ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்வு; பின்விளைவுகள் என்னவாக இருக்கும்?
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா உயர்ந்தியுள்ள நிலையில், இது என்னென்ன மாதிரியான விஷயங்களில் எதிரொலிக்கும் என விரிவாக பார்க்கலாம்....
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா உயர்ந்தியுள்ள நிலையில், இது என்னென்ன மாதிரியான விஷயங்களில் எதிரொலிக்கும் என விரிவாக பார்க்கலாம்...
கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்க ஃபெடரல் வங்கி 4வது முறையாக வட்டி விகிதத்தை 75 புள்ளிகள் உயர்த்தியது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது, பிற நாட்டு நாணயங்களின் மதிப்பில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
குறிப்பாக கடந்த சில நாட்களாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து வந்தது. இதனையடுத்து, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்திய ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, இன்று குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5% உயர்த்துவதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதம் 0.5% உயர்வு:
கடந்த இரண்டு நாட்களாக இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை அந்த கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்தா தாஸ் வெளியிட்டுள்ளார். தற்போது பணவீக்கம் சுமார் 7% ஆக உள்ளது. இரண்டாம் அரையாண்டில் 6 சதவீதமாக பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர ரெப்போ வட்டி விகிதத்தை 4வது முறையாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா உயர்த்தியுள்ளது. RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்,
"பணவீக்கத்தை எதிர்த்துப் போராட முக்கிய மத்திய வங்கிகள் எடுத்த நடவடிக்கைகள் உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது உலகச் சந்தைகளில் மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. இது நாணயச் சந்தையில் அதிகப்படியான ஏற்ற இறக்கத்தை உருவாக்கியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் மட்டும் மே மாதம் 4.40 சதவீதம், ஜூன் மாதத்தில் 4.90 சதவீதம், ஆகஸ்ட் மாதத்தில் 5.40 சதவீதம் என 3 முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது செப்டம்பர் மாதத்திற்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவிதமாக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் தற்போது வரை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா 1.4 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விலைவாசி ஏற்றம்:
பணவீக்கத்தை எதிர்த்து போராடும் நோக்கத்துடன் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்திருந்தாலும், மிகவும் குறுகிய காலத்திலேயே தொடர்ச்சியாக வட்டி விகித உயர்ந்துவது பொருளாதார வளர்ச்சியில் எதிர்பாராத பாதிப்புக்களை உண்டாக்கக்கூடும்.
இதனால் மக்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதை குறைக்கக்கூடும் என்பதால், அது உற்பத்தி மற்றும் தேவையை பாதிக்கும். மேலும் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு விலைவாசி உயர வாய்ப்புள்ளது.
தேக்க நிலை:
இந்தியா நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் பணவீக்கத்தை சரி செய்யவில்லை என்றால் தேக்க நிலையை சந்திக்க நேரிடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதார வளர்ச்சி, அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கக்கூடும்.
கடன் செலவு அதிகரிக்கும்:
இந்தியாவில் ஏற்கனவே நிலவி வரும் மூலப்பொருள் தட்டுபாடு மற்றும் விலையேற்றம் காரணமாக கட்டுமான நிறுவனங்கள் கட்டிட விலையை கணிசமாக அதிரித்துள்ளன.
இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது வீடு, நிலம் போன்றவற்றின் மீது கடன் வாங்குவோரின் வட்டி விகிதத்தையும் அதிகரிக்க உள்ளது. இதனால் தனிநபரின் கடனுக்கான வட்டியோடு மாதத் தவணையும் உயரக்கூடும். இதனால் கட்டுமான நிறுவனங்களின் விற்பனை கடும் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது. RPS குழுமத்தின் பார்ட்னர் சுரேன் கோயல் கூறுகையில்,
"வங்கியில் இருந்து கடன் வாங்குவது விலை உயர்ந்ததாக மாறி, சந்தையில் முதலீடு மற்றும் பண விநியோகம் குறைகிறது. குறைந்த நிதிச் செலவுகள் காரணமாக விற்பனையில் நல்ல பிக் அப் கண்ட ரியல் எஸ்டேட் துறை, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு நடவடிக்கையால் மோசமாக பாதிக்கப்படலாம்," எனத் தெரிவித்துள்ளார்.
லோன் இஎம்ஐ:
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்காக வட்டி விகிதமும் உயருகிறது. வீட்டு கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ-க்கள் மீதான வட்டி விகிதம் மட்டுமின்றி தவணைத் தொகையும் அதிகரிக்கும். இதனால் புதிதாக வீடு வாங்க திட்டமிட்டவர்கள், அதிலிருந்து பின்வாங்குவதால் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்.
ரெப்போ வட்டி உயர்வால், வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன், வணிகக் கடன், கிரெடிட் கார்டுகள், அடமானங்கள் போன்ற அனைத்து வகையான கடன்களுக்கான வட்டியும் உயரவுள்ளது. கடன்கள் மீதான வட்டி விகிதம் அதிகரிப்பதால் மக்களின் வாங்கும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டு, உற்பத்தி, விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கக்கூடும்.
ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டி விகிதம்:
ரெப்போ வட்டி விகிதம் காரணமாக வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் அதே சமயத்தில், ஃபிக்சட் டெபாசிட், சிறு சேமிப்புத் திட்டங்கள், கடன் பத்திரங்கள் மீதான வட்டி விகிதங்களையும் அதிகரிக்கும். ஏற்கனவே பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்களது சேமிப்பு கணக்குகள், ஃபிக்சட் டெபாசிட்கள், பாண்ட் பத்திரங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது குறிப்பிட்டத்தக்கது.
தொகுப்பு - கனிமொழி
அதிகரிக்கும் கள்ளநோட்டுகள்; ஆர்பிஐ வருத்தம்: 102% வரை உயர்ந்த ரூ.500 கள்ளநோட்டுகள்!