வருமானம், கல்வி, திறன் வளர்ச்சியில் கிராமப்புறப் பகுதிகளை மேம்படுத்தும் ஸ்ரீதர் வேம்புவின் Zoho நிறுவனம்!
எகானாமிக்ஸ் கன்சல்டிங் குழுமம் (ECG) நடத்திய ஆய்வு, தமிழகத்தின் தென்காசி பகுதியில் ஜோஹோ நிறுவனம் தனது அலுவலகத்தை அமைத்ததால் ஏற்பட்ட நல்லவிதமான தாக்கங்களை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விளைவு பற்றி ஜோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உரையாடுகிறார்.
கோவிட்-19 முன் எப்போதும் இல்லாத வகையில் எல்லைகளை உடைத்திருக்கிறது. இதற்கு மத்தியில், சென்னையை தலைமையகமாகக் கொண்ட சாஸ் ஜாம்பவனான Zoho, தனது கிராமப்புற செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது.
ஜோஹோ நிறுவனம், 2011ல் அப்போது புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் மத்தளம்பரை பகுதியில் தனது முதல் கிராமப்புற அலுவலகத்தைத் துவக்கியது. இன்று இந்த அலுவலகத்தில் 500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
கொரோனா பாதிப்புக்கு நடுவே மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் ஜோஹோ தனது கிராமப்புற செயல்பாடுகளை தீவிரமாக்கி வருகிறது. உலகம் முழுவதும், கிராமப்புறங்கள் மற்றும் நகரம் அல்லாத இடங்களில் நிறுவனம் 30 துணை அலுவலகங்களை அமைத்துள்ளது.
இந்தியாவில், இந்த அலுவலகம் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் இருந்தே பணியாற்ற விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டுகிறது. மென்பொருள் எங்கிருந்து வேண்டுமானாலும் உருவாக்கப்படலாம் என நம்பும் நிறுவனம் உலகம் முழுவதும் 100 புதிய அலுவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
சென்னையைச்சேர்ந்த எக்கானாமிக்ஸ் கன்சல்டிங் குழுமம் நடத்திய ஆய்வில்,
ஒட்டுமொத்த வருமானம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், கல்வி, திறன் வளர்ச்சி, சமூக மேம்பாடு என பல பிரிவுகளில் தென்காசி பகுதியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கிறது.
தென்காசி மாவட்ட அந்தஸ்து, ஜோஹோ ஊழியர்களுக்கான வீடுகள், நிறுவன ஊழியர்கள் விவசாயத்தில் செய்யும் முதலீடு, இயற்கை வேளாண்மை தொடர்பான விழிப்புணர்வை சாதகமான அம்சங்களாக உள்ளாட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தென்காசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் ஊழியர்கள் மீதான தாக்கத்தையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கிராமப்புற செயல்பாடுகள் தொடர்பான ஜோஹோ அனுபவத்தை யுவர்ஸ்டோரியுடனான உரையாடலில் ஜோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்து கொள்கிறார்.
யுவர்ஸ்டோரி: நீங்கள் தென்காசியை தேர்வு செய்தது ஏன்? இதனால் இங்குகள் மக்களுக்கு என்ன பலன்?
ஸ்ரீதர் வேம்பு: எங்கள் ஊழியர்களில் பெரும்பாலனோர் சென்னைக்கு வெளியே உள்ள நகரங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவதை உணர்ந்த போது துணை அலுவலகங்களுக்கான எண்ணம் உண்டானது. கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்தலை மாற்றி அமைக்க விரும்பினோம்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட அடிப்படை வசதிகள் கொண்ட ஒரு நகரை தேர்வு செய்ய விரும்பினோம். தென்காசி அருமையான நகரமாக அமைந்தது.
நகரில் சிறிய அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து, சென்னையில் இருந்து ஆறு ஊழியர்களை அனுப்பி வைத்தோம். அதன் பிறகு, தென்காசி அருகே மாதளம் பாறை பகுதியில் பழைய ஆலை ஒன்றை வாங்கி, அலுவலகமாக மாற்றினோம். இப்போது 500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஜோஹோ பள்ளியையும் துவக்கினோம். கடந்த 10 ஆண்டுகளாக இதனால் ஏற்பட்டுள்ள நல்ல தாக்கத்தை இ.சி.ஜி ஆய்வு உணர்த்துகிறது. ஒட்டுமொத்த வருமானம் உயர்வு, பெண்களுக்கான அதிகாரமளித்தல், சமூக பொருளாதார வளர்ச்சி ஆகியவை இதில் அடங்கும்.
யுவர்ஸ்டோரி: தென்காசியில் இருந்து வேறு கிராமங்களுக்கும் சென்றியிருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் மற்றும் பயிற்சி முறை பற்றி சொல்ல முடியுமா?
ஸ்ரீதர் வேம்பு: பல்வேறு இடங்களில் தென்காசி மாதிரியை பின்பற்றி வருகிறோம். புதிய அலுவலகம் துவக்கும் போது, அனுபவம் உள்ள ஊழியர்களை வழிகாட்ட அனுப்பி வைக்கிறோம். அவர்கள் உள்ளூர் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். கடந்த ஆண்டில் இது போல 20 அலுவலகங்களை அமைத்திருக்கிறோம்.
இப்போது பெருந்தொற்று காரணமாக, இந்த அலுவலகங்கள் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நிலைமை மேம்பட்டதும் இவை மீண்டும் செயல்படத்துவங்கும். கிராமப்புற திறமையை ஊக்குவிக்க ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை அளிக்கிறோம்.
நடைமுறை பலன் சார்ந்த பயிற்சி அளிக்கிறோம். முன் அனுபவம் தேவை எனச் சொல்வதில்லை. கற்றலுக்கான ஆர்வம் இருந்தால் போதும். பயிற்சி முடிந்த பிறகு ஜோஹோவில் வேலைவாய்ப்பு அளிக்கிறோம்.
யுவர்ஸ்டோரி: இந்த முயற்சிகள் ஜோஹோ வர்த்தகத்திற்கு எப்படி உதவுகிறது?
ஸ்ரீதர் வேம்பு: இதன் மூலம் பரவலாக திறமைகளை ஈர்க்க முடிகிறது. வழக்கமான முறையில் கண்டுகொள்ளப்படாதவகளை அடையாளம் காண முடிகிறது. மிகவும், விசுவாசமான, திறமையான ஊழியர்களைக் கொண்டிருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இத்தகைய முயற்சி முலம் ஒரு நிறுவனம் உருவாக்கி இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து இது. நாங்கள் செயல்படும் சமூகத்தில் எங்கள் பயிற்சி மற்றும் திறன் வளர்ச்சி நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
யுவர்ஸ்டோரி: இதன் மூலம் நிறுவனங்கள் சமூக- பொருளாதார நோக்கில் எப்படி பலன் பெறுகின்றன?
ஸ்ரீதர் வேம்பு: இந்தியாவில் உள்ள யதார்தத்தை கொண்டு பார்க்கும் போது, தனியார் நிறுவனங்கள் திறன் வளர்ச்சி மேம்படுத்துவதில் பங்கேற்க வேண்டும். உதாரணமாக, தென்காசி போன்ற பகுதி, ஆண்டுக்கு 1,500 டாலர் தனிநபர் வருமானம் கொண்டுள்ளது. ஒரு ஊழியர் ஆண்டுக்கு 3,000 டாலர் அளவு உற்பத்தி செய்கிறார்.
திறன் வளர்ச்சியில் முதலீடு செய்வதன் மூலம், ஆண்டு உற்பத்தியை 10,00 டாலர் முதல் 20,000 டாலர் வரை அதிகரிக்கலாம். இதன் பயனாக ஊழியர்கள் ஊதியம் மற்றும் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த முடியும். இந்த வளர்ச்சியின் பலன் அபிரிதமானது.
யுவர்ஸ்டோரி: உங்கள் எதிர்காலத் திட்டங்கள்?
ஸ்ரீதர் வேம்பு: கடந்த ஆண்டு முதல், 20 கிராமப்புற அலுவகங்களைத் துவக்கியுள்ளோம். 20 முதல் 30 இருக்கைகள் கொண்ட இந்த அலுவலகங்களை 100 இருக்கைகள் கொண்டதாக மாற்றலாம். இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் மேலும் அலுவலகங்களை திறக்க உள்ளோம். எனினும் கொரோனா இரண்டால் அலையால் நிறுத்தி வைத்திருக்கிறோம்.
உலகில் வாய்ப்புக்காக காத்திருக்கும் திறமைகள் நிறைய இருக்கின்றன. நகர்புற வேலைவாய்ப்புகள் கிராமப்புற இளைஞர்களை இடம்பெறச்செய்கின்றன இவர்களை கிராமங்களில் தங்கி இருக்க ஜோஹோ உதவுகிறது.
இதன் காரணமாக உள்ளூர் சமூகத்தில் நல்ல பலன் மற்றும் வளர்ச்சி ஏற்படுவதை பார்க்கலாம். இந்த நீண்டகால பலனை இ.சி.ஜி ஆய்வு படம் பிடித்துக்காட்டுகிறது.
இப்போதைக்கு மக்கள் பாதுகாப்பாக இருப்பதில் கவனம் செலுத்துகிறோம். காலப்போக்கில் கிராமப்புறங்களில் இருந்து கணிசமான ஊழியர்களை எதிர்பார்க்கிறோம். இவர்கள் தங்கள் சமூகத்தில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுவார்கள்.
ஆங்கில கட்டுரையாளார்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்