன்னும் பார்லருக்கு தயாராகவில்லை, சலூனை மூடுங்கள் என நண்பர்களும் உறவினர்களும் கூறினார்கள். ஆனால் நஷ்டம் குறைகிறது. அதனால் மூடமாட்டேன் என பிடிவாதமாக இருந்தார். நான்காம் ஆண்டில் மாதம் ரூ.50000 லாபம் என்னும் நிலைமை உருவானது.
விரிவாக்கம் செய்யலாம் என்றால் பணமில்லை. கடன் கேட்டால் வங்கிகள் கொடுக்கவில்லை. 53 வங்கியாளர்கள் நிராகரித்த பிறகு கடன் கிடைத்தது.
சொந்த வீட்டை சலூனாக மாற்றிவிட்டு, வாடகை வீட்டுக்கு மாறிவிட்டார். பிரான்சைசி முறையில் விரிவாக்கம் செய்ய விளம்பரம் கொடுத்தால் 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. ஆனால், யாரும் முதலீடு செய்யத் தயாராக இல்லை.
இதனைத் தொடர்ந்து பிராண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். திரை பிரபலங்களை தூதுவர்களாக நியமனம் செய்தார். இதனால் பிரான்ஸ்சிகளின் எண்ணிக்கை சீராக உயர்ந்தது.
பெண்கள் தொழில்முனைவர்கள் ஏன்?
கரூரில் இருந்து ஒரு பெண் பிரான்ஸிசிக்கு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், கரூர் இன்னும் தயராகவில்லை என்பதால் வேண்டாம் என குமரவேல் நிராகரித்துவிட்டார். இருந்தாலும் அந்த பெண் விடாமல் பின் தொடரவே கரூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அந்த வீடு பெரிய வீடு. சொகுசு கார் என வசதியான குடும்பம். அதனால் இந்த முதலீடு அவர்களுக்கு பெரிய நஷ்டம் இருக்காது என்பதால் கரூரில் பிரான்ஸைசி வழங்கினார். ஓர் ஆண்டில் அந்த கடை சிறப்பாக செயல்படத் தொடங்கியது.
அப்போது அந்த பெண்ணிடம் நீங்கள் ஏன் பிரான்ஸைசி எடுக்க வேண்டும் என கேட்டதற்கு, வீட்டில் பணத்துக்கு பிரச்சினையில்லை. ஆனால்,
”பணத்தை எடுப்பதற்கு அனுமதி வாங்க வேண்டும். இப்போது இது என் பணம் என்பதால் அனுமதி தேவையில்லை,” எனக் கூறியுள்ளார்.
பணக்காரக் குடும்ப பெண்களின் நிலைமையே இதுவென்றால் மற்ற பெண்களின் நிலை எப்படி இருக்கும் என யோசித்த சி கே குமரவேல், பிரான்ஸைசி வழங்குவதில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
தற்போது 700 ஸ்டோர்கள் இருக்கின்றன. இவை ரிலையன்ஸாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.