RRR திரைப்பட 'நாட்டு நாட்டு...' பாடலுக்கு ‘கோல்டன் குளோப் விருது’ - மகிழ்ச்சியில் இந்திய திரைத்துறை!
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல், சர்வதேச அளவில் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
ஆஸ்கர் விருதுகளுக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் திரைத்துறைக் கலைஞர்களின் பெரும் கனவாக இருக்கும் விருது ’கோல்டன் குளோப் விருது’ ஆகும். ஹாலிவுட் பாரீன் பிரஸ் அசோசியேசன்ஸ் (Hollywood foreign press association) வழங்கும் இந்த விருதுகள், ஆஸ்கர் விருது விழாவுக்கு முன் நடக்கும் முக்கிய விருது விழாவாகக் கருதப்படுகிறது.
இந்த விழாவில் ஆங்கிலப் படங்கள் மட்டுமின்றி, ஆங்கிலம் அல்லாத படங்களுக்கும் சில பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த விருதுகளைப் பெறுவதற்கு உலகம் முழுவதிலும் இருந்து, பல நாடுகள் தங்கள் நாட்டில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களைப் பரிந்துரை செய்யும்.
அதன்படி, கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான சிறந்த நடிகர், நடிகை, ஆங்கிலம் அல்லாத படம் உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட 5 படங்களில் ராஜமௌலி இயக்கிய ஆர் ’ஆர் ஆர் ஆர்’ (RRR) படமும் இடம் பெற்றிருந்தது.
இதில், நாட்டு நாட்டு... பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் மற்றும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என இரு பிரிவுகளில் கோல்டன் குளோப்ஸ் விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. இது அப்பட ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சி அடைய வைத்தது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு பெற்ற ஆர் ஆர் ஆர் படம் நிச்சயம் இந்த விருதையும் தட்டிச் செல்லும் என ரசிகர்கள் அப்போதே ஆருடம் போல் கூறி வந்தனர்.
அவர்களது நம்பிக்கையை உண்மையாக்குவது போல், தற்போது ஒரிஜினல் பாடல் பிரிவில் RRR படத்தின்'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
கோல்டன் குளோப் விருது பெற்ற RRR
இந்தாண்டிற்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இன்று காலை பெவர்லி ஹில்டனில் நடைபெற்ற விழாவில்,
ஆர் ஆர் ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டது. விருதினை அப்பட இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார். இந்த விருது விழாவில், ஆர் ஆர் ஆர் பட இயக்குநர் ராஜமௌலி மற்றும் அப்பட நாயகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விருது அறிவிக்கப்பட்டதும், ஆர் ஆர் ஆர் படக்குழுவினர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இதனை அப்படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் ரசிகர்களிடன் ஷேர் செய்துள்ளது.
இந்த வீடியோவை சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர். கூடவே தங்களது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் ஆர் ஆர் ஆர் படக்குழுவிற்கு அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஏராளமான திரைக்கலைஞர்களும் RRR படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நன்றி.. நன்றி.. நன்றி..!
“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இங்கு அமர்ந்துள்ள என் மனைவி உடன் இந்த உற்சாகத்தை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி மேடையில் தெரிவித்தார்.
’பொதுவாக விருதுகளை பெறும்போது, இந்த விருது எனக்கு உரியது அல்ல என்று சொல்வதுதான் வழக்கம். நானும் அதைத்தான் சொல்லப்போகிறேன். இந்த விருது எனது சகோதரரும் இயக்குநருமான ராஜமௌலிக்கு உரியது. என் உழைப்பின் மீது அவர் வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நன்றி.
இந்தப் பாடலை திரையில் கொண்டு வர உதவிய கலை இயக்குநர், பாடலாசிரியர், நடன இயக்குநர் மற்றும் பாடலுக்கு தங்களது உத்வேகமான நடனத்தால் உயிரூட்டிய நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கும் நன்றி,’ என கோல்டன் குளோப் விருது பெற்ற மேடையில் நன்றி தெரிவித்துள்ளார் இப்பட இசையமைப்பாளர் கீரவாணி.
இதேபோல், விருது கிடைத்தது குறித்து இயக்குனர் ராஜமௌலி கூறுகையில்,
“முதலில் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சந்தோசத்தில் என் இதயம் துள்ளிக் குதித்தது. இந்தியர்கள் இந்தப் பாட்டை ரசிப்பார்கள் என முன்பே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அமெரிக்க ரசிகர்கள், தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து வந்து, இந்தப் பாடலுக்கு நடனம் ஆடுவார்கள் என நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நடந்தது. இதற்கு முன்பு வேறு எந்தப் படத்திற்கும் இப்படி நடந்ததாக நான் கேள்விப்படவில்லை,” என்றார்.
’இந்தப் பட அறிவிப்பு வெளியானபோதே மக்களிடம் படம் பற்றிய நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அப்போதே எதிர்காலத்தில் இந்தப் படம் என்ன மாதிரியான வெற்றிகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உருவாகி விட்டது,” என தன் மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக இந்த உயரிய விருதை ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் வேட்டை
மகதீரா, நான் ஈ, பாகுபாலி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்த திரைப்படம் ஆர் ஆர் ஆர். பாகுபலி போன்றே பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக கடந்தாண்டு மார்ச் மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம், இன்னும் உலகளவில் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூலிலும் சாதனை படைத்தது. தொடர்ந்து விருதுகளையும் குவித்து வரும் இப்படம், தற்போது நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருதையும் பெற்றுள்ளது.
இந்தியாவிலிருந்து ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ மற்றும் ஆலியா பட் நடித்த ’கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் ‘ஷெல்லோ ஷோ’ உள்ளிட்ட படங்களும் கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆர் ஆர் ஆர் மட்டுமே கோல்டன் குளோப் விருதுகளின் பட்டியலில் இடம் பிடித்து, தற்போது விருதையும் பெற்றுத் தந்துள்ளது.
அடுத்தது ஆஸ்கர்?
95வது ஆஸ்கர் விருது விழா, இந்தாண்டு மார்ச் 12ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 24 பிரிவுகளில் தரப்படும் விருதிற்காக, உலகம் முழுவதில் இருந்து பல மொழி திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அந்தப் பட்டியலில், இந்தியாவில் இருந்து ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படமும் ஒன்று.
சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த பாடல், சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொப்பாளர், சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை அமைப்பாளர், சிறந்த காட்சி அமைப்பு என சுமார் 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம் பெற்று உள்ளது. ஆஸ்கர் விருதுகளின் இறுதி பட்டியல் இம்மாதம் 24ம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மார்ச் 12ம் தேதி நடைபெறும் விழாவில் இறுதிப்பட்டியலில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான படங்கள் தேர்வு செய்யப்படும்.
கோல்டன் குளோப் விருதைப் போலவே, நாட்டு நாட்டு பாடல் இந்தியாவிற்கு ஆஸ்கர் கௌரவத்தையும் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
68வது தேசிய திரைப்பட பட்டியலில் 5 விருதுகளை அள்ளிய சூர்யாவின் ‘சூரரைப் போற்று’