யானை முதல் மனிதர் வரை உயிர்களைக் காப்பாறியவர்கள்: அண்ணா பதக்கங்கள் பெற்றவர்கள் யார்?
தமிழக அரசின் அண்ணா விருது வென்றவர்கள்!
குடியரசு தின விழாவான நேற்று தமிழக அரசின் சார்பில் அண்ணா விருதுகள் வழங்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
அவர்கள் யார்? என்ன செய்தார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும், வீர தீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள் / பொது மக்களுக்கு வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1,00,000/-க்கான (ரூபாய் ஒரு லட்சம்) காசோலையும், ரூ.9,000/ மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
கிணற்றில் விழுந்த யானையை சமயோசிதமாக மீட்ட மருத்துவர், விபத்தில் சிக்காமல் ரயிலை நிறுத்தி 1,500 பயணிகளைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர், பேரிடர் நேரத்தில் விபத்தில் சிக்கிய காவலரை மருத்துவமனைக்குக் கொண்டுசேர்த்த வாகன ஓட்டுநர் ஆகியோருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தருமபுரி வனக்கோட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லகுண்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 19ம் தேதியன்று, மாலை 4.30 மணியளவில் சுற்றுச் சுவர் இல்லாத, சுமார் 60 அடி ஆழமுள்ள, 5 அடி தண்ணீர் கொண்ட கான்கிரீட் கிணறு உள்ளது. இதில் 25 வயது மதிக்கத்தக்க ‘மக்னா’ யானை தவறி விழுந்தது.
தகவலறிந்து வனக் கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வெளியே மீட்டுக் கொண்டு வர முயற்சி செய்து, யானைக்கு மருத்துவரால் மயக்க மருந்து செலுத்தப்பட்டது.
மயக்க நிலையில் கிணற்றில் இருந்து யானையின் கால்கள் அதிவிரைவு மீட்புக் குழுவினரால் கயிறு கொண்டு கட்டப்பட்டு, மெதுவாகக் கிணற்றிலிருந்து மேலே கொண்டுவரப்பட்டது. அப்போது சுற்றியிருந்த பொதுமக்களைக் கண்டு, யானை மிரண்டு தாக்க முற்பட்டபோது, வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், தனது வெறும் கையாலேயே தனது உயிரையும் பொருட்படுத்தாது, உடனடியாக யானையின் அருகில் சென்று அதற்கு மீண்டும் மயக்க மருந்து செலுத்தினார்.
சுமார் 18 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்நிகழ்வின்போது வனக் கால்நடை உதவி மருத்துவர் மற்றும் குழுவினரின் செயலினால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் யானையின் உயிர் பாதுகாக்கப்பட்டது. ஆபத்திலிருந்த யானையை உயிருடன் காப்பாற்றியதற்காக, கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷுக்கு குடியரசு தின விழாவில் 2021-ம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
சுரேஷ் என்பவர் ரயில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 18.11.2020 அன்று மதுரை சென்னை-வைகை விரைவு வண்டியை மதுரையிலிருந்து ஓட்டிச் சென்றபோது கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையில் ரயில் தண்டவாளத்தில் நிலச்சரிவினால் மிகப்பெரிய இரண்டு பாறாங்கற்கள் கிடந்தன. அன்று மேகமூட்டம் காரணமாக ரயில் பாதை தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நிலையிலும் பாறாங்கற்களைப் பார்த்தவுடன் உடனடியாக அவசர பிரேக்கை (emergency brake) உபயோகப்படுத்தி மிகக் குறைந்த தூரத்தில் பாறாங்கற்களுக்கு முன்பாக வண்டியை நிறுத்திவிட்டார். இல்லையென்றால் ரயில் பெட்டிகள் விபத்தில் சிக்கி ரயிலில் பயணம் செய்த சுமார் 1,500 பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.
சுரேஷ் சமயோசிதமாகத் துணிச்சலுடன் செயல்பட்டு விபத்து ஏற்படாமல், ரயிலில் பயணம் செய்த சுமார் 1,500 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக அரசு அவருக்குக் குடியரசு தின விழாவில் 2021-ம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கியது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் தனியார் வாடகை வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார் ரா.புகழேந்திரன். பிரசவம், மருத்துவ அவசரம், பேரிடர்க் காலம் போன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளில் அழைக்கும்போது வாகனத்தை இயக்கி சரியான நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்த்து பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 04 அன்று நீலகிரி மாவட்டத்தில் மிக அதிக கனமழை மற்றும் சூறைக்காற்றினால் ஏற்பட்ட பேரிடரின்போது மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் ஆகியவை முறிந்து விழுந்திருந்தன.
இதன் காரணமாக ஆக.5 அன்று சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மஞ்சூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரியும் ஜெயராம் என்பவருக்கு முதுகு தண்டுவடத்திலும், வலது கை தோள் பட்டையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதன் பிறகு ஓட்டுநர் ரா.புகழேந்திரனை அழைத்த சிறிது நேரத்தில் தனக்குச் சொந்தமான வாகனத்தை எடுத்து வந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காவலர் ஜெயராமை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்பட்டு சரியான நேரத்தில் கோவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காகச் சேர்த்து காவலர் ஜெயராமின் உயிரை காப்பாற்றியதற்காக ரா புகழேந்திரனுக்குக்கு 2021-ம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த புலிவலம் அரசு உயர்நிலைப்பள்ளி, உதவி ஆசிரியர் முல்லை. இவர், கடந்தாண்டு ஜனவரி மாதம் , 26 மாணவ, மாணவியருடன், பள்ளி வளாகத்தில், நாடக ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பள்ளியை ஒட்டியிருந்த வீட்டிலிருந்து, காஸ் வாசனை வந்தது. இதை உணர்ந்த ஆசிரியை முல்லை, உடனடியாக மாணவ, மாணவியரை துாரமாக செல்ல வைத்தார். அவரும் செல்ல முயன்ற போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்தார். சமயோசிதமாக செயல்பட்டு, மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியை முல்லைக்கு, அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. 4 பேருக்கு இந்தாண்டு அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டன.