2 ரூபாயில் ஊட்டச்சத்து குறைபாடு பரிசோதனை: இந்திய சிறுவன் கண்டுபிடித்த காகிதக் கருவி...
உலகநாடுகள் சந்திக்கும் பெரும் சவால்களுள் ஒன்று ஊட்டச்சத்து குறைப்பாடு. அதனை கண்டறிய ஒரு சிறு காகிதத்துண்டே போதுமானது என்றால் எத்தனை வியப்பாகவுள்ளது! அதையும் 17 வயது இந்திய சிறுவன் சாத்தியமாக்கியுள்ளார்... ஆம் அதற்காக நாட்டின் உயரிய விருதினையும் பெற்றுள்ளார்.
இந்தியாவின் உயரிய விருதான பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கார் விருதுகள் இவ்வாண்டின் முதல் மாதத்தில் வழங்கப்பட்டன. விருதை பெற்று பெருமையை தேடிச் சேர்த்தனர் 26 எதிர்கால நட்சத்திரங்கள். முகமது சுஹைல் சின்யா சாலீம் பாஷா, இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றவர்களில் ஒருவர்.
ஒரே இரவில், மாண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கப்பட்னாவைச் சேர்ந்த இந்த 17 வயது ஆராய்ச்சியாளரின் புகழ் புதிய உயரங்களை எட்டியது. அதன் பிறகு, புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தார். எல்லோரும் இப்போது அவரை ஒரு விஞ்ஞானி என்று அழைக்கிறார்கள், அவர்கள் எப்படி அழைக்காமல் இருப்பார்கள்?
உட்கொள்ளும் உணவில் புரதத்தின் அளவு பற்றாக்குறையால் எழும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டினை துண்டு காகிதத்தை பயன்படுத்தி கண்டறியும் முறையை கண்டுபிடித்துள்ளார் சுஹைல். அதுவும் வெறும் 2ரூபாய் செலவில்!
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்னாவில் பிறந்து வளர்ந்த சுஹைலின் மனதிற்கினிய பொழுதுபோக்கு என்றால் அது புத்தகவாசிப்பு. சிறு வயதிலிருந்தே பெற்றோர்களது வழிகாட்டுதலால் புத்தகவாசிப்பை தொடங்கிய அவருக்கு ஒரு நாளுக்கு ஒரு புத்தகம் என்பது கணக்கு.
மற்ற சிறுவர்கள் போலின்றி சுஹைல், யோகா, பாடல், எழுதுதல், கராத்தே, சதுரங்கம், போன்றவற்றில் ஆர்வம் காட்டியுள்ளார். சுஹைலின் குடும்பம் மங்களூருவில் குடியேறி பிறகு, அவருக்கு படிக்கும் யாவற்றையும் பிராக்டிலாக செய்து பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவால், ஒரு விஷயத்தை பற்றி முழுமையாய் அறிந்து கொள்ளும் வரை அது குறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்துள்ளார்.
மகனின் ஆர்வத்தை அறிந்த அவரது பெற்றோர் சுஹைலுக்கு இணைய இணைப்புடன் ஒரு மடிக்கணினியை வாங்கிக் கொடுத்துள்ளனர். இப்போது அவருக்குத் தெரிந்த பெரும்பாலான விஷயங்களை இணையமே அவருக்குக் கற்பித்ததாக கூறுகிறார். இக்கண்டுபிடிப்புக்கான தேடலில் இறங்கியதற்குபின் ஒரு சுவாரஸ்ய கதை உள்ளது என்றுக் கூறி அதனை பகிரத் தொட ங்கினார் அவர்.
“2017ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஒரு நாள் டாக்டர் மனு பிராகாஷ்ஷின் வீடியோ ஒன்றை பார்த்தேன். அதற்கு பிறகு தான் இவை அனைத்தும் தொடங்கியது. அவர் அமெரிக்காவின் ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைகழகத்தில் பயோஇன்ஜீனியரிங் பேராசிரியராக பணியாற்றுகிறார். மூன்று நிமிடங்களுக்குள் மலேரியாவைக் கண்டறியக்கூடிய காகிதத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் நுண்ணோக்கியை உருவாக்கியவர் அவர். வீடியோவின் முடிவில், நோய் தாக்கலை கண்டறிய சிரிஞ்சில் ரத்தத்தை எடுத்து நாம் இப்போது பயன்படுத்தும் சிக்கலான முறைகள் எதிர்காலத்தில் இருக்காது. மாறாக ரத்தத்நோயறிதலின் எதிர்காலம் காகிதம் அல்லது ஆக்கிரமிப்பு இல்லாத கருவிகளாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தேன்.
”அவருடைய அந்த கண்டுபிடிப்பு, காகிதத்தை பயன்படுத்தி ஊட்டசத்து குறைப்பாட்டை கண்டறியும் முறையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலை எனக்குக் கொடுத்தது. எத்தனை குழந்தைகள் ஊட்டசத்து குறைப்பாட்டால் இறந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள பல ஆய்வு கட்டுரைகளை படித்தேன். இந்தியாவில் லட்சக்கணக்கானோரும், உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் ஊட்டசத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்றார் சுஹேல்.
சுஹைல் அவரது ஆராய்ச்சியின் போது, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்பதை கண்டறிந்துள்ளார். “புரதத்தின் அளவுகள் வேறுபட்டவை. எனவே, புரதச்சத்தை அதிகரிக்க பரிந்துரைக்க வேண்டிய உணவு வகை ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். இந்திய அரசும் மற்றும் வளரும் நாடுகளில் உள்ள உலக சுகாதார அமைப்புகளும், இந்த பிரச்சினையை சமாளிக்க பல்வேறு உத்திகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி முயற்சி செய்கின்றன.
”ஆனால் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தரமான உணவை அரசாங்கம் பரிந்துரைக்கிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் இது போன்று உணவுமுறை, அதிக ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தையை விரைவாக குணமடையச் செய்ய துணைப்புரியாது. குழந்தைகளின் புரத அளவிற்கு ஏற்ப உணவு மாறுபட வேண்டும்.” என்று அவர் விளக்குகிறார்.
இதனால், ஒவ்வொரு குழந்தையின் ரத்தத்தில் உள்ள புரதத்தின் அளவைக் கணிக்கக்கூடிய ஒரு முறையையை கண்டறிய சுஹைல் முனைப்பு காட்டியுள்ளார். அதுப்பற்றி அவர் கூறுகையில்,
'‘இன்றுவரை, ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிவதற்கான ஒரே வழி ரத்த பரிசோதனையாகும். இந்தியா போன்ற ஒரு நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவ கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாததால், சுற்றுச்சூழல் தீங்குக்கு வழிவகுக்கிறது. ஆனால் நான் பரிசோதனை செய்ய ஒரு காகிதத்தைப் பயன்படுத்துகிறேன். ஒரு குழந்தையின் உமிழ்நீரை காகிதத்தில் எடுக்க வேண்டும். காகிதத்தின் நிறம் மாறினால், அது புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததற்கான அறிகுறியாகும். இதற்காக,
‘நான் ஒரு மொபைல் பயன்பாட்டையும் உருவாக்கியுள்ளேன். இந்த காகிதத்தை ஸ்கேன் செய்து புரதத்தின் சதவிகிதம் அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவை தெரிந்துகொள்ளலாம். அதைவிட இம்முறை சோதனை மேற்கொள்ள ரூ2 செலவும், இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும். இது செலவு அடிப்படையில் நன்மை அளிப்பதுடன், உயிரியல் மருத்துவ கழிவுகளையும் ஏற்படுத்தாது” என்றார்.
ஆனால் சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் ஒன்றை சுஹைல் கண்டுபிடிப்பது இது முதல் முறை அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே, 40*40 செ.மீ அளவிலான டைல்ஸ் ஒன்றை வடிவமைத்தார். நடைபாதைகள் போன்ற பொது இடங்களில் அந்த டைல்சை பொருத்திவிட்டால், மக்கள் அதன் மேல் நடந்தால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
தெரு விளக்குகள் அல்லது பிற பொது பயன்பாடுகளுக்கு இந்த மின்சாரத்தை பயன்படுத்தப்படலாம். இதற்கு அவர் ‘நடைபயிற்சி மூலம் மின்சாரத்தை உருவாக்குவோம்’ என்று பெயரிட்டுள்ளார். அக்கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டு 50 விருதுகளையும் வென்றுள்ளது.
பல விருதுகளை வென்ற போதிலும், புகழ் சுஹைலின் தலைக்குச் செல்லவில்லை. அதற்கு பதிலாக, அவர் புதிய திட்டங்களில் கவனம் செலுத்தி தொடர்ந்து உழைத்து வருகிறார். ஏற்கனவே, அவர் அடுத்த திட்டத்திற்காக வேலையை தொடங்கிவிட்டார்.
“டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளின் விவரங்களைத் தெரிவிக்காமலே ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்ய உதவும் ஒரு முறையை கண்டுபிடிக்க முயன்று வருகிறேன். ‘பின் நம்பர்’ மற்றும் கிரெடிட்/ டெபிட் கார்டின் விவரங்களைப் பாதுகாத்தல், ஒன் டைம் கடவுச்சொல் திருட்டு மற்றும் அட்டை ஹேக்கிங் ஆகியவற்றைத் தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். விரைவில் அதைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன்,” என்று கூறினார்.
தகவல் உதவி :edexlive.com படஉதவி: daijiworld.com